Tuesday, May 13, 2025

LET US PERCEIVE THE SONG -22

 LET US PERCEIVE THE SONG -22

பாடலை உணர்வோம் -22

சந்திரோதயம் ஒரு [சந்திரோதயம் -1966] வாலி, விஸ்வநாதன் , குரல்கள் டி எம் எஸ், பி சுசீலா

அமைப்பில் இது ஒரு டூயட் வகைப்பாடல் ஆனால் , இது ஒரு வித்யாசமான அமைப்பும் கம்பீரமும் கொண்டது. முதலில் வந்தது முட்டையா கோழியா என்பதற்கு ஈடான கேள்வி, முதலில் வந்தது பாடலா ,ராகமா வகை இது.

இப்பாடலை இப்போது விவாதிக்க வேண்டிய தேவை என்ன? [அதுவும் பாடலுக்கு தொடர்புடைய அனைவரும் இவ்வுலகை விட்டு நீங்கி ஆண்டுகள் கடந்த பின்.] ஆண்டுகள் கடந்தாலும் பாடலின் இளமையும் ஈர்ப்பும் இன்றளவும் இம்மியும் குறைவின்றி கேட்போரை வசீகரிக்கும் விந்தை தான் என்ன என்று "பாடலை உணர்வோம்" பகுதிக்கு பொருத்தமான பாடலை எவ்வாறு மறக்க இயலும்?.

1 பிறந்த அன்றே வெற்றி முரசு கொட்டும் ஆக்கங்களில் இந்தப்பாடலும் ஒன்று. .   2 ஒரு பாடல் அதன் முதல் சொல்லை நாம் செவியினால் உணரும் முன்னரே -கவனயீர்ப்பு உத்தியை செம்மையாக களப்படுத்துகிற வகை சார்ந்தது என்றால் அது நிச்சயம் வெற்றிப்பாடல் தான் என்பது எழுதப்படாத விதி.

அப்படி ஓர் ஈர்ப்பு தான் இப்பாடலின் முகவரி.

துவக்க இசை [PRELUDE] அவ்வளவு வசீகரம் மிக்கது.       3 குரல் பொருத்தம் [TONAL MATCH] இன்னாரர்க்கு இன்னார் என்று பெருமிதம் கொள்ளத்தூண்டும் சாலப்பொருத்தம்.. 4 பாடலின் சுகமான பயணம் 5பாடலில் அமைந்த வாதப்பிரதிவாதங்கள் பயணிக்கும் நேர்த்தி,        6 இசைக்கருவிகளின் இயல்பான சங்கமம் .இவ்வனைத்தும் இப்பாடலின் மேன்மைக்கு உறுதியான துணைகள்.         சரி, பாடலின் உள்ளார்ந்த விளக்கங்களை கவனிப்போம்.

பாடலின் சிறப்பு

நீளம் எவ்வளவு என நாம் உணரமுடியாமல் நீண்டு நெளிந்து வளைந்து பயணிக்கும் ஜீவநதி போன்றது இப்பாடல். பலமுறை வந்து போகும் பல்லவி + 4 சரணங்கள் மற்றும் இடை இசை முன்னிசை பின்னிசை என வெவ்வேறு அங்கங்கள் இருப்பினும், நாம் மெய்  மறந்து லயித்து திளைக்கும் ட்யூனின் அமைப்பா? சொற்களின் அதீத தாக்கமா, இசையின் வசீகரமா ? என- விடைகாண இயலாத தொகுப்பே இப்பாடல் அதுவும் சுமார் 59 வயது நிறைவடைந்த பாடல். [என் காலத்து அரசுப்பணி எனில் 58 வயது நிறைந்ததும் பணி ஓய்வு] இப்பாடலுக்கோ ஓய்வில்லாப்பணி , தொய்வில்லாப்பயணம், இளமைகுன்றா யௌவனம்  என்று பிரமிப்பூட்டும் கலவை டி எம் எஸ் -சுசீலா குரல்களில்.

சொல்லின் அழகை மென்மை மற்றும் மேன்மை இரண்டினையும் கொண்டு வளப்படுத்திய உத்தியை எவ்வாறு விளக்குவது அல்லது விலக்குவது?  கடினம் தான்.

