Monday, March 31, 2025

PANDEMONIUM

PANDEMONIUM                         

களேபரம்

களேபரம் எங்கும் எப்போதும் எதற்கும் எப்படியும் துவங்கிவிடும் திறன் படைத்தது.

சொல், செயல், பார்வை, குறிப்பு உணர்தல்  என்ற எதுவும் களேபரத்துக்கு வித்திடலாம்..

அதனால், என்ன களேபரம்? என்றால் விடை கிடைக்காது , கிடைத்தாலும் தவறாகவே  இருக்கும். அதனால் புது புது , கை , கால், இறக்கை, முளைக்கும் அல்லது புது கதையே கிளம்பும்.. அதற்கு ‘காசிப்  [GOSSIP ] என்ற வீண் வம்பு தான் அடிப்படை.. ஆனால் களேபரத்துக்கு அடிப்படை தேவை இல்லை. 

காலை மணி 8.15 வெளியே வந்து நிற்கிறார் பக்கத்துவீட்டு குமரேசன் . எதிர் வீட்டு லலிதா  இயல்பாகவே முகம் சுளித்து ஹும் ஹும்  நாத்தம் என்று புலம்ப , குமரேசன் தன்னை தான் சொல்லுகிறாள் என்று ஏம்மா நான் வந்தாலே நாறு தாஎன்றார்

லலிதா: நான் உங்களை பாக்கவே இல்லை ஆனாலும் ஹும் ஹும் நாறுது என்றாள் .

அப்படி என்ன நாறுது ?

என்னவா , ஒரே பூண்டு , மீன் நாத்தம்..

குமரேசன்   யார் வீட்டுலயோ சமைக்கறாங்க அதுக்கு என்ன செய்ய முடியும்? .  

லலிதா ஒன்னும் செய்ய வேண்டாம் நாத்தம் னு சொல்லக்கூடாதா ?

குமரேசன் வறுத்தா நாத்தம் வரும் -அதுக்கு என்ன?

வறுத்தா நாத்தம் மட்டுமா வரும் , வருத்தமும் வரும் .

என்ன வறுத்தா , வருத்தம் வருமா?

லலிதா ஆமா ஸ்வாமிக்கு விளக்கு ஏத்தும் நேரத்துல மீனையும் பூண்டையும் வறுத்தா ..?..

என்ன? வறுத்தா, ஸ்வாமிக்கு வருத்தம் வருமா?  லலிதா ஸ்வாமிக்கு என்ன வரும் னு தெரியாது ; ஆனா மனிதனுக்கு வெறுப்பும் கோபமும் வரும்..

வறுத்தா என்ன செய்யமுடியும் ?

லலிதா வெறுத்து போகும்.

வெறுத்தா வெறுத்துக்கிட்டே இருங்க --எங்களுக்கு என்ன?

லலிதா உங்களுக்கென்ன ? அடுத்தவங்க மூச்சு திணறி னாலும், மூர்ச்சையே போட்டாலும் எனக்கென்னன்னு போவீங்க.

இத பாருங்க  பூண்டு சேர்க்கல்லைனா, வெறுத்து போகாட்டியும் பெருத்துப்போய்டும் உடம்பு , அதுனால பூண்டுகண்டிப்பா சாப்பாட்டுல சேக்கணும் ;

லலிதா அதுக்காக, மூக்கைப்பொத்திக்கொண்டே வாழ முடியுமா?

முடியாது தான் . வாயை பொத்திக்கொட்டு இருக்கலாமே , இப்பிடி புலம்ப வேணாமே.

லலிதா என்ன பொலம்பறேனா ? பெரிய வார்த்தையெல்லாம் கிளம்புது , பேச்சுல நிதானம் இருந்தா நல்லது.

இப்ப நிதானம் இல்லாம என்ன பேசிட்டேன்.. மூக்கை மூடாம வாயை மூடுங்கனு தானே சொன்னேன்  . நீங்க ரொம்ப நிதானமாத்தான் பேசுனீங்களாக்கும் ?

லலிதா ஓ நிதானமில்லா நான் என்ன சொல்லிட்டேன் கல்யாண ரிசெப்ஷன் குதிரை மாதிரி தை தை னு தாண்டவம் ஆடறீங்க? 

பேச்சுவாக்கில மறைமுகமா எங்க பரம்பரையை இழுக்கறீங்களா?

லலிதா காலையில எனக்கு வேற வேலை இல்லையா ? பரம்பரையை இழுக்க? நீங்கதான் பூண்டு இல்லைனா பூண்டோடு அழிஞ்சுடுவோம் ங்கற லெவலுக்கு பேசறீங்க . இதுல பரம்பரையை இழுத்தேன்    பம்பரத்தை ஓடச்சேன் னு  தில்லானா மோகனாம்பாளுடைய  அம்மா மாதிரி சதிர் ஆடறீங்க ? நன் எப்ப பரம்பரைய இழுத்தேன்.?

நல்லா  யோசனைபண்ணி சொல்லுங்க,  பரம்பரையா இழுக்கவே இல்லையா?

லலிதா இல்லை , இல்லவே இல்லை .

ஓ பின்ன ஏன் "தாண்டவம்" னு எங்க அப்பா பேரை இழுத்தீங்க.

லலிதா தாண்டவனையும் மாண்டவனையும் நாங்க கண்டமாக்கும்?

இப்படி இரக்கமே இல்லாம உடம்பு சரியில்லாத எங்கப்பா தாண்டவன் முதலியாரை, மாண்டவன் னு  சாபம் விடறீங்களே? இது ஆண்டவனுக்கு அடுக்குமா?

லலிதா ஆண்டவன் , மாண்டவன், தாண்டவன் இவங்களை எல்லாம் நீங்க அடுக்குங்க , என்னை போய் அடுக்கும்மா னு வேலை வாங்க நினைக்கிறீங்களே. அந்த பப்பெல்லாம் இங்க வேகாது 

வாதங்கள் மாறி மாறி எகிற ஒரே கூட்டம் .

என்னது அந்தப் பப்பெல்லாம் இங்க வேகாதா?   பாத்துருவமா?

இப்ப என்ன சமையல் போட்டியா நடக்கப்போகுது என்று கூட்டத்தில் ஒரு குரல்.

இன்னொரு பெண் குரல் நேத்து ரேஷன்ல போட்டாங்கல்ல பருப்பு அது படு மோசம் னாங்க. ஒரு வேளை அதை வேகவெச்சு பாக்கறாங்க போல இருக்கு. அதான் பாத்துருவமா னு சவால் விடறாரு.

இதற்குள் பூண்டின் வியாபகம் நீங்கி விட , சண்டை எதற்கு துவங்கியது என்றே புரியவில்லை. . இப்ப ஏன் சண்டை போடறீங்க என்றார் ஒரு முதியவர். [இவ்வளவு நேரம் சண்டையை ரசித்தவருக்கு காபி நினைவு வந்துவிட்டது. சண்டை முடிந்துவிட்டால் எதையும் மிஸ் பண்ணாத திருப்தியுடன் வீட்டுக்குபோகலாமே என்ற ஒரு சிறு ஆசை தான்] 

பூண்டு நாத்தம் தாங்கலை என்றார் லலிதா

 பூண்டு நாத்தமா எங்கே என்று முஸ் முஸ்  என்று 2, 3 தடவை மூக்கை உறிஞ்சி விட்டு  ஒண்ணும் தெரியலையே என்றார்.

என்ன?  தெரியலையா ? முதல் ல டாக்டர் கிட்ட போய் நல்லா செக் அப் பண்ணுங்க, வாசனை தெரியாதவருக்கும் ரொம்ப தெரியவருக்கும் "நாள் நெருங்கியாச்சு" னு அர்த்தம் என்றார் லலிதா. அவ்வளவு தான் நமக்கும் காலை வேளையில் எதையாவது சொல்லி நிம்மதியைக்குலைத்துவிடுவாள் இந்தப்பெண்மணி என்று குண்டு வெடிக்கும் என்று கேள்விப்பட்டு தலை தெறிக்க ஓடுவார்களே  அதைப்போல் கூட்டம் சிதறிக் கலைந்தது..

மிஸ்டர் முருகேசன் S/O தாண்டவன் பெரும் கொதிப்புடன் வீட்டிற்குள் ஓடி வேலைக்கு தயாரானார்.

இப்படித்தான்  சச்சரவுகள், கை கலப்புகள் மற்றும் களேபரம் திடீரென்று வெடிக்கும்.  அதிலும் பெண்களின் குழாயடிச்சண்டை எனில் எந்த இலக்கண மரபிலும் இல்லாத  சொல்லாடல்.   சொந்த பந்தங்களை சண்டைக்கும் சந்திக்கும் இழுத்து "வாடி, போடி, அவளே , இவளே' என்று மார்கழி காலைக்  குளிரிலும் கூட  அனல் கொப்பளிக்கும்

1 comment:

  1. Question: Trace the origin of the word pandemonium
    Answer: கெட்டி மேளம் கொட்டும் போது , மஞ்சள் கயிறு ஏறியும் ஏறாமலும் இருக்கும் போது, பந்திக்கு முந்தும் தருணம் - பந்தி மோனியம்

    ReplyDelete

ADAMANCY

  ADAMANCY அடம் பிடித்தல் முற்பிறவியில் பாவம் செய்திருந்தால் 25- 28 வயதிற்குள் இந்த தலைப்பு உங்களை பல வகையிலும் பிடித்து உலுக்கி நிலை   ...