RENGA VENDAAM-9
ரெங்கா வேண்டாம்
-9
சென்ற பதிவில்
--
இப்போது கதை உங்கள் கையில்
யார் வேண்டுமானாலும் இந்த முடிச்சை அவிழ்க்கலாம் கதையில் சுவை இல்லை என்றவர்கள் இப்போது அறுசுவை அமுது படிக்கலாமே ;இதோ பார் எங்களது கற்பனை என்று சிறகடிக்கலாமே
சரி ஒரு சின்ன லீட் --வீட்டுக்குள் ரெங்கசாமிக்கு தர்மஅடி விழவேண்டியது தான் பாக்கி.
மேலே தொடர்க. என்று சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.
நான் நமது நண்பர்களை, தொடர்ந்து எவ்வாறு கதையை நகர்த்தலாம் என்று எடுத்து சொல்லுமாறு கேட்டிருந்தேன்.
மகோன்னத வெற்றி கிடைத்துள்ளது. போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான கருத்துகளை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு சரியான சம்மட்டி அடி .
அப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்க எங்களுக்கு வேலை இல்லையா என்ன. அதுவும் 7 ம் தேதி போர் ஒத்திகை வேறு, அன்று இரவே ஆந்தை உலவும் நேரத்தில் துல்லியத்தாக்குதல் வேறு . கதை எழுதும் நேரமா இது? டிரம்ப், புடின் ,
ஜெய்சங்கர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கி தலையைத்திருப்பி பார்க்கும் முன், நரசிம்ம ஜெயந்தி வந்து விட்டது அடுத்தநாளே சித்ராபௌர்ணமி வேறு, அழகரை தரிசிக்காமல் இது என்ன ஜென்மம் --அப்பப் பா புல்லரிக்கிறது. இத்துணை சீரிய மாந்தர்க்கு சீரியஸ் விஷயங்கள் பல இருக்க , அந்த ரெங்கசாமியும் அவ யாரு அவ -கோமதியும் தான், இப்ப கவலையா ?
இங்க அவனவன் ட்ரோணாச்சாரியாராக , போர் உத்திகளை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் போது , "ரெங்கா வேண்டாம்
" என்று எதையோ யோசிக்கச்சொல்கிறாயே , உன்னைப்போல எங்களுக்கு என்ன வேலை வெட்டி இல்லையா?
ரெங்கா வேண்டாம் என்ன எதுவுமே வேண்டாம் போ என்று மௌன மொழியில் தெரிவித்துள்ளீர்கள். . இது போன்ற அனுபவம் எனக்கு நிறையவே உண்டு. ஆகவே மௌனத்தின் உள்ளார்ந்த பொருளை என்னால் உணர முடியும். . எதையும் கை வைக்கவோ , கை விடவோ என்னால் இயலும். எனினும் கதை எப்படி இருந்தது என்று கேட்டால் , எதையாவது சொல்லி சமாளிப்பர்; மாறாக கதையின் போக்கிற்கு ஏதேனும் கருத்து கேட்டால் , கள யதார்த்தம் புலனாகும்.
கள யதார்த்தம்
வாசகர்களின் ஏகோபித்த முடிவின் படி
"ரெங்கா வேண்டாம் என்ன-- எதுவுமே வேண்டாம் போ" என்ற மௌன மொழியை
முழுமனதாக ஏற்று எதுவுமே வேண்டாம் போ என்ற உணர்வுக்கு செவி சாய்த்து இனிமேல் கதை என்பது பழைய கதை என்பதே எனது நிலைப்பாடு . நன்றி
அன்பன் ராமன்