Wednesday, September 11, 2024

TM SOUNDARARAJAN –21

 TM SOUNDARARAJAN –21

டி எம் சௌந்தரராஜன்-21

டி எம் எஸ் அவர்கள் பலதர ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதிலும் திரைப் பாடல்களில் அவர் தொடாத ரகமே இல்லை எனலாம். இருப்பினும், அவரது தனிப்பட்ட விருப்பம் பக்திப்பாடல்கள். தான் என பல தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அதுபோலவே கவிஞர்கள் என்னதான் ரொமான்டிக் வகை பாடல்கள் எழுதினாலும் அவர்கள் பெரும் நாட்டம் கொள்வது தத்துவார்த்த கருத்துகளை முன்னிலைப்படுத்தும் கானங்கள் வடிவமைப்பதில் தான் . இன்றைய நமது தொகுப்பில் அநேகமும் தத்துவ நெறிசார்ந்த கருத்து  தொகுப்புகள் என்றே கொள்ளலாம். இயன்ற அளவும் தெளிவாக்க முயலுகிறேன் . குறை இருப்பின் பொறுத்தருள்க. 

ஆறுமனமே ஆறு [ஆண்டவன் கட்டளை -1964] கண்ணதாசன் , வி- ரா , டி எம் எஸ்

எதிர்பாராத சூழலில் பெரும் சோகத்தில் சிக்கிய பேராசிரியர் , கனத்த சோகம் சுமந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு பயணப்படுவதாக காட்சி. வாழ்வு நெறியாக ஆண்டவன் வழங்கிய நெறிகள் ஆறு என்று கவிஞர் வெகு சிறப்பாக விளக்கிய 6 வகை நிபந்தனைகள் எவ்வளவு முறை கேட்டாலும் வியப்பும் மரியாதையும் மேலிடுவதை  தவிர்க்க இயலாது.

எப்படி இந்தக்கவிஞன் எளிதில் தத்துவங்களை உதிர்க்கிறான் என்று தவிக்கலாம் , கவியை தவிர்க்க இயலாது. வெகு இயல்பான ஆரவாரமற்ற இசையும் நடிப்பும் திருத்தலங்களின் காட்சிகளும் நம் மனதில் அமைதி ஏற்படுத்துவது , இசையின் வலிமைக்கு சான்று . கேட்டு மகிழ இணைப்பு .   

https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc aaru maname aaru aandavan kattalai –kd vr tms

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் [படகோட்டி -1964] வாலி, வி-ரா , டி எம் எஸ்

முந்தையபாடல் ஆன்மிக நெறி யில் பயணித்தது. இப்பாடலில் மேலோங்கி நிற்பது மனித நேயத்தின் வெளிப்பாடு , வாலியின் யாப்பு. வெகு ஆழ்ந்த ஆர்வமும் அனுதாபமும் பாடலின் அடிநாதம் . ஆம் வலியவர்கள்; எளியவர்களை சுரண்டுவதையும், இறைவன் தருவது அனைவருக்குமே என்று வாதிடும் நேர்த்தி

படைத்தவன் மேல் பாவம் இல்லை , பசித்தவன் மேல் பழியும் இல்லை , கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் , உழைத்தவர்கள் தெருவில் நின்றார் என்ற வரிகளும் , மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா என்று இறைவனின் பொதுக்கொடைகளை பட்டியலிட்டு கவித்துவத்தை நிலை நாட்டிய பாடல் இசையில் சோகம் இழையோடுவது விஸ்வநாதன் -ராமமூர்த்தி , சொற்களுக்கு வழங்கும் இசை ஆதரவு எனில் மிகை அல்ல.  டி எம் எஸ்ஸின் சோகக்குரலில் . கேட்டு  மகிழ இணைப்பு 

https://www.youtube.com/watch?v=ctKTxZdq3lU koduththadhellaam padagotti vali msv tms

பரம சிவன் கழுத்தில் இருந்து [ சூரிய காந்தி -1973] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் , டி எம் எஸ்

இது ஒரு ஆச்சரிய பாடல் ; என்ன எனில் இதில் எல்லாமே ஆச்சரியம் தான். கவியரசர் நேரில் தோன்றி திரையில் நாம் கண்ட வெகு சில பாடல்களில் இதற்கொரு விசேஷ இடம் உண்டு. கவிஞரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு , அதை மூடி மறைக்க சால்வை போர்த்திக்கொண்டு கண்ணதாசன் காட்சியில் வெகு இயல்பாக தோன்றி வாயசைக்கிறார் . [ எலும்பு முறிவெனில்தாங்கொணா வேதனை இருந்திருக்கும் ], அதை விட அவ்வப்போது கண்ணை சிமிட்டிக்கொண்டு கண்ணதாசன் பாடுவது வெகு சிறப்பு. அவ்வையின் கருத்துதனை  ஓரிடத்தில் தொட்டுக்காட்டினாலும் , பிற உவமைகள் அவன் ஒரு யுகக்கவி என்று கட்டியம் கூறுவதை மறுக்க இயலுமா?

