Wednesday, April 30, 2025

DIRECTOR: DADA MIRASI -2

 DIRECTOR:  DADA MIRASI -2

இயக்குனர்: தாதா மிராசி-2

தமிழ் திரைப்பட இசையை பொறுத்தவரை 1964 ம் ஆண்டு ஒரு பெருமை பெற்ற ஆண்டு எனில் சர்வ உண்மை. சுமார் 30 படங்கள் அவ்வாண்டில், எனினும் அநேகமாக அனைத்துப்படங்களிலும் ஏராளமான வெற்றிப்பாடல்கள் , இன்றளவும் மங்காப்புகழுடன் வலம் வரும் ஆக்கங்கக்ள்.. இதென்ன பெரிய சாதனையா என்போர் கவனிக்க : படம் ஒன்றுக்கு 7, 8 பாடல்கள், சிலவற்றில் 10 பாடல்கள், அனைத்திலும் கண்ணதாசன்/ வாலி தனித்தோ அல்லது இருவருமோ பாடல் புனைந்தனர்  , களத்திற்கும் காலத்திற்கும் உற்ற பாடல்கள். எனினும் அலுப்போ சலிப்போ தோன்றாவண்ணம் கவனம் ஈர்த்த பாடல்கள், சொல்லும் சுவையும் கருத்தின் ஆழமும் இன்று அருகி சுருங்கிப்போய் விட்டாலும் , 1964 ன் பாடல்கள் சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர்களாய்   திகழ்வது ஏன் அல்லது எப்படி ? என்றால்  ஒரே ஒரு காரணம் தான். ஆம் பாடல்கள் சம்பிரதாய சடங்குகளாக இல்லாமல் காட்சிக்கு வலு சேர்க்கும் திறனும் தரமும் கொண்டவை. .

இந்த-- காட்சிக்கு வலு சேர்ப்பது என்பது கூட்டு முயற்சி யாக விளைந்த பலன்கள்.

இயக்குனர் தான் தலைவர் அந்த தலைமையை அனைவரும் ஏற்று மதித்து செயல் படுவர் -இசை அமைப்பாளர்கள்  உட்பட . காட்சிகளின் விவாதம் மணிக்கணக்கில் -இயக்குனர், நடன இயக்குனர், கவிஞர் இசை அமைப்பாளர் , தேவைப்பட்டால் தயாரிப்பாளரின் வழிகாட்டுதலும் கேட்டு பெறப்படும், ஏனெனில் பொருளாதார நெருக்கடிகளை புறந்தள்ளிவிட்டு கையை சுட்டுக்கொண்டு அவதிப்படும் இக்கால வழக்கம் அந்நாளில் இல்லை. அனைவருக்கும் மிகுந்த அக்கறை உண்டு , தயாரிப்புகள் தொடர்ந்தால் தான் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்வு. எனவே பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழிக்க எவரும் துணிய மாட்டார்கள். இன்று வாத்து , வயிறு, முட்டை அனைத்தையும் சிதைத்து ஒரே படத்தில் நடித்து உயர்ந்துவிடத்துடிக்கிறார்கள் அதன் விளைவே நினைவில் நிற்காத பாடல்களும் படங்களும். இவை பற்றி இப்போது என்ன என்கிறீர்களா? நெடிதுயர்ந்த ஆல  விருட்சங்களுக்கும், பிறக்கும்முன் இறக்கும் குறைப்பிரசவங்களுக்கும் வேறுபாடு என்பது நல்ல ஆரோக்கிய  ஆக்கங்களுக்கும், பிழைக்கவே வழி இல்லாத நோஞ்சான்களுக்கும் உள்ள   அதே வேறு பாடு தான் [balanced diet Vs malnutrition] எனில் மிகை இல்லை   

இவ்வளவு விளக்கமும் விசனமும் சொல்ல விழைவது காலப்போக்கில் சினிமா ஒரு பெரும் வியாபாரமாக பெருகியது ஆனால் நடிகை நடிகையர் கண்ட பொருளாதார வளர்ச்சியும் , தயாரிப்பாளர் கண்ட வீழ்ச்சியும்  ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அமைந்தன; கதையில் நடிப்பில் , இயக்கத்தில் ,பாடல்களில், இருந்த பழைய வலிமை தொலைந்தது. பெரும் பொருட்செலவில்  வந்த படங்கள் எதிலாவது பேசும் படி ஏதும் உண்டா ? எனக்கு தெரியவில்லை. இந்த சூழலில்

