TEACHER BEYOND YOUR IMAGE-19
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-19
இன்னும் சில அணுகுமுறைகள் /உத்திகள்
BLACK BOARD AND WHITE
CHALK
கரிய நிற பலகை + வெண்ணிற சாக் எனும் எழுதுகோல்
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவது கூட ஒரு முறைப்படி இருத்தல் நலம் அதாவது ஆசிரியர் வலப்புறம் நின்று பேசுபவர் எனில் கரும் பலகையில் இடப்புறப்பகுதியிலும், இடப்புறம் நின்று பேசும் பழக்கம் உள்ளவர் எனில் , பலகையில் வலப்புறமும் எழுதினால் , பயில்வோர் எளிதில் பார்க்க இயலும். எழுதியதை மறைத்துக்கொண்டு நிற்பதால் பயனில்லை மாறாக மாணவ மாணவியர் வெறுப்படைவர். இதை எல்லாம் வெளியில் சொல்லாமல் செய்வது ஆசிரியரின் பிம்பம் பெரிதும் வலுப்பெற உதவும்..
இவ்விடத்தில் ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதோ, படம் வரையும்போதோ, திடீரென திரும்பினால் சிலர் பேசிக்கொண்டு/ நடனம் ஆடுவதும் கூட நடைபெறும். அந்த நடராஜன்களை -நன்றாக "கவனிக்க" வேண்டும்.
ஒவ்வொருமுறையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறவைத்தால் வேறு எவனும் நாட்டியம் ஆட முற்பட மாட்டான். இதுபோன்ற 'கீரிப்பிள்ளை' செயல்கள், ஆசிரியப்பணியின் அத்யாவசிய அங்கங்கள்.
கீரிப்பிள்ளை, ஒரு திசையில் பார்க்காது. பலவாறு திரும்பி குதித்து கொடிய நச்சுப்பாம்புகளைக்கூட சாய்த்து விடும். அதுபோல் பல கோணங்களில் பார்க்கும் ஆசிரியர், மிகவும் ஆபத்தானவர் என்று பயில்வோர் கணித்துவைத்திருப்பர். அதை உங்களின் மரபு ஆயுதம் ஆக்கிவிட்டால், வேண்டாத நடவடிக்கைகள் முற்றிலும் கட்டுப்படும்; மாணவ மாணவியர் அச்சம் கொள்வர். அதனால்,
வ குப்பறைகட்டுப்பாடு சீராக இருக்கும்.
போதனை திறமையுடன் வகுப்பு நிர்வாகமும் இணையும் போது ஆசிரிய பிம்பம் பெரிதும் ஏற்றம் பெறும்
PROPER USE OF
BLACK BOARD கரும்பலகையை சரியாக உபயோகித்தல்
கரும்பலகையில் எழுதுவதும் படங்கள் வரைவதும் நன்கு அமைய முறையான பயிற்சி அவசியம். அவ்வப்போது கரும்பலகையில் எழுதி பயிற்சி மேற்கொள்ள , இவ்விரண்டு பணிகளும் நேர்த்தியாகவும் விரைந்தும் நடை பெறும் . அதனால் கால விரையம் வெகுவாக கட்டுப்படும். அது ஆசிரியரின் திறன் குறித்த பொதுக்கருத்தை மேலும் வலுவாக்கும்
பலகையில் எழுத்துக்களும் படங்களும் பெரிய அளவில் இருந்தால் எந்த மூலையில் இருப்பவருக்கும் தெளிவாக புலப்படும். எழுத்துகள்/ படங்கள் பட்டையாக இல்லாமல் மெல்லிய கோடுகள் எனில் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் . அதனால் எழுதும் சாக் [CHALK ] ஈரமில்லாமல் இருக்கவேண்டும். சிறிது எழுதியபின் முனை மழுங்கும், பட்டை அடிக்க துவங்கும், எழுது முனையை உடைத்துவிட்டு, உடைந்த சாக் பகுதியின் விளிம்பினால் எழுதினால் , பளிச்சென்று மெல்லிய கோடுகள் உருவாகும்.
