Tuesday, June 10, 2025

LET US PERCEIVE THE SONG -26

 LET US PERCEIVE THE SONG -26                   

பாடலை உணர்வோம் -26  

ஒரு பாட்டுப்போட்டியில் நடுவராக இருந்த பெண்மணி, ஒரு ஆர்வமும் திறமையும் அபரிமித உழைப்பையும் வெளிப்படுத்திய இளைஞன் தான் எனது முதல் தேர்வு என்று உளமார பாராட்டி வாழ்த்தி பரிசு வழங்கி , நீ சென்னைக்கு வா உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று அறிவுரைத்தார் [பின்னணிப்பாடகி எஸ் ஜானகி] 1962-63 கால கட்டத்தில். அம்மையாரின் ஆசியை வென்ற அன்றைய இளைஞன் திரு எஸ் பி பாலசுப்ரமணியன் என்ற எஸ் பி பி என்ற பாடும் நிலா என்ற பாலு..

நிலவு எத்துணையோ தருணங்களில் எஸ் பி பி யின் வாழ்வில் ஒன்றி விட்டதை ஒன்று விடாமல் நினைத்துப்பார்க்கிறேன். அதிலும் பாருங்கள் முதலில் தமிழில் பாட வாய்ப்பு தேடி சென்ற இடம் ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனம். புதியவர்கள் பலரை அறிமுகம் செய்த அந்நாளைய ஆளுமை அல்லவா ஸ்ரீதர்?     உபயம்  விளம்பர டிசைனர் பரணி என்ற பரணிகுமார். ஸ்ரீதர் சொன்னாராம் நீங்க நல்லா பாடறீங்க ஆனா குரல் பொருத்தம் முடிவு செய்வது எம் எஸ் வி தான் , நீங்க   நாளை க்கு வாங்க 

நாளைக்கு வந்தவன் ஹிந்திப்பாடல்களை பாடிக்காட்ட , எம் எஸ் வி "தமிழ் பாட்டு பாடுவீங்களா ?  எஸ் பி பி                              எம் எஸ் வியிடம் பாடிய பாடல் "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடல். குரல் நல்லா இருக்கு;ஆனா தமிழ் சரியில்லை , இப்படி பாடினா நம்ம 2  பேரையும் ஜனங்க   கல்லால் அடிப்பாங்க . போய் தமிழ் உச்சரிப்பெல்லாம் சரியா கத்துக்கிட்டு வாங்க என்று அனுப்பி 2 ஆண்டுகள் கழித்து அவருக்கு வந்த வாய்ப்பு ஹோட்டல் ரம்பா வில் எல் ஆர் ஈஸ்வரி யுடன் பாடல். படம் வரவில்லை பாடல் வரவே இல்லை.

அடுத்தது சாந்தி நிலையம் -இயற்கை என்னும் இளைய கன்னி , அதன் பின்னர் பாலு எட்டிய உயரம் வேறுஎவர்க்கும் வாய்க்காத  உச்சாணி. நிலவே என்னிடம் நெருங்காதே என்று பாடி வாய்ப்பு தேடிய பாலுவால்  நிலவை ஒதுக்கவே முடியவில்லை .எம் ஜி ஆருக்கு பாடிய 1000 நிலவே வா என்று முழங்கி தமிழகம் யார் இவர் என்று வெறிகொள்ள வைத்த இளைஞன்.

 எம் எஸ் வியின் செல்ல குழந்தைவிடுவாரா அதியற்புத பாடல்க்ளை கொடுத்து பாலுவை உயர்த்திய பேராசான்  எம் எஸ் வி.                    

பாலுவின் சொல்லில்      "தமிழி ல் எனக்கு ஸ்வரப்பிச்சை இட்ட மஹான்என்று எம் எஸ் வியை நினைவு கூர்வார். இதெல்லாம் ஏன் என்கிறீர்களா?  பாடலை உணர்வோம் என்று சொல்லி ஒரு பாடலைத்தொட .    சரியான முகாந்திரம்  இருந்தால் சுவை கூடும்.

இதுவே இன்றைய அறிமுகம். சரி எஸ் ஜானகி யுடன் எஸ் பி பி தமிழில் பாடிய முதல் டூயட்.

