Sunday, November 24, 2024

SAVITHRI and SETHURAMAN

 SAVITHRI and SETHURAMAN 

சாவித்திரியும், சேதுராமனும்

இது சற்று பழங்கால சமாச்சாரம், இதெல்லாம்நடக்குமா என்ன? என்று சந்தேகம் கொள்வோர் படிக்க வேண்டாம் , வேறு ஏதாவது வேலை இருந்தால் அதை ப்பாருங்கள். இப்போது விடாமல் படிப்பீர்களே .அதுதானே நம்ம வழக்கம். எழுதினால் படிக்க மாட்டோம். படிக்க வேண்டாம் எனில் விழுந்து விழுந்து படிப்போம் , கேட்டால் நீ யார் அதைச்சொல்ல ? என்று நரசிம்மாவதாரம் பூணுவோம். சரி இப்போது தொடக்கப்புள்ளிக்கு வருவோம்.

இது என்ன ? நீ என்ன செஞ்ச -இப்பிடி வளைந்து தொங்கிக்கொண்டிருக்கிறதே என்று சாவித்திரிக்கு வசவு , இன்னும் தாக்குதல் தொடங்கவில்லை .. நான் ஒன்னும் செய்யல என்றாள் சாவி , பின்ன ஏன் இப்பிடி வளைஞ்சு தொங்கறது என்று பாய்ந்து பட்டார் பட்டார் என்று முதுகில் அறைந்தார் தகப்பனார் விஸ்வேஸ்வரன் . அடி  தாங்காமல் கண்ணில் குளம் போல்  தேங்கியிருந்த கண்ணீரைஅடக்கிக்கொண்டு விசும்பினாள் சாவி,அழுதேன்னா கொன்னுடுவேன் என்று விஸ்வேஸ்வரன் எம்பிக்கொண்டிருக்க, இன்னொன்றை பார்த்துவிட்டார்.

இது ஏன் இப்படி நீட்டிக்கொண்டிருக்கு என்று சேதுராமன் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது.

அக்காவும் தம்பியும் 8ம் வகுப்பு, 6 ம் வகுப்பு உள்ளூர் அரசாங்கபள்ளியில் படிக்கின்றனர். சேதுராமனுக்கு வேளை  சரியில்லை  , கழுத இங்கிலீஷிலே எவ்வளவு மார்க் என்று கேட்டுக்கொண்டே கழுத்தை இறுக்கினார் விஸ்வேஸ்வரன். மூச்சுவிட முடியாமல்  முனகினான்  சேது. 17 என்று. 17 மார்க்கை வாங்கிண்டு என்ன திமிர் உனக்கு என்று என்று குச்சியை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு தயாரானார். குச்சியைப்பார்த்து அம்மா என்று அலறினான் சேது.

 வெட்கமில்லை உனக்கு 17 மார்க்குனு பெரிய வீரம் வேற ஒன்ன ஒதைச்சு மாடி ரூம்ல போட்டு   பூட்டணும், என்று சாவியை தேடினர். அம்மா என்று அலறக்கேட்டு ஓடிவந்த தாய் செண்பகம் ஏன் இப்பிடி கோரதாண்டவம் ஆடறீங்க ஞாயித்துக்கிழமையும் அதுவுமா? சனிக்கிழமை வரவேண்டியது சண்டே சர்க்கஸ் மாதிரி கையில பெல்ட், கம்பு, கழி எதையாவது எடுத்துக்க வேண்டியது , இங்க ஒரே பிரளயம் எங்கயாவது ஓடிடலாமா னு இருக்கு. நீ ஏண்டி ஓடுவ , இந்தகழுதைய அடிச்சு துரத்தாம என்றார்? ஏன் துரத்தணும் ?

