Tuesday, November 1, 2022

பெரும் மனங்கள் /ஆளுமைகள்—2

 பெரும் மனங்கள் /ஆளுமைகள்—2

சென்ற பகுதியில் நெஞ்சிருக்கும் வரை தொடர்பான சில நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தேன் .ஆனால் இந்த அசுரப்படை கை கோர்த்ததென்னவோ 1961-62 இல் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்திற்காக.

சொல்லப்போனால் ஸ்ரீதர்- கண்ணதாசன் நெடு நாளைய நண்பர்கள். அதே போல கண்ணதாசன் -விஸ்வநாதன் இருவரும் நீண்ட கால நண்பர்கள் .இதில் புதிய இணை ஸ்ரீதர்-விஸ்வநாதன் இருவரே. அந்தக்கால வழக்கம் சினிமா கம்பெனிகளில் தான் பாடல் எழுதுவதும், இசை அமைப்பதும . எனவே கதாசிரியர்,  பாடலாசிரியர், இயக்குனர், இசை அமைப்பாளர் அனைவரும் ஓரிடத்தில் கூடி விவாதித்து, சிறப்பான ஆக்கங்களை வடிவமைத்தனர்.

ஒளிந்து மறைந்து இசை அமைப்பது அன்றைய அரிச்சுவடியில் இல்லை; அதிலும் விசு  பலர் முன்னிலையில் தான்  டியூன் மற்றும் இசைக்கோர்வைகளை அடுக்குவார். அவ்வாறு செய்யும் போது பிறர் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை எளிதாக உணர்வார். தேவைப்பட்டால் உடனே டியூனை மாற்றுவதற்கு தயங்க மாட்டார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் பாடல்கள் உணர்ச்சிப்பிழம்பானவை.

இவ்விடத்தில் எம் எஸ் வியை அவரின் தொழில் ரீதியாக புரிய வைப்பது எனது கடமையாகிறது..

அவரின் பாடல்களின் வெற்றிக்கும், அவரின் நீண்ட இசைப்பயணத்திற்கும் அடிப்படையாக அமைந்த தளமே, பிறரின் உணர்வுகளுக்கு [குறிப்பாக தயாரிப்பாளர்/ இயக்குனர்,/கதாசிரியர் விருப்பங்களுக்கு ] ஈடு கொடுத்து தேவையான மாற்றங்களை முறையாக செய்து கொடுக்கும் பண்பினால் தான் என்பதை திரை உலக ஜாம்பவான்கள் பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சமகாலத்திய துருவ நட்சத்திரங்களின் போரில் [சிவாஜி,எம்ஜிஆர்]  சிக்கிக்கொள்ளாமல் அவரவர் தேவைக்கு இசை வழங்கி , இன்றியமையாத இடத்தை 1956-57 களில் ட்டியவர்.

ஸ்ரீதருக்கு ஈடு கொடுப்பது எளிதல்ல என்பது ஸ்ரீதரை நன்கறிந்த அனைவருக்கும் தெரியும் ஆயினும் மிகத்திறம்பட, எம் எஸ் வி, ஸ்ரீதரை லாவகமாகக்கையாண்டார் என்பது அடியேனின் ஆணித்தரமான தீர்மானம்.

நெஞ்சில் ஓர் ஆலயம் உண்மையாகவே ஒரு ஆலயமாக உயர்ந்தது எனில் , பாடல்கள், அவற்றின் ஆழம் , இசையின் துல்யம் மற்றும் சோகத்தை குழைத்த இசை , அற்புதமான மிகை இல்லா  நடிப்பு , தொய்வில்லா இயக்கம் இவையே அடிப்படை காரணிகள் என்று அறுதியிட்டு க்கூறலாம்.

ஸ்ரீதர் என்ற மனிதனின் கற்பனையில் உதித்த காவியங்கள் அனைத்திலுமே காதல் மனங்கள் தான் அடித்தளம் ஆனால் காதலர்களின் [தன்] மானமே ஆணித்தரம் என்பதை விட்டுக்கொடுக்காமல் கதைகளை அரங்கேற்றும் வல்லமை தான் ஸ்ரீதரின் தனிச்சிறப்பு.

நெஞ்சில் ஓர் ஆலயம், திரைப்படம், ஒரு ஆலயமாக நெடிது உயர்ந்தது கூட தன்மான உணர்ச்சியின் உன்னதத்தை காட்சிப்படுத்திய நேர்த்தியினால் என்பதே அடியேனின் சிந்தனை.