 ஜானகியை கண்டுபிடித்தவர்கள் கவனிக்க பாடல் வந்த ஆண்டு 1969. சரி ஏன் எஸ் ஜானகி? ஏற்கனவே சுசீலாவுடன் பாடியுள்ளாரே? அதெல்லாம் எம் எஸ் வியின் கணக்கே வேறு. ஆம் பாடலில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா , So ஜானகி தான் ஆட்டோமேட்டிக் சாய்ஸ்

நினைவிருக்கிறதா? நிர்மலாவுக்கு வெண்ணிறஆடையில் துவங்கிய பாடல் குரலே ஜானகி தான் அது எம் எஸ் வி பார்முலா.

னிதர் ஜமாய்த்துவிட்டார் எப்படி ? கொஞ்சம் பொறுங்க அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சுடுவோம்.

பௌர்ணமி நிலவில் [கன்னிப்பெண் -1969] வாலி -விஸ்வநாதன் -எஸ் பி பி , எஸ் ஜானகி.

இது ஒரு holistic package, இதுக்கு இணை இது தான் -எப்படிப்பார்த்தாலும் .  

பாடல் சொல்வது என்ன?

நாயகன் தன்னை மறந்து சிதார் மீட்டிக்கொண்டிருக்க , அவனை தேடி வந்த காதலி சிதாரின் லயிப்பில் அவனை நெருங்கி அவன் கையைப்பற்றுகிறாள் . அது வரை இசையில் மூழ்கிக்கிடந்தவன் இப்போது ஸ்பரிச ஆக்கிரமிப்பில் உள்ளம் திறந்து பாடுகிறான்.  அதீத கற்பனையில் பாடல் வெடித்துக்கிளம்புவதை உணரும் வகையில் மிகுந்த கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்றை ஒன்று தழுவ கவிஞனின் [வாலி] கற்பனை சிறகடித்து இரவுப்பறவையாய் நளினம் காட்டக்காணலாம்.

ஆம் ,

 பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ,

கதை கதையாக படிப்போமா என்று பெண் பல்லவியில் சங்கமிக்க அப்புறம் பாடல் சீறிப்பாயும் கடல் அலை போல் ஆர்ப்பரித்து ஒரே துள்ளல் பயணம் தான்

தழுவலில் துவங்கிய பொறி பற்றிக்கொள்ளாமல் என்ன செய்யும்? கவிஞனே பொறியில் சிக்கிவிட்ட நிலையில் இசை அமைப்பாளர் [எம் எஸ் வி] பொறியை பெரிய பிழம்பாக்கி பாடல் பல களங்களிலும் பெட்ரோல் நெருப்பென வெப்பம் பீறிட அலையும் இசை.

நிறைய விளக்கம் தேவைப்படுகிறது. பொறுங்கள்

பாடலின் சரணம் நெடுகிலும் இசையும் சொல்லும் சொல்லின் பொருளும் ஏகபோக ஆதிக்கம் செய்ய, சிக்கிக்கொண்டு தவிப்பது நாம் தான்.                               பாருங்கள்

ஆண் கம்பன் தமிழோ பாட்டினிலே

   சங்க தமிழோ மதுரையிலே

  பிள்ளைத்தமிழோ மழலையிலே

  நீ பேசும் தமிழோ விழிகளிலோ

பெண் :  நெஞ்சம் முழுதும் கவிதை எழுது

              கொஞ்சும் இசையை பழகும் பொழுது

ஆண் : துள்ளும் இளமை பருவம் நமது

           தொட்டு தழுவும் சுகமோ புதிது

பெண் : கண் பார்வையே உன் புதுப்பாடலோ

ஆண் :பொன் வீணையே உன் பூ மேனியோ

[பல்லவி ]

பெண்: பிள்ளைப்பருவம் தாய் மடியில்

              பேசும் பருவம் தமிழ் மடியில்

               கன்னிப்பருவம் என் வடிவில்

               காலம் முழுதும் உன் மடியில்

ஆண் பன்னீர் மழை தான் விழி மேல் பொழிய

            தண்ணீர் அலை தான் குழல் போல் நெளிய

பெண்: தன்னந்தனிமை               தணல் போல் கொதிக்க

            தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க

ஆண் : பொன் ஓவியம் என் மன மேடையில்

பெண் : சொல் ஓவியம் உன் ஒரு ஜாடையில்

[பல்லவி ]

பல்லவி முடியும் நிலையில் இரு குரல்களிலும்

ஊஹுஹுஹும் ஹுஹு ம் ஊஹுஹுஹும் ஹுஹு   ம்  ஊஹுஹுஹும் ஹுஹு ம்  ஊஹுஹுஹும் ஹுஹு ம் எனப் பாடி மெல்ல உறங்கி அடங்குவது போல் அலை போல் தாலாட்டி ஆசைபோல் சீராட்டி களைத்துறங்கிய குழந்தைகள் போல் பாடல் மெல்ல அடங்கி மௌனிக்கிறது ஆனால் கே ட்டவன்[ள் ] மனம் சஞ்சல உல்லாச ஊஞ்சலில்

அதுதான் ஒரு டூயட். இது போல் எண்ணற்ற டூயட்களில் காதல் ஓவியங்களை செதுக்கியவர் மெல்லிசை மன்னர். பாடலில் சித்துவிளையாட்டுகள் ஏராளம்

ஒரு டூயட் பாடல் தான் என்றாலும் சொற்கட்டுகளும் பரிமாற்றங்களும் மிகவும் மாறுபட்ட வடிவும் பொலிவும் கொண்டவை என்பதை கவனியுங்கள். இது போன்ற அமைப்பைவேறு  பாடல்களில் [வாலியின் பாடல்களில் கூட] காண இயலாது. அப்படியானால் காட்சியை விளக்கும் போது ஏதோ கருத்து ஆழமாக உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். நான் உணர்வது இவ்வளவு தான்

இரவில் நிகழும் காதலர் சந்திப்பு [அதற்கேற்ப எழுத வேண்டிய நிலை ] எனவே பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்று பல்லவி துவக்கம். [ஆனால் படப்பிடிப்பு முற்றிலும் உட்புறக்காட்சியாகவே உள்ளது]. எனவே சொல்லப்பட்ட கதைக்கும் படம்பிடிக்கும் மாறுபாடு தெரிகிறது என்றே தோன்றுகிறது .

இன்னொரு மாறுபாடு பல்லவியில் ஆண் பகுதி /பெண் பகுதி முறை யே  பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா [ஆண்]

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா [பெண்] என்றே பிரித்து எழுதப்பட்டுள்ளது. பல்லவியிலேயே, இருபாலரின் கோரிக்கைகள் மாறுபட இயற்றப்பட்டுள்ளது..           பாடல் முழுவதிலும் பல்லவி இதே அமைப்பிலேயே தொடர்கிறது..

இசை அமைப்பில் விளையாட்டைப் பாருங்கள்

இந்தப்பாடலில் எண்ணற்ற 'மன்னர் முத்திரைகள் ' .

நாயகன் சிதார் மீட்ட பின்னணி அமைகிறது. இசையில் ஈர்க்கப்பட்ட நாயகி அருகில் வந்தும் அவனோ சிதாரில் சங்கமித்து எங்கோ உலவுகிறான். காதலியின் கரம் பட்டு இயல்பு நிலை அடைகிறான் . வாசிப்பதை நிறுத்திவிட்டான் ஆனாலும் சித்தார் ஒலிக்கிறது அது காதல் மன ரீங்காரம் , மீட்டாமலேயே அனைத்து ஸ்வர வரிசையிலும் சஞ்சரிக்கும் ஒலி ; வீச்சு தான் அவனை உச்ச ஸ்தாயிக்கு கொண்டுபோகிறது.

ஏன் அந்த உயரம்.?

அதுதான் மன்னர் சொல்லுக்கு இசை தொடுப் பவர்  என்ற அக்மார்க் முத்திரை.