நெஞ்சில் ஈரமில்லாமல் சாக்பீஸ் களை உடைத்து எழுத தயக்கம் கொள்ள வேண்டாம். எழுத்து/ படம் இவற்றின் தோற்றப் பொலிவே ஆசிரியரின் பெருமையை பேசும்
முன்னரே எழுதி வைத்த படங்களை விட , அவ்வப்போது வகுப்பறையில் பயில்வோர் முன்னிலையில் அவர்கள் கண் முன் வரையும்போது , எங்கு துவங்குவது எங்கு செல்வது, எது முதலில் எவை பின்னர் என்ற அனைத்தையும் கண்கூடாக பார்த்துவிடுவதால் , பயில்வோர்,பாட தகவல்கள் போல் பட நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள ஏதுவாகும்.
வகுப்பறையில் இவற்றிற்கெல்லாம் நேரம் இல்லை என்று விளக்கம் சொல்ல வேண்டாம்; மாறாக, முழு படத்தை இல்லாவிட்டாலும் முக்கிய பகுதிகளையாவது முறையாக வரைந்து அவர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுத்தால் , அவர்கள் முறையான அணுகுமுறைகளை அறிந்து அவற்றை கைக்கொள்ள பயிற்சி பெறுவர் .
எந்த செயலலோ / பணியோ வெற்றிகரமாக அமைய, மூன்று பெரும் காரணிகளை அடையாளப்படுத்தலாம் . அவை
1 தேவையான தகவல்களை முறையான வரிசையில் நினைவு கொள்ளுதல்
2 அணுகுமுறையில் ஒன்றோ அதற்கு மேலோ இருப்பின் அவற்றை அறிந்து கொள்ளுதல் ,உகந்ததை பின்பற்றுதல்
3 எதற்கும் பிறரோடு ஒப்பீடு செய்யாமல் , மனோதர்மமாக பணி செய்தல் . இவற்றில் 3ம் காரணியை எந்நாளும் மறவாமல் , நான் இங்கு வந்ததே 'கற்பித்தல் பணிக்கு ' என்பதையும் அவர்களுக்கு தெரியாது, புரியாது என்று சால்ஜாப்பு சொல்வதையம் தவிர்த்து, முயன்று கற்பித்தால் பயில்வோர் வெகுவாக உங்கள் பாதையில் பின் தொடர்வர், அதற்குத் தேவை கவனச்சிதறல் இல்லாமல் ஒவ்வொரு வகுப்பிலும் தீவிர முயற்சியோடு விளக்கி கற்பித்தல்.
கண்டிப்பாக இவை ஆசிரியனை வெற்றி நோக்கி இட்டுச்செல்லும் , வழியில் விட்டுச்செல்லாது
பின்னாளில் ஆசிரியப்பணியில் அமர்வோர், அப்போது போய் இவற்றை அறிந்து வர முடியாது; மாறாக அவர்களும் இந்த வகை நுணுக்கங்களை பயிற்றுவிக்காமல் கட ந்துபோய் , காலப்போக்கில் கல்வியின் மாட்சிமை சிதைவுறும்
எனவே தான் மீண்டும் சொல்கிறேன் ஆசிரியன் முதலில் தனது பயிற்றுவிக்கும்திறன் உத்தி இவற்றை கட்டமைத்துக்கொண்டு செயல் பட்டால் ,பயில்வோர் உங்களுக்கு தரும் மதிப்பும் மரியாதையும் அலாதி யானவை.; ஆசிரியர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது மாத்திரமே ஒருவருக்கு ஆசிரியர் என்ற அங்கீகாரத்தை தராது. பதவி "நான் பேராசிரியர்"என்ற அகங்காரத்தை வேண்டுமானால் தரலாம் அங்கீகாரத்தை அல்ல.
இவ்வனைத்தையும் ஒருவர் கைக்கொண்டால் , விரைவாகவே பெரும் அங்கீகாரத்தையம் ஆசிரிய ஆளுமை என்ற பெரும் வரவேற்பையும்தரும் எந்நாளும் அவரை உயர் பீடத்தில் வைத்து கொண்டாடும்.
அடிப்படையில் இவ்வனைத்தும் பயில்வோர் நலன் கொண்டதாக இருந்தால் அதுவே ஆசிரியப்பணியின் மகோன்னதம் .
பிற சில முக்கிய செயல் நிலைப்பாடுகளை பின்னர் காண்போம் .
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment