IN OUR SKIES
நமது வானில் ..
அன்பர்களே
கதையாவது , கத்தரிக்காயாவது என்று சென்ற வாரமே நமது வாசகர்கள் கிட்டத்தட்ட இரங்கற்பா [ELEGY] எழுதிவிட்ட பின் , கதை எழுத ஆசையும் அவசியமும் இல்லை. எனவே செவ்வாய்க்கிழமைகளில் நல்ல உருப்படியான எதையாவது எழுதலாம்; அப்போது தான் படிக்காமல் கடந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; அதுவே காலபோக்கில் BLOG பதிவுகளுக்கு முடிவு கட்டிவிடும். எப்போதுமே மிகவும் ஆழ்ந்த கருத்துகளுக்கு ஆதரவோ, ஆசியோ இருந்ததில்லை , ஏனெனில் நம்மவருக்கு திரையில் தோன்றும் கிறுக்கன்களே மாபெரும் ஆளுமைகள் . வாழ்க பாரதம் . இப்படி ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்க, அமைதியாக கருமமே கண் நாயனார் என்று ஒரு சிறிய பிரிவினர் இந்திய திருநாட்டின் இறையாண்மையையும் , தன்னிறைவையும் எட்டு திக்கும் பறைசாற்றிய பராக்கிரமத்தை உலகமே விக்கித்துப்பார்த்ததை சற்று கவனியுங்கள் .
அடைந்தால் இன்ஜினீரிங், இன்றேல் இறைவன் திருவடி என்று அலையும் பெற்றோர் மற்றும் மாணவ கூட்டங்களே கண்ணைத்திறந்து பாருங்கள்.
ஆம் வான் வெளி கல்வி, அது தொடர்பான தொழில் நுட்பங்கள், விண் வெளி , செயற்கைகோள் தொழில் நுட்பம், எண்ணற்ற வான் கோள் கல்வி ஆராய்ச்சி என குவிந்து கிடைக்கும் எதுவும் கண்ணில் படாமல் எப்போதும் ட்யூஷன், மார்க், இன்ஜினீரிங் இன்றேல் மருத்துவம் [அடைந்தால் மஹாதேவி , இன்றேல் மரண தேவி என்று பி எஸ் வீரப்பா ரேஞ்சுக்கு பித்து பிடித்து அலைவதை நிறுத்துங்கள்]. இன்னொரு புறம் தமிழக அரசியல் வாதிகள் [கல்விக்கூடம் கண்டறியா] கல்வித்தந்தைகள் "கிராமப்புற மாணவர்கள்" என்று கொச்சைப்படுத்தும் ஆசாமிகள்.
ஆகச்சிறந்த விஞ்ஞானிகள் பலரும் கிராமப்புற மக்களே [அதிலும் பல நோபல் பரிசு பெற்ற ஆளுமைகள்] மற்றும் இந்திய திருநாட்டின் சர் சி வி ராமன், சந்திரசேகர், பின்னாளில் திரு ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் ,
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்ட பலரும் கிராமப்புறத்தவர்களே. அவர்களுக்கு இணையாக பெருநகரங்களில் விளைந்த கூர்மதி யினரை பட்டியல் இட இயலுமா? தனது கனவில் உதித்த பல தேற்றங்களை
[THEOREMS ] உலகே வியந்து மயங்கி நிற்பதை உணரும் முன் மறைந்து பட்ட திரு ஸ்ரீனிவாச ராமானுஜன் எந்த நகர வாசி ? அவரொத்த வேறு கணிதவியல் ஆளுமை இன்றளவும் இல்லை என்கிறார்களே? -கிராமப்புற மாணவர்களை அவமதிப்பவர் எவரும் அறிவின் அடிப்படையி ல் சிந்திக்கும் திறன் கொண்டிலர் என்று ஆணித்தரமாக நம்புகிறேன் வசதியான வாழ்வுக்கும் திறமைக்கும் தொடர்பு இருந்ததாக நான் அறியவில்லை. உங்களில் எவருக்காவது தெரிந்தால் விளக்குங்கள். இத்துணை பீடிகையும் எதற்கு எனில் அறிவை வளர்த்துக்கொண்டால் வாய்ப்புகள் கதவைத்தட்டும், மார்க்கை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் எவரையும் மார்க் சுமந்ததாக கேள்விப்பட்டதில்லை.
சரி, தொடங்கிய [நமது வானில்] தலைப்பிற்கு வருவோம்
குங்குமப்பொட்டின் மங்கலம் என்று பாடாத குறையாக அனைத்து நாடுகளும் இந்தியாவின்
வான் வெளி ஆதிக்கம் குறித்து வியந்து ஆச்சரியமும் அச்சமும் ஒருசேர திகைத்து நிற்க காரணம்
நமது நாட்டின் வான் காப்பு என்னும் AIR
DEFENCE மற்றும்
மேலாதிக்கம் என்னும் SUPREMACY என்றே
சர்வ தேச வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் . அது ஏன் எனில் டெக்னாலஜி என்றால் ஏதோ
தங்களை விஞ்சியவர் எவரும் இல்லை என்ற எல்லைகடந்த நம்பிக்கையும் [அகம்பாவம் என்று கூட
சொல்லலாம்] கொண்டு இருந்த நாடுகள் போரிலும் போர்க்கருவி தொழில் நுட்பங்களிலும் இந்தியா
இன்னும் வளர நீண்டகாலம் தேவைப்படும் என்று நினைத்தார்கள் போலும். [கொரோனாவின் கோரா தாண்டவத்தை இந்திய அறிவியல்
கட்டுப்படுத்தியதை கண்டபின்னரும் -சிந்திக்க
மறுக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது].
