Tuesday, June 3, 2025

LET US PERCEIVE THE SONG -25

 LET US PERCEIVE THE SONG -25

பாடலை உணர்வோம் -25   june 4

அவளுக்கென்ன அழகிய முகம் [ சர்வர் சுந்தரம் 1965' வாலி , விஸ்வநாதன் ராமமூர்த்தி , டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி

 

இது ஒரு  சுவையான  பின்னணியில்  விளைந்த பாடல் காட்சி . கிட்டத்தட்ட படம்  முடிந்துவிட்ட நிலையில்       திரு வி எம் குமரன்  அவர்கள் , படம் தயாரிக்கும் தொழில் குறித்த பல தகவல்கள் இருந்தாலும் பாடல் பதிவு குறித்த எந்த காட்சியும் இல்லை இது ஒரு குறையாக தோன்றுகிறது என்று கிருஷ்ணன் பஞ்சு விடம் விவாதிக்க , சரி அதையும் செய்து விடுவோம் என்று பெரும் திட்டமிடல் இல்லாமலே அமைந்த காட்சி. படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்; ஆனால் இந்த ஒரு பாடல் மட்டும் கவிஞர் வாலி [அவசரத்துக்கு திரு வாலியை நெருக்கி பாடல் வாங்க முடியும்]  வாலி வந்தாயிற்று காட்சியை விளக்கி பாடல் எழுதியாயிற்று. எம் எஸ் வி பாடலுக்கான ட்யூன் , இசை எல்லாவற்றையும் அமைத்து பாடல் பதிவாயிற்று. சரி இந்த பாட்டு யாருக்கு என்று டி எம் எஸ் கேட்க குமரன் இது நாகேஷ் நடிக்கும் காட்சி என்றாராம்.. ஐயய்யோ இவளவு நல்ல பாட்டை போய்-- நாகேஷுக்கா ? சிவாஜி/ எம் ஜி ஆர் யாரையாவது கௌரவ வேடத்தில் நடிக்க வைங்க என்றாராம் டி எம் எஸ். இதை ஒரு சவாலாக செய்து காட்ட வேண்டும் என்று நினைத்தாராம் திரு குமரன் .    இப்போது திரு குமரன் திரு எம் எஸ் வி இடம் சார் இந்த பாடலை நீங்கள் பதிவு செய்வதாக படப்பிடிப்பு செய்ய வேண்டும் நீங்கள் கண்டக்ட் செய்ய , உங்கள் குழுவினர் இசைக்கருவிகளை இயக்கி காட்சியை படம் பிடிப்போம் ; நீங்கள்  சூட் அணிய வேண்டும் அனைவருக்கும் சீருடை [யூனிபாம் ] அணிவிப்போம் என்றார். எம் எஸ் வி யோ நான் எப்ப சார் சூட் போட்டு பாத்தீங்க நமக்கு வேட்டி தான்  என்றாராம். இல்லைசார் நீங்க ரஷ்யா போனப்ப சூட் போட்ட போட்டோ பாத்திருக்கேன். படத்துல சூட் போட்டா தான் நல்ல இருக்கும் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டார். பின்னர் படத்தில் இந்தக்காட்சியை மிகுந்த ஆர்வத்துடன் விசில் பறக்க ரசிகர்கள் திரை அரங்குகளில் குதூகலித்ததெல்லாம் அனைவரும் அறிவோம். .  . இவ்வனைத்தையும் விட , இவ்வளவு இசைக்கலைஞர்களை ஒரே காட்சியில் தெளிவாக பார்க்கமுடிந்ததை அன்றைய ரசிகர்கள் வெகுவாக பாராட்டியதை நினைத்துப்பார்க்கிறேன்.

இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் சில முக்கிய கலைஞர்கள் அடையாளம் காட்டி அன்பர்களுக்கு விளக்கலாம் என நினைக்கிறேன்.

இந்தக்கவிதை-- காதலர்கள் ஒருவரை ஒருவர் வர்ணித்து மகிழ்வதாக புனையப்பட்டது. ஆனால் இடையில் ஆங்கிலச்சொற்கள் கலந்து     ஒரு இயல்பான ஓட்டத்தில்  பாடல் பயணிக்கிறது.அதிலும் கிண்டல் வேறு

'அன்புக்காதலன் வந்தான் காற்றோடு [நாகேஷ் ஒல்லியான நபர்], அவள் நாணத்தை மறந்தாள்  நேற்றோடு  . [அதாவது தடையில்லா நெருக்கம் என்ற உணர்த்தல்] அதே போல் வாவா என்றொரு விழியில்சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் என்று நெருக்கத்தின் பறைசாற்றல், இப்படி பல தருணங்கள் பாடலில்

இது போன்ற பல அமைப்புகள் இப்பாடலில் விரவிக்கிடக்கக்காணலாம். அது வாலியின் விரைவுக்கற்பனையின் வெளிப்பாடு. சரி வேறு பாடல்களை கவிஞர் கண்ணதாசன்   புனைய இந்த ஒரு பாடலுக்கு ஏன் வாலி? 

அதுதான் திரு வாலியின் ராசி ; அவசரத்துக்கு அழைத்தவர்களுக்கு ஏமாற்றம் தராத கவி , மேலும் அன்றைய இசை அமைப்பாளர்கள் அனைவரின் வேகத்துக்கும் ஈடு கொடுத்து பணி ஆற்றும் திறனாளி

.[சொல்லப்போனால் அனைத்து பிடிவாத தயாரிப்பாளர் கூடாரங்களுக்குள்ளும் காற்றென புகுந்து புறப்படும் வல்லமையும் , தேவையை நிறைவேற்றும் வேகமும் அன்றைய நிலையில் வாலிதான் மறுக்கவொண்ணாத ஆபத்பாந்தவன்..இதைக்குறித்து சந்தர்ப்பம் வரும் போது விளக்குகிறேன்]

ஒரு வகையில் நாட்டியப்படல் , வெற்றி நாட்டிய பாடலும் கூட. இப்பாடலின் வெற்றிக்கு பல அமைப்பு ரீதியான காரணங்கள் உண்டு.  பாடலின் பல்லவி ,வெட்ட வெளியில் சட்டை அணியாதவனின் வெற்று உடல் போன்ற துவக்கம்   திடீரென்று --" அவளுக்கென்ன -அழகிய முகம் " அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இருளினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ளவரை தொடர்ந்து வரும்

என்று ஒன்றிலிருந்து ஒன்றாக பாடல் பயணிக்கிறது.  இப்படி நீண்டு பயணிப்பதால் , பல்லவி தொடர்ந்து கொண்டே போகிறது.

இசை அமைப்பில் பாடலை மெருகேற்றியுள்ள உத்திகள் . பாடலை முற்றிலும் தொடராமல் , ஆங்காங்கே   

 இடை வெளி அமைத்துப்பாட , கவிதையின் வடிவமே வேறு அவதாரம் கொண்டுள்ளது

அவளுக்கென்ன ....

அழகியமுகம்

அவனுக்கென்ன

இளகியமனம் 

நிலவுக்கென்ன

இரவினில் வரும்

உறவுக்கென்ன

உயிருள்ளவரை தொடர்ந்து வரும் என்று 'அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை விதைக்கும் புதுவகை அணுகுமுறை  இது பாடலின் structure என்ற உடல் அமைப்பை மாற்றி அமைத்து பாடலே ஒரு மாறுபட்ட தோற்றம் கொள்ள உதவியது . இது பாடலின் அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவி முற்றிலும் மாறுபட்ட மெலடி என்னும் நளினம் மிக்க வடிவம் பெற் றது. இதனை 7 முதல் 10 நிமிடங்களில் எம் எஸ் வி கட்டமைத்ததாக குறிப்புகள் உள்ளன.

