Saturday, January 27, 2024

TAKING GRIP OF LEARNING

 TAKING GRIP OF LEARNING

பயிலுவதை பற்றிக்கொள்ள

 

மீண்டும் கல்விக்கும் கற்பவருக்கும் இடைவெளி எந்த அளவுக்கு குறையுமோ அல்லது குறைக்க முடியுமோ அது தான் சரியான வழிமுறை --பயிலுதல் என்ற செயலை நாம் பற்றிக்கொள்ள.. இதில் சில பிழையான புரிதல்களை விலக்கி வைத்தல் நலம் பயக்கும்.

சில பிழையான புரிதல்கள்

1 புத்தகத்தை படிப்பது கல்விபயிலுதல் என்ற எண்ணம்.

புத்தகம் படித்தல் ஒரு செயல் [புறத்தோற்றத்தில் கற்பதாக தோற்றமளிக்கும்] ஆனால் அதுவே முறையா எனில் -இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.. ஏனெனில் புத்தகம் கையிலே புத்தியோ --- என்ற ஒரு சினிமாப்பாடல் இந்தபிம்பத்தை எளிதாக விளக்குகிறது.

ஆம் ஒரு செயலில் மனம் லயிக்காமல் அந்த முயற்சியின் பலன் நம்மை வந்து அடையாது.. கல்வியின் பயன் என்பது என்ன? சொல்லப்பட்ட கருத்தை/ தகவலை நம்மால் பிழையோ குழப்பமோ இல்லாமல் பிறர்க்கு விளக்க தேவையான தெளிவைப்பெறுதல் என்ற நிலையை அடைய வேண்டும். அதுவே கற்றலை கற்கும் முறை .

2 ஒரு பொருளை பாராமல் ஒப்பித்தல் பயின்றதன் அடையாளம் என்ற தவறான கணிப்பு

இது என்ன அடையாளம் ? தேர்வுகளில் சொல்மாறாமல் எழுத இதுவே உத்தி என்று பயில்வோரை மீளா நரகத்தில் மூழ்கடித்த சாபக்கேடு பாராமல் ஒப்பித்தல். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இந்த அணுகுமுறையை வெறுப்பதுடன் -"வாந்தி எடுப்பதற்கு சமம் இந்த செயல்" என்றே ஆதங்கம் கொள்வர் வாந்தி எடுத்தல் என்பது 'உள்ளே சென்றது வெளியே தள்ளப்படுகிறது' எனவும் , பல்வேறு பொருட்கள் குழம்பிய நிலையில் வெளிவருவது மற்றும் அது உடலில் ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்றும் உணர்வோம்.

கல்வியும்    இது போன்றே நம் மனதில் உள்வாங்கப்படாமல் பரீட்சை தாள்களில் கொடடி குவிக்கப்படுகிறது. . இந்த 'அப்படியே வாந்தி" வகை விடைகளுக்கு   மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டு உண்மை புறக்கணிக்கப்பட்டு விட்டது ;இந்த அவலம் ஒரு கட்டத்தில் அதாவது கல்லூரி /அல்லது தொழில் கல்வி முதல் நிலையில் சுக்குநூறாக நொறுங்கி எதுவும் புரியாமல், தெளிவும் இல்லாமல்  ஏராளமான சிறுவயதினர் தூக்குஅல்லது  தூக்க மாத்திரை என்று கோழைத்தனமான எல்லைக்கே போய்விடுகின்றனர். ஏன் எனில் , எவ்வாறு கற்பது என்ற அடிப்படையை கட்டமைக்காமல், முறையாக புரிந்துகொள்ளும் அளவிற்கு கற்பிக்காமல் தகுதிக்கு மீறிய மதிப்பெண்களை பாரி வள்ளல்கள் என வாரி வாரி வழங்கிய ஆசான்கள் ஆராதித்து அனுமதித்த தவறான அணுகுமுறை                     நம் வாழ்வையே புரட்டிப்போடுகிறதே -ஏன் சிந்திக்க மறுக்கிறோம். சமுதாயம் மார்க் என்ற மாயையில் சிக்கி மார்க் மார்க் என்று அலைந்து வாழ்வில்AG MARK என்று நினைத்து EGG MARK அடைந்தது தான் மிச்சம் ஒரு வினாடி சிந்தியுங்கள் -எந்த போட்டி தேர்விலும் ஆர்வமுடன் பங்கெடுக்க தயக்கம் ஏன்.? அங்கு வாந்தி எடுத்து நான் எவ்வளவு முழுங்கி வைத்திருக்கேன் என்று எவரையும் கவரவே முடியாது. அங்கு தேவை ஆகச்சிறந்த ஒற்றைச்சொல் விடை மட்டுமே. அந்த ஒற்றைச்சொல் ஜீரணித்து ஏற்றுக்கொண்டவனுக்கு சாத்தியம். நமக்கு ஜீரணிக்கும் பழக்கமோ வழியோ தெரியாதே. இப்போது புரிகிறதா மார்க் என்பது மாயாபஜார் மாயை என்று? 

3 அதிக மார்க் பெற்றவன் அறிவு மிக்கவன் , மார்க் குறைந்தவன் திறமை அற்றவன் என்ற சான்றில்லா வாதம் இதுவும் உண்மைக்கு புறம்பானது .

யோசியுங்கள் +2 தேர்வுகளில் அந்தப்பாடத்தில் 200/200  , இந்தப்படத்தில் 199/200 என்று மாய்ந்து மாய்ந்து டிவி களில் முகம் காட்டிய பலர் இப்போதும் 200/200 ,199/200 அந்தஸ்திலேயே தத்தம் துறைகளில் மிளிர்கின்றனரா அல்லது எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லையா? அவர்களில் பலர் பின்னாளில் மங்கி இருளில் மூழ்குவது ஏன்?  மார்க் குறைந்த திறமை அற்றவன் பின்னாளில் வெடித்து மேல்நோக்கிப்பாய்ந்து செயல் புரிவதில் சூரன் என்ற இடத்துக்கு முன்னேறி இப்போது முன்னிலை வகிக்கிறான் நீங்கள் பரீட்சார்த்தமாக விசாரித்துப்பாருங்கள் மார்க் மாயை வேறு செயல் படும் திறன் வேறு -பின்னது வாழ்க்கையில் அவசியம் .எனவே புரிந்துகொள்ளுதல் மிகமிக முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம் எனவே திறமை வேறு மார்க் பட்டியல் வேறு ; பின்னாளில் வெற்றி ஈட்டுவோர் மனப்பாட கோஷ்டியில் இணையாது ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டு இயங்கியவர்கள் .

செய்ய வேண்டியது என்ன?     அடுத்த  பதிவில்.

நன்றி

அன்பன்    ராமன்

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...