இதில் பெரிதும் அச்சம்/கௌரவம்/வியப்பு
ஏற்படுத்திய விஷயங்கள் நமது ரேடார்கள் , நமது ஏவு கணைகள் , கிட்டத்தட்ட அயண் டோம் போல்
செயல்பட்ட நமது தற்காப்பு தொழில் நுட்பம். காரணம் நமது குங்குமப்பொட்டு செயல்முறை
[ஆபரேஷன் சிந்தூர்] கொடுத்த துல்லிய அடியில் வீழ்ந்த கருவிகள் அமெரிக்க சீன மற்றும்
துருக்கிய விமானங்கள், போர்க்கருவிகள் ட்ரோன்கள் மற்றும் பெரிதும் பேசப்பட்ட ரேடார்கள்.
அதிலும் மின்னல் வேகத்தாக்குதல்
போல் நிகழ்ந்துவிட்ட சம்பவத்தில் நொறுக்கப்பட்ட தீவிரவாத கட்டமைப்புகள் , விமான தளங்கள்
ஓடு பாதை மற்றும் ஆயுதக்கிடங்குகள் இவற்றை சிதைத்து பேயாட்டம் ஆடிய ஏவுகணைகள் ஆகாஷ்
மற்றும் ப்ரம்மோஸ் + பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ரபால் [RAFALE] இவற்றின் விரைவும் துல்லியமும் எதிரிகளை நிலை குலைய வைத்தது என்பது நிதர்சனம் ..
நமது முப்படைகளின் அதிரடி ஆட்டம்
கிட்டத்தட்ட 'வேலி தாண்டாமலே நிகழ்த்தப்பட்ட" அஸ்திரத்தாக்குதல். எங்கிருந்து
வந்தது நொடியில் உடைத்தெறிந்து பிய்த்துவிட்டதே என்று புலம்புவதைத்தவிர எதிரிக்கு வேறு
வழியோ , வழிகாட்டுதலோ இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்படி என்றால் எதிரியைத்தடுக்கும் ராடார்கள் [அமெரிக்க சீன தயாரிப்புகள்] என்ன செய்துகொண்டிருந்தன?
இந்தக்கேள்வி உலகை உலுக்க காரணம் இந்திய ஏவுகணைகள் -- சிரித்துக்கொண்டே சிதறவிட்ட எதிரியின்தீவிரவாத
பட்டறைகள் கூடங்கள் , சுமார் 23 நிமிடங்களில் துவைத்துப்போட்டு விட்டுவிட , எதிரி ராராணுவத்தாக்குதலை
கட்டவிழ்த்துவிட , நமது முப்படைகள் எதிராளியின் ராணுவ முயற்சிகளை முடக்கும் படி, எல்லை அருகில் எதிரியின் ராணுவ நிலைகள், வான் வழி தாக்கு கருவிகள்,ட்ரோன்கள்
, விமானநிலையங்கள்,ஓடுபாதைகள், மற்றும் ஆயுதக்கிடங்குகள்
என்று அடிப்படைக் கட்டமைப்புகளை சிதைத்த பட்டியல் வெகு நீளம் .
இந்த துரிதமும் , துல்லியமும் உள்நாட்டு
தொழில் நுட்பத்தில் உருவான ஆகச்சிறந்த வடிவமைப்பில் பிறந்த ஆகாஷ் [Akash] மற்றும் இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான ப்ரம்மோஸ் [BrahMos] ஏவுகணைகள் வழங்கிய
பங்களிப்பு.
“ஆகாஷ்“ முற்றிலும் ஒரு இந்தியக்குழந்தை -மேக் இன் இந்தியா [ஆத்ம நிர்பர் ] திட்டத்தில் உருவான ஒன்று .
இந்த வடிவமைப்பினை தலைமை ஏற்று நிறைவேற்றியவர் திரு ப்ரஹ்லாத ராம ராவ் , கர்நாடக விஞ்ஞானி இந்திய பாதுகாப்பு நிறுவனத்தில்
1990 முதல் 2005 வரை சுமார் 15 ஆண்டு கால உழைப்பில் மிகத்துல்லியமாக திட்டமிட்டு, வடிவமைத்து அனைத்து தளங்களிலும், தரை , வான், நீர் என முப்படைகளின் தேவைக்கும் உதவிடும் வகையில் திரு ராம ராவ்
தலைமையில் உருவானதே "ஆகாஷ்" . இந்திய நுண்ணறிவு, திட்டமிடல், ஒருங்கிணைப்பு எதிர்நோக்கு திறன் [ANTICIPATORY
CAPABILITIES ] அனைத்திற்கும் சான்றாய் அமைந்த "ஆகாஷ்" உருவான கதையின் முக்கிய அம்சங்களே இந்த தலைப்பில் நாம் பேச இருப்பது
தொடரும்
அன்பன்
Well written tribute to operation Sindoor.
ReplyDeleteExcellent writing on the heights of our Bharath's sky ...
ReplyDeleteGood
ReplyDelete