நமக்கே இவ்வளவு இடையூறுகள் தெரிந்தால், கவிஞனும் , இசை அமைப்பாளரும் குழுவினரும் எவ்வளவு ஆழ்ந்து உணர்ந்து புரிந்து செயலாற்றி இருப்பர், நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.

முகப்பு இசை தான் பாடலுக்கு நுழை வாயில் எனவே அதில் நிகழும் அழகும் அலங்காரமும் வரவேற்பாளர்கள். அவ்வகையில் இப்பாடல் மீ ட்டல் கருவிகள், சந்தூர் வயலின் ப்ளூட் , போங்கோ என விரைந்துமுன்னேறி பல்லவியை துவக்குகிறார் டி எம் எஸ்.

ஆண்: சந்த் ரோ.... தயம் ஒரு பெண்ணா.. னதோ ,                 செந்தா ...... மரை இரு கண்ணா ...னதோ

பொன்   ஓவியம் என்று பே.. ரா ..னதோ,                என் வாசல்  வழியாக வலம் வந்ததோ

பல்லவி[ஆண்: குரல்]

பெண்: [நேரடியாக சரணத்தில் பிரவேசிக்க }

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ கிளி வந்து கொத்தா த கனி யல்லவோ ,

நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ    நெஞ்சோடு   நீ சேர்த்த பொருளல்…லவோ

எந்---நாளும் பிரியாத உறவல்லவோ

பெண்  பகுதிக்கான பல்லவி இப்போது தான்  வருகிறது

பெண்: இளஞ்சூரியன் என்று பேரா னதோ  செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன் மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

மீண்டும் பெண் பல்லவி    இளஞ்சூரியன் .....

திடீரென்று பாடலில் இவ்விடத்தில் பெண் குரலில் ஒரு ஹம்மிங் வைத்துள்ளார் மெல்லிசை மன்னர் . அது ஏன்  மனம் குதூகலிக்க பாடிக்கொண்டிருக்கும் நாயகி தனது உணர்வின் உச்சத்தில் மிதப்பதாக உணர்த்தும் உத்தியே ஹம்மிங் .

அ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்று பெண் பாட இப்போது பெண்குரலுக்கு துணை வருகிறது போங்கோ.

[இது வரை பெண் குரல் தபலாவுடன் தான் பயணித்துள்ளது இப்பாடலில்].  அதில் ஒரு மறைமுக உணர்த்துதல் ஆம் இந்தப்பெண் இப்போது நாயகனின் மன நிலைக்கு ஈடான வேகத்தில் பயணிப்பதாக பொருள் கொள்ளலாம்

ஆகவே, ஒன்று தெளிவு படுகிறது. என்னவெனில், இப்பாடலிலும் மரபு சாரா நிலைப்பாட்டை செயல் படுத்தியுள்ளார் மெல்லிசை மன்னர். அது என்ன எனில் பல்லவியில் ஆண் துவங்கி தொடர்ந்து முதல் சரணம் [ஆண் பகுதி] நிறைவான பின்னரே பெண் தனது பல்லவியை துவக்குகிறார்.

ஆக- பாடல் கிட்டத்தட்ட, இரு அமைப்புககள் கொண்டதொகுப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தானா -இன்னும் இருக்கு கொஞ்சம் பொறுங்கள், தொடர்ந்து அலசுவோம்.

இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பாடலில், ஆண் பகுதிக்கான சரணம் இப்போது தான் துவங்குகிறது .

அனால் மிகவும் கம்பீரமான தொனி மற்றும் ஆளுமையுடன் ஏற்ற இறக்கங்களுடன் அதியற்புத வடிவமைப்பில் கேட்கக்கேட்க உவகை தரும் அமைப்பில்

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ, முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ

என் கோயில் குடிகொண்ட சிலையல்லவோ [இச்சரணத்தில்  தாளம் -தபலா வில் ]

பல்லவி மீண்டும் ஆண்

சந்திரோதயம் ஒரு .........                                     [தாளக்கருவி போங்கோ ]

சரணம்

பெண்: அலையோடு பிறவாத கடல் இல்லையே, நிழலோடு நடக்காத உடல் இல்லையே

துடிக்காத இமையோடு   விழி இல்லையே துணையோடு சேராத இனம் இல்லையே

என் மேனி உனதன்றி எனதில்லையே 

என நகர்ந்ததும்  மீண்டும் சரணம்

ஆண் [சென்சார் எனும் தணிக்கையில் மிகுந்த "வெட்டு வாங்கிய" சரணம் இது . எனவே இசைத்தட்டு வடிவத்திற்கும் திரை வடிவத்திற்கும் மிகுந்த வேறுபாடு . ஆனால் திரையில் தெரியாது ;மீண்டும் காட்சியை எடுத்திருப்பார்கள்].

