Wednesday, December 11, 2024

LET US PERCEIVE THE SONG

 LET US PERCEIVE THE SONG

பாடலை உணர்வோம்  

இது எனது புதிய முயற்சி. இதை ஏன் எழுத முனைகிறேன் என்றால், நாம் அனைவரும் பாடல்களைக் கேட்கிறோம், நல்ல [பிரபலமான] பாடல்கள் நம்மை ஈர்த்து முணுமுணுக்க வைப்பன என்பதையும் நாம் அறிவோம். இதை நீ சொல்லி தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்போர் உளர் . ஆனால் இந்தப்பாடல் பிடிக்கும் அந்தப்பாடல் பிடிக்கும் என்று பட்டியல் போட முனைந்தால் கை , கால் விரல்கள் அனைத்தையும் தாண்டி இன்னும் பல பட்டியலில் இடம் கொள்ள காத்திருக்கும். அவ்வளவு பாடல்கள் அனைவரும் ரசித்து மகிழ்ந்து கொண்டாடியவை. இவ்வளவு இருந்தாலும் ஏதாவது ஒரு குறியீடாக தேர்ந்தெடுத்து இதற்கான 5 பாடல்கள் எவை என்றால் திணறுவோம். போய்யா இதுதான் எனக்கு வேலையா என்று பொங்குவோம். ஏனெனில் நமது ரசிப்பு என்பது வெறும் செவி அளவில் ஒலி ரம்மியங்களை முன்னிறுத்தி கட்டமைக்கப்பட்டது. அதனால் என்ன குறைந்துவிட்டது? என்று  கொந்தளிப்போம் . அதாவது பாடல் காதில் விழுந்தால் தான்  நாம் அதனுடன் பயணிக்கத்துவங்குவோம். இன்றேல் பாடலின் பெயரைக்கேட்ட மாத்திரத்தில், படம், கவிஞர், இசை அமைப்பாளர் பாடகர், பாடலின் வீச்சு என்று பேச ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதே கூட 2004-2005 ம் ஆண்டுகளுக்குப்பின்னர் வெளிஉலகிற்கே தெரியலாயிற்று.. அதுவரை இந்த பட்டாளம் இருந்த இடம் தெரியாமல் தனிமனித ஆளுமைகளாக [தீவுகளாகஎன்றும்] அமைதி காத்து உலவி வந்தனர் என்பது இப்போது நன்றாகவே புரிகிறது.. இதனால் ஒரு இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா வேறு பாதையில் பயணித்து, கிட்டத்தட்ட அதன் நீண்ட நெடிய பண்புகளை அடியோடு தொலைத்துவிட்டு வெறும் தாள அதிர்வுகள் மட்டுமே பாடல் என்ற வீழ்ச்சியை எட்டியது. அதோடு ஏதோ இசைக்கருவிகள் கூட்டமாக ஒலிப்பதே இசை என்று வேரூன்றியது. இதனால் கவிதையின் தேவையும் சிறப்பும் அநேகமாக முக்தி அடைந்தன; மாறாக பேச்சில் உலவும் வக்கிரங்கள் பாடலுக்குள்ளும் இடம் பெற, சொல் நயம் மறைந்து , அஜக் புஜக் ஜீஜக்   டஜக் என்று கும்பலாக கூவினால் அதற்கு குத்தாட்டம் அமைத்து, வயது வேறுபாடின்றி திரையில் குழவி முதல் கிழவி வரை உடலின் ஆடு தசைகளனைத்தும் குலுங்க ஆடுவதே படம் என்றாகி, , திரையரங்குகள் பெரும் பொருள் ஈட்டின. இதுபோன்ற ஒலிக்குவியல்கள் மேலோங்கி மெல்ல மெல்ல ஈர்ப்பை இழந்தது. எவ்வளவு காலம் தான் மந்தைகளின் ஆட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பது? இது இயற்கை வழங்கிய தண்டனை , ஏனெனில் பொருள் ஈட்டுவதே குறி என்றானபின் நிலையான நீடித்த மனித உணர்வுகளுக்கு திரையில் இடமோ வாய்ப்போ இல்லை. எனவே தான் நேயர் விருப்பம், உங்கள் விருப்பம், பொற்காலப்பாடல்கள் என்றெல்லாம் பெயரிட்டு பழைய பாடல்களை தேடித்தேடி  ஒளிபரப்பி பொருள் ஈட்டுவது தொலைக்காட்சிகளின் அணுகுமுறை. இது உணர்த்தும் பாடம் என்ன எனில் பொழுதுபோக்கு அம்சங்களே ஆயினும் மனித வாழ்வியலி ல் உள்ளார்ந்த உணவுகளை வெளிப்படுத்தும் .காட்சியோ/ பாடலோ ஆண்டுகள் கடந்தும் நிலைத்து வாழும் . சரி அப்படி என்னதான் இருக்கிறது பழைய பாடல்களில் என்று பிய்த்துப்பார்த்து உய்த்து உணர எத்தனிக்கும் முயற்சியே "பாடலை உணர்வோம்" . பாடலின் வெவ்வேறு தன்மைகைளை, நளினங்களை இசையின் பங்களிப்பை என்று பிரித்துப்பார்த்தால் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஏராளமான புதையல்கள் பொதிந்து கிடக்கக்காணலாம்    . .  படத்தில் பாடல் ஏன் ?

