Monday, September 2, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-`13

 TEACHER BEYOND YOUR IMAGE-`13

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-13

ஆசிரியர் செயல் நாட்டமும் , வீரியமும் கொண்டிருந்தாலும், பலர் வகுப்புகளை கூர்ந்து பின் பற்றுவதில்லை . அந்தப்புத்தகத்தில் இருக்கிறது இந்தப்புத்தகத்தில் இருக்கிறதென்று சால் ஜாப்பு சொல்லி ஆசிரியரின் முயற்சியை கேலிப்பொருள் ஆக்   முயலுவர். அடிப்படையில் உழைக்கும் மன நிலை இல்லாதோர்  இப்படித்தான் எதையாவது பேசி பிறரையும் திசை திருப்ப எண்ணுவர். அவர்களை மிக எளிதில் முறிடிக்க இயலும். நீங்கள் தொகுத்த தகவல் மற்றும் வகுப்பறை விவாத பொருள்களில் இருந்து வினா எழுப்புங்கள். ஆம் வினாக்கள் விவாதப்பகுதியில் இருந்து தோன்றும் போது வகுப்பில் அசட்டையும், அரட்டையுமாக காலம் தள்ளியோர் எதையும் எதிர்கொள்ள இயலாமல் புலம்பி, புக்கையும் நோட்டையும் தேட எதுவும் கிடைக்காது ; இது எங்கசார் இருக்கு? அது எங்க சார் இருக்கு ? என்று கேட்டுக்கொண்டு வருவார்கள்

அப்போதெல்லாம் சிலபஸ்ல இருக்கு, விலாவாரியா க்ளாஸ்ல பேசியிருக்கிறேனே -- நீங்க வரலியா ? இல்ல வந்தும் கவனிக்கலியா ? இப்படி இருந்தா  எப்படி ? யூனிவர்சிட்டி எக்சாம் லே இப்படி போய் கேட்டுக்கிட்டு வர முடியுமா? . போனா போன து தான் , அதுக்கென்ன பண்ண முடியும் என்று விட்டேத்தியாக பேசி புளியை அவ்வப்போது கரையுங்கள் . இதுபோன்ற சுயம்புகள் கதி கலங்கி மரியாதையாக வகுப்பில் நன்கு கவனிப்பர்.. இப்படித்தான் பயில முடியும் போலிருக்கிறது என்று முடங்கிப்போவர். கற்பிக்கும் பகுதி, திறன் இரண்டும் செம்மையாக இருந்தால் தற்குறி வகையினர் மீளாத்துன்ப ம் கொள்வர் . 

 செய்வதெல்லாம் உன் நலனுக்கு தான் எனக்கு அல்ல என்று உணர வையுங்கள். அதுவும் ஆசிரியரின் கடமையே..

சரி இப்படியெல்லாம் வருத்திக்கொண்டு ஆசிரியப்பணி செய்ய வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். எந்த வெற்றியும் போகிற போக்கில் வாய்ப்பதல்ல; பெரும் திட்டமிடலும் , உழைப்பும் , செயல் வடிவமைப்பிலும் ஆசிரியர் அளிக்கும் பங்கினைப்பொருத்தே வெற்றியின் பரிமாணம் வடிவம் பெரும். ஏன் -சில நேரங்களில் உழைப்பின் அளவு வெற்றியின் பரிமாணங்களை விட பன் மடங்கு பெரிதாக இருக்கும்.  ஆனால் அது ஒரு வகை மூல தனம்.  ஆம் உங்களின் வருங்கால வாழ்வில் எதிர்பாராமல் தோன்றும் சவால்களை எளிதாக தகர்க்கும் வல்லமை உங்கள் திறமையின் அங்கமாக உருப்பெறும் . எனவே உழைப்பு முதலிலும், வெகுமதி பிறகுதான் என்பதும் இயற்கையின் விதி . ஆசிரியப்பணி மாத்திரம் வேறு வகையாக இருக்குமா என்ன? ஆனால், ஆசிரியனின் நெஞ்சுரம் என்பது கடும் முயற்சியும், அறிவு விருத்தியும் கொண்டு அமைவது. எனவே மாணவர்களும் மற்றோரும் ஏளனப்பார்வை பார்ப்பதை பொருட்டாகவே கருத வேண்டாம். ஏனெனில், உழைத்தவனுக்கே உழைப்பின் வலியும் அதன் வெகுமதியும் எனில் வழிப்போக்கர் போல இருப்போரை நாம்ஏன் கவனிக்க வேண்டும்?

காலம் கவனித்துக்கொள்ளும்.

பொதுவாக ஒரு சிந்தனை நம் மனதில் ஆழமாக வேரூன்ற வேண்டும் . மனிதர்கள் தத்தம் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். உழைப்பை வெளிப்படுத்துதல் ஒரு வேள்வி, உழைப்பை கேலி பேசுதல் ஒரு பொழுது போக்கு. பின்னது எளிது , முன்னது கடும் முயற்சியின் பலன்.

ஒன்று சர்வ நிச்சயம். ஆரம்பத்தில் கேலி பேசிய மாணவ மாணவியர், போகப்போக  .உணர்வது ஆசிரியனின் dedication    என்னும் மனப்பூர்வ ஈடுபாடு பயில்வோர்க்கு விளைவிக்கும் கல்விப்பயன் [ பாடம் குறித்த மிகச்சரியான மற்றும் தெளிவான] ஆழ்ந்த புரிதல் .

ஊதியத்தை நினைத்து ஆசிரியப்பணி செய்யும் எவராலும் பயில்வோரை ஈர்த்து வசப்படுத்த இயலாது. ஏனெனில், ஆசிரிப்பணி என்பது செவியினுள் புகுவது அல்ல மனங்களில் புகுந்து வியாபித்தலே.

மனங்களில் நுழைவது எவ்வாறு? பின்னர் விவாதிப்போம் .

நன்றி

அன்பன் ராமன் 

1 comment:

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...