கருடா சவுக்கியமா  என்பதே  கேலி தொனிக்கும் கேள்வியன்றோ ?                                    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே -- நான் நிலவு போல  தேய்ந்துவந்தேன் -நீ வளர்ந்ததாலே என்று ஏற்றத்தாழ்வில் வீழ்ந்துபட்ட கணவனின் புண்பட்ட உவமை , எவ்வளவு ஆழ்ந்த சோகம்.. சரி இந்த டி எம் எஸ் எங்காவது தன குரல் தோன்ற பாடியுள்ளாரா?. கண்ணதாசனுக்கென்றே ஒரு த்வனியில் பாடுகிறார். .எம் எஸ் விஇசையின் வடிவிலும் இந்த சோகம் தவழ்வதைக்காணலாம் அவரது  குழுவின் ரானி  டேவிட் [வயலின் ] , கிட்டார் பாபு, ஷெனாய் சத்யம் போன்றோர் நேரடியாக தோன்றியது மற்றுமோர் ஆச்சரியம். கண்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=FX93M8wTR48 paramasivan soorya kaanthi , kd msv tms

மனிதன் நினைப்பதுண்டு [அவன் தான் மனிதன்] கண்ணதாசன் எம் எஸ் வி,            டி எம் எஸ்

நன்மை செய்து அனைத்தையும் இழந்தவன் பாடும் தத்துவப்பாடல். இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று என்ற பல்லவியிலேயே மனிதன் இறைவனின் ஆளுமைக்குட்பட்டவன் தான் என்றுணர்த்துகிறார். பிறப்பு முதல் இறப்பு வரை கையில் இருக்கும் பொருள் ஆட்டிவைப்பதை சொல்லும் நேர்த்தி . இது போன்ற கார்ச்சிகள் எங்கே தொலைந்தன? வாழ்வியல் அம்சங்களை பற்றி எந்த கதை அமைப்பும் இன்றியே படங்கள் வருகின்றன ;பின்னர் திரை அரங்குகள் கார் பார்க்கிங் இடங்கள் ஆவது இயல்பானது தான். இப்பாடலுக்கு இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=HvtLC3NvI4c manidhan ninaippadhundu avan thaan manidhan kd msv , tms

இளமைக்காலம் எங்கே [ தாய்க்கு ஒரு தாலாட்டு ] வைர முத்து , இளையராஜா , டி எம் எஸ், பி சுசீலா

இது ஒரு பின்னாளைய [1978] பாடல். இதில் தத்துவம் உண்டா எனில் இல்லை. ஆனால் பலரும் தன்னிலையுணர்ந்த இடத்திற்கு வந்தது போல் தோன்றும். அதே சமயத்தில் இதில் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆங்காங்கே வருகின்றன. உதாரணம் "பழையபாடல் போல புதிய பாடல் இல்லை " என்ற வரி ஒரு வாக்கு மூலம் . ஆம் கவிதை சரி இல்லை என்று இசை அமைப்பாளரும், பாடலில் பாடும் குரல்கள் சரி இல்லை உச்சரிப்பில் தெளிவில்லை என்று கவிஞர் ஆதங்கம் கொள்வதாகவும் கருத இடமுண்டு . மேலும் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் ஏன் புதியபறவையின் "உன்னை ஒன்று கேட்பேன்' பாடல் அமைப்பிலேயே இந்த பாடலை அமைத்துள்ளனர்.? இடை இசையில் மாறுபட்ட அமைப்பு உள்ளது. பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே என்று பாடலில் வருகிறது ;

அதுவும் கூட புத்துணர்ச்சிபெற பழையபாடல் தான் ஏற்றது என்று மறைமுகமாக சொல்கிறது . பாடல் படத்தில் இல்லை. இசைத்தட்டும் , மேடை நிகழ்ச்சி தொகுப்பும் உண்டு. [பி சுசீலா டி எம் எஸ் ] பாடக்காணலாம். சுசீலா இவ்வளவு  புன்னகைத்து எளிதில் பார்க்க கிடைக்காது. டி எம் எஸ்ஸும் கூட மிகுந்த ஆவலுடன் உடல் பாவம் மேலிட பாடக்காணலாம். இலங்கையின் அப்சரஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி. கேட்டு ரசியுங்கள்.  

https://www.youtube.com/watch?v=oQbeXd95pRk ILAMAIKAALAM VAIRAMUTHU

 TMS PS ILAYARAAJA

அன்பன்

ராமன்

3 comments:

  1. அறிவுபூர்வமான அனுபவபூர்வமான தத்துவ பாடல்களை நினைவுகூர்ந்ததர்க்கு நன்றி 🙏
    அதே வரிசையில் அனுபவ பூர்வமாக நான் ரசிப்பது:
    1.இரண்டு மனம் வேண்டும். ..
    நினைந்து வாழ ஒன்று
    மறந்து வாழ ஒன்று
    2.நினனப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்
    ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை
    நன்றி

    ReplyDelete
  2. இரண்டு மனம் வேண்டும் பாடலில்

    நினைத்து வாட ஒன்று , மறந்து வாழ ஒன்று என்பது தான் வாசகம்

    ReplyDelete
  3. திருத்தத்துக்கு நன்றி.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...