சரியான வகையில் பாடல் அமைந்தால் 3 1/2 நிமிடங்களில் கதையின் முக்கிய பகுதிகளை நடித்து விளக்குவதை விட பாடல் எளிதாக விளக்கும் .மேலும் வசீகரம் வசனம் முக பாவம் என்று தெளிவு படுத்த, சிறப்பாக காட்சியும், வசனமும் கை கொடுக்க வேண்டும்; பாடலின் இயற்கையான மன ஈர்ப்பு , வேறு வகைகளில் ஈடு செய்தல் எளிதல்ல. பாடலின் தாக்கம் எப்போதும் வலுவானது. இவற்றை அழகாக நிறைவேற்றும் பாடல்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டன . எனவே நாம் பின்னோக்கி பயணிக்கிறோம். எனினும் பாவம் என்ற உணர்ச்சியின் மொழியை எவ்வளவு தெளிவுபட வடிவமைத்துள்ளனர் பாடல்களில்?

இதோ ஒரு டைட்டில்பாடல் . அதை ஏன் இங்கே பேசுகிறோம்? நடிகர்கள் எவரும் டைட்டிலில் முகம் காட்டுவது இல்லை . ஆயினும் பாவம் கொப்பளிக்க ஒரு பாடல் பலரையும் பேசவைத்தது தான் "அன்பு மலர் ஆசை மலர்" என்ற 'பாச மலர் ' 1961 திரைப்படப்பாடல் அதையும் எம் எஸ் விஸ்வநாதன் பாடி பதிவேற்றியுள்ளார்.. பாடல் ஒரே  உணர்ச்சிப்ப்ரவாஹம். ஏராளமான ஏற்ற இறக்கங்கள். ஒவ்வொன்றும் உள்  மனதின் ஆழ உணர்வாக வெகு சிறப்பாகப்பாடியுள்ளார் . ஆம் கவிஞரும் இசை அமைப்பாளரும் "நீயா நானா" என சவால் விடுவது போல அமைந்தது. பாடலி ன் சிறப்பு

https://www.youtube.com/watch?v=P_eTy-vY13w anbu maslar msv

பாடலின் அனைத்து பண்புகளையும் அடுத்த பதிவில் விவாதிப்போம்

நன்றி அன்பன் ராமன்

2 comments:

  1. முன்னுரையில் தொடரின் நோக்கமும் விளக்கமும் பிரமாதம். தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete

I S MURUGESH -02

  Meesai again     I S MURUGESH -02 ஐ   எஸ் முருகேஷ்-02 திரு முருகேஷ் அவர்களின் பல திறமைகள் ஒரு புறம் இருக்க , சங்கர் - கணேஷ் , ...