ஆண் எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ, எனக்கிந்த சுகம் வாங்க துணை தேடவோ

மலர் மேனி தனைக்கண்டு மகிழ்ந்தாடவோ மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ

கண் ஜா ...டை கவி சொல்ல இசை பாடவோ   [இந்தச்சரண த்திற்கும் தாளம் தபலாவில் தான் ]

 

பல்லவி

பெண் : இளஞ் சூரியன் .....   என்று முடித்ததும்

ஆண் : சந்திரோதயம் ஒரு ......

பெண் துவங்கி ஹா ஹா  ஹா ஹா என   இருவரும் இணை ந்து ஒலிப்பது  இப்போதுதான்..

பாடல் நெடுகிலும் ஆண் , பெண் அருகருகில் இருந்தாலும்  பாடுவதென்னவோ தனித்தனியே தான் . இறுதி பகுதியில் போங்கோ வெகு நேர்த்தியாக ஒலித்து அடங்க பாடல் நிறைகிறது.

நீண்ட நெடிய அமைப்பிற்கு காரணம் 4 சரணங்கள் [2 ஆண் +2 பெண் பாடுவதாக ]  பெண் சரணங்கள் மென்மையாகப்பாடப்பட, ஆண் சரணங்கள் கம்பீரமானவை.

பல்லவி வரிகள் ஆண்[சந்திரோதயம்]  பெண்[இளஞ்சூரியன்] என இருவருக்கும் வெவ்வேறானவை. ஒரே ராக அமைப்பு போல் தோன்றினாலும் சற்று மாறுபாடுகள் கொண்டவை. போகட்டும் 4 சரணங்கள் [2 ஆண் +2 பெண் ]எனினும் ஆண் சரண . ஒலி  அமைப்பும் பெண் சரண ஒலி  அமைப்பும்  வேறான வை.

ஆகா மொத்தம் பல்லவிசரணம் என மொத்தம் 8 அங்கங்கள்

பொதுவாக ஒரு பாடலில் பல்லவி சரணம் மொத்தம் 5 அல்லது 6 பகுதிகள் ; இப்பாடலின் பல்லவி 6 இடங்களில் வருகிறது சரணம் 4 இடங்களில் என 10 பகுதிகள் , எனவே நீண்ட நெடிய பயணம் . ஆயினும் அந்த உணர்வே ஏற்படாமல் வெகு அமைதியாக இன்புற வைத்த, சொல்லடல் , கருவிகளின் இயைந்த இயக்கம்  இசை அமைப்பின் நேர்த்தி அனைத்தும் நம்மை ஆட்கொள்ள நம் மனம் காட்சியில் லயிக்க துடிப்பான நடிப்பும் நன்கு சோபிக்க  ஆண் சரணங்கள் கேள்வி வடிவில் முடிவதையும், பெண் சரண வரிகள் விளக்கும் விதமாக இருப்பதாக எழுதியுள்ளார் கவிஞர் வாலி . இது ஒரு வெகுமதி எனில் மிகை இல்லை   பாடலுக்கு இணைப்பு இதோ

CHANDRODAYAM ORU 1966 VAALI MSV TMS PS

https://www.youtube.com/watch?v=ihVsoLeEtE4

இப்பாடலின் வேறு பண்புகளை QFR குழுவினரின் பங்களிப்பாக ரசிக்க இணைப்பு இதோ   

https://www.youtube.com/watch?v=YbnfKIEfh0c qfr 571

நன்றி

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

UNABLE TO UNDERSTAND ANYTHING -8

  UNABLE TO UNDERSTAND ANYTHING -8               ஒன்றும் புரியவில்லை -8 LEARNING [ BASICS -7] அறிதல் [ அடிப்படை-7 ]   ஆசிரியரின் ...