உன்னை ஒன்று கேட்பேன் [புதிய பறவை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

 

திடீரென்று ஒரு பெண்ணை இப்போது பாடுவார் என்று அறிவித்த நிலையில் அந்த பெண் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் . அதுவும் கப்பலில் பயணிப்போர் குதூகலிக்கும் சூழல் . மாட்டிக்கொண்டுவிட்ட பெண் தனது இயலாமையை வெளிப்படுத்த "உன்னை ஒன்று கேட்பேன் , உண்மை சொல்ல  வேண்டும் , என்னைப்பாட ச்சொன்னால் என்ன பாட த்தோன்றும்" என்று வினா தொடுத்துப்பாடுகிறாள். கப்பல் என்பதால் மேற்கத்திய இசை கொடிகட்டி பறக்கிறது . அந்நாளில் மேற்கத்திய இசைக்கூறுகளை அறிந்த பலரும் இவ்வளவு நுணுக்கமான இசையா என்று சிலாகித்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன். இசையை நன்கு கவனியுங்கள் பியானோவை அடிநாதமாகக்கொண்டு கிளம்பும் துடிப்பான பாவம் , சுசீலாவின் நேர்த்தியான அலைபோன்ற .குரல் சஞ்சாரம் . குரலுடன் பயணித்த ஒரே கருவி ட்ரம் மட்டுமே [நோயல் க்ராண்ட் அவர்களின் இறகு வருடல் [FEATHER  TOUCH ] வாசிப்பு . எம் எஸ் வியின் PET போங்கோ இடை இசையில் மட்டுமே வருவது  , இப்பாடலில் அவர் குரலின் நேர்த்திக்கு கொடுத்த முன்னுரிமை என்பதை இங்கே பதிவிடுகிறேன். தொடர்ந்து வரும் கருவிகள் முதலில் ட்ரம்பெட் , பியானோ, கிட்டார் போங்கோ இடை இசையாக , சாரிசாரியாக ஆண்களும் பெண்களும் பின்னிப்பின்னி ஆடினாலும் கோரஸ் [குரல்கூட்டம்] இல்லாதது மற்றுமோர் விலகல் எம் எஸ் வியின் பார்முலா விலிருந்து, அதுவும் பாடும் குரலை முன்னிறுத்த தான். அடுத்த தொகுப்பில் சாக்ஸபோன் , பியானோ, மாண்டலின் போங்கோ அதிர்வு என்று இசை மழை பொழிந்த பாடல்.. கேட்டு மகிழ இணைப்பு    

Unnai ondru ketpen https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0 puthiya 1964 ps

'உன்னை ஒன்று கேட்பேன்'    பாடலை INDIA GLITZ  நிகழ்ச்சியில் இசைக்குழுவின் பங்களிப்பாக ஜெயஸ்ரீ பாட ரசிகர் கள்  மகிழ நீங்களும் மகிழ்வீர் . இணைப்பு இதோ

011 Unnai Ondru Ketpen 2019 jayasri

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பழைய நடிகை சௌகார் ஜானகி அவர்களின் பழையநினைவுகளை அவரே விவரிக்க கண்டு/கேட்டு  மகிழ்வீர்

032 SPEECH Sowkar Janaki Speech Saree sowcar

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து [புதிய பறவை-1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

இப்பாடலுக்கும், இதன் இசைக்கும் இருக்கும் வசீகரம் சொல்லி மாளாது. இப்பாடலை, முணுமுணுக்காதவர்கள் அன்றைய தலைமுறையில் எவரும் இலர்.

மிக எளிய சொற்கள் அனால் ஆழ்ந்த பாவங்கள், அனைத்தும் சுசீலாவின் குரலில். மென்மேலும் கேட்கத்தூண்டும் பாடல். ஒருவர் பாட , இருவர் நடித்த காட்சி  துல்லியமான ஒலிப்பதிவில் நம்மை ஆட்கொள்ளும் கவிதை . கேட்டு மகிழ இணைப்பு இதோ   

chittukuruvi

https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0 puthiya 1964 ps

BONUS VIEO

https://www.youtube.com/watch?v=tQbo2X-pCik GS MANI

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -29

  LET US PERCEIVE THE SONG -29            பாடலை உணர்வோம் -29 இது போன்றே ஒரு டூயட் அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்ன ? பாடலை சொல்வ...