கழுத 17 மார்க்  இங்கிலீஷ்ல என்றார் விச்வேஸ் .தாயார் ரொம்ப அமைதியா ஆமாம் 17 இருபதுக்கு [நூத்துக்கு இல்ல -என்னா எதுனு கேட்டுட்டு அப்புறம் ஆயுதங்களை எடுங்கோ. கொஞ்சமும் பொறுமையே இல்லை. இன்னொண்ணு தெரிஞ்சுக்கோங்கோ நம்ப பொண்ணும் பிள்ளையும் தான் க்ளாஸிலே பஸ்ட் , அன்னிக்கு பேரண்ட் -டீச்சர் மீட்டிங்குல எங்கிட்ட 2 க்ளாஸ் டீச்சரும் பெருமையா சொன்னாங்க. சின்னவன் கணக்குல தான் கவனக்குறைவா தப்பு பண்றான் , நாங்க அதையும் ரொம்பவே சரி பண்ணிட்டோம்  கவலைப்படாதீங்க என்று வாழ்த்து சொன்னாங்க. நீங்க என்னடான்னா ஆபீஸ்ல இருக்கற கோவத்துல இப்பிடி அடிக்கிறீங்க.. இன்னோண் ணு  சொல்லவா  -இங்கிலீஷிலே வார்த்தையை சொல்லி சயன்ஸ் வாத்யார் அர்த்தம் கேட்டார் னு கேட்டு சேதுவுக்கு நான் டிக்ஷனரி பார்த்து அர்த்தம் சொன்னேன் அவன் மட்டும் தான் சரியா சொன்னான். இன்னும் ரெண்டு பேர் என்ன சொன்னாங்க னு வாத்யார் சொல்லி சொல்லி சிரிச்சார் ; அது என்ன? டேய் சொல்றா என்றாள்  தாய்.

சேது சொன்னான்

surrogate [ச ரோ கே ட்] உண்மையில் ச ரகே ட்  அதாவது ஒரு மனிதர் அல்லது பொருள் செய்யவேண்டியதை வேறொரு மனிதர் அல்லது பொருள் மூலம் செய்வது

serrendipity [செரின்டிபிடி ] முக்கியமான ஒன்றை தற்செயல் நிகழ்வாக கண்டு பிடிப்பது.

 

வாத்யார் ஏதோ சிரிச்சார் னு அம்மா சொன்னாளே என்றார் அப்பா.

அதுவா , வள்ளியப்பனும் , கதிரேசனும் ஒரே மாதிரி தப்பா சொன்னாங்க

serrendipity= பரிதாபமா சரண்டர் ஆவது ,

surrogate = கேட் ல நிக்கிற சரோஜா னு ரெண்டு பெரும் சொன்னாங்க. வாத்யார் சிரி சிரின்னு சிரிச்சு எங்கிருந்துடா இப்பிடி கண்டுபிடிச்சீங்க னு கேட்டார். அவங்க 2 பே ரும் -எங்க தெருவுல மஹாலிங்கம் னு ஒருத்தர் இருக்கார் அவர் தான் இப்பிடி சொன்னார் என்று சொன்னாங்க. என்றான் சேது ராமன்.

மஹாலிங்கம் வேறு யாருமல்ல சாக்ஷாத் நம்ப சிதம்பரநாதன் செட்டியாரின் உதவியாளர் "யமாகாதகன் " புகழ் மகாலிங் தான்.

சரி இப்போது கதையின் துவக்கத்துக்கு வருவோம். அக்காவும் தம்பியும் சண்டை போட்டதில் அக்காவின் கையிலிருந்த பேனா செங்குத்தாக கீழே விழுந்து பேனாவின் நிப் [nib ], கிளி மூக்கு போல் வளைந்து விட்டது அது தான் ஏன் "இப்பிடி வளைஞ்சு தொங்கறது" னு அப்பா அலறியது. . தம்பியின் பேனாவை  அக்கா பிடுங்கப்பார்க்க, அவன் பேனாவை விடாமல் பற்றிக்கொள்ள , பேனாவின் மூடியில் இருந்த கிளிப் ஆங்கில எழுத்து R  போல , வலது கால் வெளியே நீட்டிக்கொண்டிருக்க அதைத்தான் தகப்பனார் “ஏன் இப்படி நீட்டிக்கொண்டிருக்கு  என்று கோபம் கொப்பளித்தார். பாவம் நல்ல குழந்தைகளுக்கு இப்படி ஓர் நிலைமை

கண்ணால் கண்டதும் [பேனா உருவம்] , காதால் கேட்பதும் [17 மார்க்] பொய்,  தீர விசாரிப்பதே [தாயார் சொன்னதே] மெய்  என்று உணர்த்திய "சண்டே " சம்பவம்.

                  ************ 

2 comments:

  1. "chettiar has gone outside" புகழ் ஆங்கில பேராசிரியர் ?
    "யமகா தகன்" மகாலிங்கம் இங்கும் வருகை😄😄.

    ReplyDelete
  2. Very true depiction of middle class life in the sixties and seventies. Thanks. RK

    ReplyDelete

Oh Language –14

  Oh Language –14                          Needless to recall the purpose of these Sunday blog postings-I beliecve. Proceed   Spring, Sw...