இந்த அரிதாரம் பூசுவது தான் இசைக்கோர்வை என்ற ஆர்க்கெஸ்ட்ரேஷன். அது எடுத்த செயல் வடிவம் தான் அதிரடி தாள நடை .

அதுவே  பாடல் தொடங்குமுன் அமைந்த விலகல் . அதாவது தாளம் முதலில் பாடல் பின்னர். இது அதையும் கடந்து தாளம் ,உடனே மீட்டல் -மாண்டலின் , கிட்டார் , அக்கார்டியன் என்று பயணித்து  பாடல் ஆண் குரலில் துவங்கி  "அவளுக்கென்ன ...  உயிருள்ள வரை தொடர்ந்து வரும் " என்றதும் உடனே கொத்தாக brass கருவிகள் உயிர் கொண்டு ட்ரம்பெட் சாக்ஸ் , க்ளாரினெட் இன்னும் சில கூட்டாக ஒலிக்க நம்மை இழுத்துச்செல்வதை உணரலாம்.

இவ்வனைத்துக்கும் ம் மந்திரத்துவக்கம் -- எம் எஸ் வி அரங்கேற்றிய  அதியற்புத உடல் மொழி என்னும்  signaling;  அதாவது இசைக்குழுவினரை ஒரு புள்ளியில் துவக்கி வரிசையாக உலவவிட்டு பாடகரை [டி எம் எஸ்] பாடச்சொல்லி கை  அசைப்பது , அந்நாளில் திரையில் பெரும் வரவேற்பையும் கைத்தட்டலையும் பெற்ற புதுமை. நன்றாக கவனியுங்கள்  எல்லோரையும் தயார் நிலையில் இருக்கவைத்து ரெடி ரெடி என்று one , two சற்று இடைவெளிக்குப்பின் four என்றதும் பாய்ந்து கிளம்பும் அதிரடி தாளம் ட்ரம் , காங்கோ, போங்கோ என முன்வரிசையில் [முதலில் வாலி ] நோயல் க்ராண்ட், மற் றொருவர்,  [சங்கர்]கணேஷ்  இளம் கலைஞராக தாளம் வெடித்துக்கிளம்பி சுமார் 25 வினாடிகளில் ஆண் குரல் மீண்டும் 47 ம் நொடியில் துவங்கி ஒரு 29 வினாடிகள் braas கருவிகள், பின்னர் ஒரு 38 வினாடிகள் மீ ட்டல் கருவிகள்              வலது வரிசையில் மாண்டலின் [MSராஜு], கிட்டார் [புகழ் பெற்ற பிலிப் ], அருகில் அக்கார்டியன் [மங்களமூர்த்தி] மூவரும் குழுவாக இசைக்க திரையில்  நாகேஷ் -சாந்தா நடனம் . [பின்னவர் நடன உதவி இயக்குனர்] பாடல் முற்றிலும் சிறப்பான அபிநயங்கள் பாவங்கள் என பயணிக்க ஒரு பாடல் உருவாக்கம் என்பதுஎப்படி என முக்கிய பகுதிகளை காட்சிப்படுத்திய ஒரே படம்/ காட்சி.. பாடல் முடியும் தருவாயில் க்ரேன் மூலம் படப்பிடிப்பு நிகழ காமெராவின் பார்வைக்கு வெளியே, நடன இயக்குனர் ஆடிக்காட்டுவதையும்,காட்சியில் இடம் பெறச்செய்துள்ளனர். மொத்தத்தில், ஒரு வித்தியாசமான அனுபவம் திரை ரசிகர்களுக்கு. பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=qIwwwaNI8D8 avalukkenna  ss vali msv tkr

tms lre

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

MADURAI -2

  MADURAI -2 மதுரை-2 மதுரை குறித்த எனது முந்தைய   பதிவு சுமார்  65 க்கும் மேற்பட்ட வாசகர்களை ஈர்த்துள்ளது . சமீப நாட்களில் இது...