1 கொடுத்த வாக் கைக்காக்கும் உயர் பண்பாளன் -டாக்டர்

பெற்ற தாயின் தொடரழுத்தங்களுக்கு தன்னை மாற்றிக்கொள்ளாமல் இறுதி  வரை காதல் எண்ணங்களோடு வாழ்ந்த உத்தமன்

2 சூழ்நிலைக்கைதியாக திருமண பந்தத்தில் சிக்கிய காதலி -இப்போது மனம் சஞ்சலம் கொள்ளாத இல்லத்தரசி யாக உயர்ந்த குணக்குன்று

3. மீண்டும் தன் காதலியை வேறொருவர் மனைவியாகக்கண்ணுற்ற போதும், அவள் குறித்த மதிப்பீடுகளை சற்றும் மாற்றிக்கொள்ளாத உன்னத ஆண்                    பா த்திரமாக மாஜி காதலன் டாக்டர் -இக்கட்டான பொறுப்பின் சுமையில்

4 தனது நோயின் தீவிரம் மனைவியை கைம்பெண்ணாக்கி விடுமோ என்ற கையறு நிலையில் மனைவியை டாக்டரையே மறுமணம் புரிய வேண்டுகோள் வைக்கும் திறந்த மனம் கொண்ட கணவன்

5 விடுபட்ட காதலை மீண்டும் புதுப்பிக்க விருப்பம் இல்லை என்பதில் விடாப்பிடியாக நிற்கும் பெண் [முன்னாள்  காதலி]

இத்துணை வலிமையான பெருமைகள் கொண்ட மனித மனங்களின்குறுக்கு நெடுக்கில் பாயும் மென்மையான மன இயக்கமே நெஞ்சில் ஓர் ஆலயம்..

மிகக்குறைந்த வசனங்களும், அதிகமான விசனங்களும் கைகோர்த்த கதைப்போக்கிற்கு வலிமை சேர்த்தவை பாடல்களே. எல்லாப்பாடல்களுமே ஆழம் பொருந்திய மனப்போராட்டங்களே, எனினும் பெண் மனப்போராட்டம் மேலோங்கி நின்ற களங்கள் -"சொன்னது நீ தானா " மற்றும் "என்ன நினைத்து என்னை அழைத்தாயோ".  இரண்டும் பி. சுசீலா வழங்கிய 60 களின் மாஸ்டர் பீஸ். உணர்ச்சிக்குவியல் என்றால் என்ன என்பதன் விளக்கம் இவ்விரு பாடல்களுமே எனலாம். அதாவது சொல்லாட்சியில், குரலின் ஏக்கத்தில் மற்றும் தாக்கத்தில்;:இவ்விரண்டையும் உயிர்த்துடிப்புடன் ஊனை உருக்கும் ஆழ்ந்த இசையின் மேன்மையால் தமிழ்த்திரை இசையின்  மகோன்னதத்தை மேம்படச்செய்த ,விஸ்வநாதன் மற்றும் துருவித்துருவி அலைந்த வின்சென்ட்-சுந்தரம் கேமரா, சிறப்பான கோணங்களில் நடிப்பின் மாட்சியை வெளிக்கொணர்ந்த இயக்குனர் ஸ்ரீதரின் காலத்திற்கு முந்தைய   பார்வை,மற்றும் சிந்தனை  அனைத்தும் மரியாதைக்குரியன.                  மேலும் வளரும்                     பேரா . ராமன்


2 comments:

  1. நெஞ்சில்ஓர் ஆலயம் என் மனதைவிட்டு நீங்காத ஒரு படம்
    முதல்நாள் முதல்காட்சி கண்ட படம்
    எனக்குப்பிடித்த டைரக்டர். இவர்படங்களில் சித்தார் உபயோகம் அதிகம் காணலாம் .
    எனக்குப்பிடித்த பாட்டு
    சொன்னது நீதானா
    ஒவ்வொரு வரிகளும் படத்தோடு சம்பந்தப்பட்டது.
    தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
    தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை படலாமா
    இந்த மாதிரி வரிகள் கண்ணதாசனை தவிர வேறு யாருக்குத் தோன்றும்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. Nice article, prof, on NoA, a master piece movie from Sridhar MSV KD team !!

    ReplyDelete

I S MURUGESH -02

  Meesai again     I S MURUGESH -02 ஐ   எஸ் முருகேஷ்-02 திரு முருகேஷ் அவர்களின் பல திறமைகள் ஒரு புறம் இருக்க , சங்கர் - கணேஷ் , ...