Sunday, March 2, 2025

COUSINS -3

 COUSINS -3                  

சகோதர உறவு முறை -3

                 [RAGUNATHANs  வேண்டுகோளுக்கிணங்க பதிவிடப்படுகிறது ]

கஸின் முறையோர்  உறவுகளை தெளிவு படுத்த சமூக அறிவியலார் [social sacientists] ஒரு விளக்கம் தருகின்றனர்.

உபயம்: பேராசிரியர் டாக்டர் கண்ணன் [சமூக அறிவியல் துறை -மதுரை காமராஜர் பல்கலை கழகம்வர் தெரிவித்த  விளக்கம் :

அதாவது சித்தப்பா, பெரியப்பா வகை குழந்தைகள் parallel cousins [இணை  கஸின்கள்] எனவும் , மாமா [maternal uncle ] அத்தை [paternal aunt] குழந்தைகள் -க்ராஸ்கஸின்கள்  [cross cousins ] என்று வேறு படுத்துகிறார்கள் [அவர்கள் வேறு , படுத்துகிறார்கள் என்றும் தமாஷாக கூறலாம்]

இவ்வகை க்ராஸ் கஸின்களிடையே, திருமணம் ஏற்பாடு செய்வது நடந்து வந்தது; இப்போது சற்று குறைந்துள்ளது [POTENT GENETIC DISORDERS] மரபணுக்கள் வழியே விளைந்துவிடக்கூடிய தீர்க்கவொண்ணா குறைபாடுகள் குறித்த அச்சம் காரணமாக இப்போது குறைந்து வருவதை காண்கிறோம்.

சென்ற பதிவில் ---

பி. கு :  மாட்டுப்பெண் /நாட்டுப்பெண் என்று முறையே  வைஷ்ணவ , ஸ்மார்த்த  பிராமண  மரபினர் கூறும் சொற்கள் குறிப்பிடுவது எதை? விளக்கம்தெரிந்தோர் சொல்லுங்கள், அப்படியாவது வாசகர்கள் பேசட்டுமே. ஊஹூம் , மாட்டார்களே ; எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பது போல் மௌனம் காப்பார்கள் , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அமாவாசை , பௌர்ணமி , ஸ்கூல் பரீட்சை என்று சமாதானம் சொல்லிவிட்டால் போயிற்று , அதுவும் கேட்டால் பார்த்துக்கொள்வோம் என்பது தானே நமது அன்பர்களின் மௌன விரத நிலைப்பாடு.                       என்று குறிப்பிட்டிருந்தேன்.

நான் சொன்னது போலவே மௌனம்,   விளக்க வொண்ணா மௌனம் . ஒரே     ஒருவர், உங்கள் விளக்கம் என்ன என்று அறிய விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். 

ஏனையோர் -"போடா உனக்கு வேறு வேலையில்லை" என்று தீர்க்கமாக மௌன மொழியில் சொல்லுகின்றனர். இன்று அமாவாசை வேறு வந்துவிட்டது; எளிதாயிற்று தர்ப்பணம் செய்ய லேட்டானதை சொல்லி நேரமின்மை மீது பழி சுமத்திவிட்டுஅமர்ந்து கொள்ள. சிலருக்கு சிவராத்திரி ஒரு காரணி.. ஆக மொத்தம் சினிமா, கல்வி, பொதுத்தகவல், உறவுமுறை என எதைக்கேட்டாலும் 'மௌனம் பரம ஒளஷதம்' என்று ஏதோ ஸ்பானிஷ் மொழிப்பிரதேசத்தில் சிக்கிக்கொண்ட யாத்ரீகன் போல [social distancing] சமூக [கண்ட] continental இடை வெளியை , வாட்சப்பில் கூட கடைப்பிடிக்கக்காண்கிறேன்.

என்னே  அன்பர்கள்?   ஆஹா  புல்லரிக்கிறது.

சரி மாட்டுப்பெண், நாட்டுப்பெண் ,என்ற சொல்லாடல்கள் ஏன்? 

இதற்கு ஒரு சில குடும்ப சொற்கள் குறிப்பாக உறவு நிலை சார்ந்தது மற்றும் domestic language எனும் இல்லற மொழி குறித்து தெளிவு கொள்ளுதல் அவசியம்..

வைணவ மரபில் புழங்கும்   "மாட்டுப்பெண்" 

ஒரு இல்லத்தில் பிறந்தபெண், கல்வி முடிந்து மணப்பருவம் வந்துவிட்டால், உரிய ஆண்,  ஒருவனை மணந்து கொண்டு வேறு இல்லம் [புக்கு அகம்] = புக்காம் என்று வாய் ஒட்டாமல் அழைக்கப்படும் புகுந்த வீட்டிற்குப்போக , வேறொரு பெண்ணை திருமணபந்தம் மூலம் குடும்ப நடைமுறைகளின் படி  தங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து, அவளை மாட்டுப்பெண் என்று அறிமுகம் செய்கின்றனர்.                          அதாவது தங்கள் இல்லத்துப்பெண் குழந்தைக்கு மாற்றாக வந்த மாற்று பெண் -காலப்போக்கில் சிதைந்து மாட்டுப்பெண் என்று வழங்கலாயிற்று. என்றொரு விளக்கம்.  . 

ஸ்மார்த்த மரபில் வழங்கும் "நாட்டுப்பெண்"              இந்த சொல்லாடலுக்கு வெவ்வேறு விளக்கங்கள் உண்டு.

பெரும்பாலும் பெண் தேடுவோர், தங்கள் வட்டார பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமே, பழக்க வழக்கங்கள் ,சமையல் முறைகள் எதையும் புதிதாக கற்றுத்தர வேண்டாம் என்ற எதிர்பார்ப்பில் தத்தம் வட்டார பகுதிகளில் வரன் குதிருமா என்று அக்கறை கொள்வர். உதாரணம், தஞ்சை, நெல்லை, கோவை, காஞ்சி, பாலக்காடு   அல்லது [சில வைணவர்கள்] கர்னாடக மண்டையம்/ ஹெப்பால் வகைகளை சல்லடை போடுவர்.

அப்படி, தங்கள் நாட்டுப்பகுதியில் இருந்து தேர்வு செய்ததால் நாட்டுப்பெண் என்று பெயர் உருவானதாக ஒரு விளக்கம்.

இன்னோர் விளக்கம் .                 திருமண பந்தத்தின் உள்ளார்ந்த சூக்ஷமம் வம்ச விரிவாக்கம். எனவே ஒரு உயிர் அல்லது பயிர்  விளைபலன் தருவதற்கு சில நடைமுறைகள் உண்டு . பயிர்களை முதலில் நாற்று போல் ஒரு நிலத்தில் விளைவித்து, பின்னர் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் வேறு நிலத்தில் பயிரிட்டால் தான் தழைத்து வளர்ந்து ,காய், கனி, விதை என்று பலன் தரும். [நெல், கத்தரி, தக்காளி போன்றவை]   பிறந்த இடத்திலேயே முழுவதும் வளர்த்து மகசூல் பெற இயலாது..

அதே போல் பெண்கள் குறிப்பிட்ட காலம் வரை நாற்று போல் ஓரிடத்தில் வளர்ந்து  பின்னர் வேறு இடத்தில்  தொடர்ந்தால் தான் -பலன் கிட்டும். அவ்வகையில் ஒரு பெண் புகுந்தவீட்டிற்கு நாற்று போல் வருவதால் 'நாற்றுப்பெண்" ஆவதாக ஒரு விளக்கம் .

அதனால், இல்லற மொழிகள் எதையும் கேலி பேசுதல் தவறு. 

ஆத்துக்குப்போறேன் என்றால் கேலி பேசும் அன்பர்களே,  இதை கவனியுங்கள். அகம் என்ற சொல்,ஆம் என்று உருவெடுத்துள்ளது. [இது எங்கஆம்’ , அது உங்கஆம்’ ] என்று பேச்சுவழக்கில் உள்ளது. இதை, கேலி செய்வோர் அனைவரும், ஏன் அகப்பை என்று சொல்வதில்லை? "ஆப்பை" என்றுதானே சொல்கின்றனர்.? அகப்பை ஆப்பை ஆகலாம் எனில் அகம் "ஆம்" ஆவதில் என்ன முரண் பாடு?           சிந்திக்காமல் கருத்து சொல்வது சரியா?

மற்றுமோர் வைணவ சொல்லாடல். 

உங்க பையன் ஸ்ரீவத்சன் எங்கே?  அவன் தலை தீபாவளிக்கு வேட்டாத்துக்கு மன்னார்குடி போயிருக்கான்.

என்னது வே ட் டா மா?

ஆமாம் . 

நண்பர் விழிக்க , ஸ்ரீவத்சன் தகப்பனார் "மாமனார் வீட்டில்  தலை தீபாவளி கொண்டாடப்போயிருக்கான்'.

மாப்பிள்ளைப்பையன் .புகுந்த வீட்டிற்கு போய் இருப்பதாக  சொல்லாடல் இல்லை ஏன் எனில் இவன் எப்போதும் பெற்றோருடன் வசிப்பவன். அதனால் மாமனார் இல்லம் வேற்று அகம் . [மாற்று பெண் = மாட்டுப்பெண் போல  வேற்று அகம் சிதைந்து வேட்டகம் ஆகி பின்னர் வேட்டாம் ஆனது.. தீபாவளிக்கு வெடி, வேட்டு,  தின்பண்டங்களை வெட்டு  எனவே வேட்டாம் என்றொருவர் விபரீத விளக்கமும் சொன்னார் ஒரு 30 ஆண்ண்டுகள் முன்.. 

நன்றி                                        அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

RENGAA VENDAAM

RENGAA VENDAAM                     ரெங்கா வேண்டாம் ... காலை 7.00 மணி வீடே திமிலோகப்படுகிறது . என்ன ? ஆம் ½ ஆண்டு பரீட்சை மார்க் ...