 பௌர்ணமி அல்லவா? அதனால் பாடல் வானில் இருந்து கீழ் நோக்கி தவழ்கிறது. பௌர்ணமி நிலவில் இருந்து சரிந்து பனி விழும் இரவில் என்று landing செய்வதுபோல் வந்து கடற்கரை மணலில் இருப்போமா  என்ற கேள்வி

அவளோ மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா , என்று வினா எழுப்பி  தை கதையாக படிப்போமா என்று கோரிக்கை வைக்கிறாள் இந்த ஸ்தாயி மாற்றங்கள் உணர்ச்சி வடிவங்கள் என்று கவனமாக பாடலை கேட்டால் விளங்கும்.. ஆழமான காதல் டூயட் என்பதால் ஏற்ற இறக்கங்கள் ட்யூனில் நெடுக பயணிக்க, இடை இசையில் சிதார் , குழல் , தபலா டோலக் தழுவித்துரத்தும்  வேகத்தால் பாடல் ஒரு துடிப்பு காட்டுகிறதை பார்க்கலாம். சரணங்களில் தான் பாடல் தரும் கிறக்கம்  மேலும் நிதர்சமான வெளிப்படும் ராக அமைப்பு வெறெந்தப்பாடலிலும் காணக்கிடைக்காத நுண் கையாளல் .

ஆண் பாடும் கம்பன் தமிழோ தொடங்கி .. நீ பேசும் தமிழோ விழிகளிலே வரை வேகம், இடை இசை அரக்கப்பரக்க ஓடும் சிதார் -தபலா -டோலக் ஒரே ரேஸ்

பெண் பாடும் பிள்ளை பருவம் தாய் மடியில் தொடங்கி ...காலம் முழுதும் உன் மடியில் வரை குழந்தையை ஆட்டி ஆட்டி கொஞ்சுவது போல் பாடல் ஜானகி குரலில் இந்தப்பகுதியில் உள்ள பாடலின் அசைவு சொல்லின் சுவையை பன் மடங்கு மேம்படுத்துகிறது. ஆனால் தாளம் வருடலாக --என்ன கற்பனை. !!!!

இதன் தொடர்ச்சியாக  

ஆண் பன்னீர் மழை தான் விழி மேல் பொழிய

            தண்ணீர் அலை தான் குழல் போல் நெளிய

பெண்: தன்னந்தனிமை               தணல் போல் கொதிக்க

            தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க

இந்தப்பகுதி தான் பாடலின் சாரத்தை வெளிக்கொணரும் இசை , பாம்பென நெளியும் ஸ்வர வரிசை. பன்னீர் மழை தான் விழி மேல் பொழிய  தண்ணீர் அலைபோல் குழல் தான் நெளிய என்ற வர்ணனை க்கு ஜோடியாக இசை நெளிந்து வளைந்து ஊர்ந்து செல்லும் சுகம் , அவளோ தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க தஞ்சம்      புகுந்தாள் உனைத்தான்  அணைக்க [சிலேடை]  இசையும் உணர்வினை தொட்டு வருடிக்கொண்டே போய் பல்லவியில் இரு குரல்களும் பாடி தாலாட்டுவது போல்  ஹு ஹு ஹுஹு ஊஹுஹுஹும் என்று மெல்ல மெல்ல ஒலி குறைந்து உறங்கும் குழந்தை போல் அமைதி கொள்ள வெகு நேர்த்தியான டூயட்.

எவ்வளவோ விவாதிக்கலாம் ஆனால் எனக்கு ஞானம் குறைவு. குருடனின் ராஜ விழிக்கு ஒப்பாக ஏதோ விளக்கப்பார்க்கிறேன் . பொறுத்தருள்க. பழையபாடல்களை தோண்ட தோண்ட பொக்கிஷம் தான் பாடலை பலமுறை கேளுங்கள் . சுரங்கங்கள் புலப்படலாம் .

இணைப்பு இதோ

https://www.facebook.com/watch/?v=1210486502767242 POURNAMI NILAVIL FULL

https://www.dailymotion.com/video/xh54vd pournami nilavil

QFR EPISODE 298

அலையெனப்பெருகிய இசையை வழங்கிய பெருமையும் அசுர வேக மீட்டலில் ஜனித்த கம்பீர இசையும்  இப்பாடலின் தனிச்சிறப்பு.

யரைச்சொல்ல? வாலியையா , விசு வையா? பாலு வையா? [புதுப்பாடகரா இவர்] ஜானகி எவ்வளவு சுறுசுறுப்பும் ஈர்ப்பும் குரலில்?  இப்படி எல்லாம் ஏன் டூயட்களே இல்லாமல் போய் விட்டது.. காலச்சக்கரம் சுழல்கிறது வேறென்ன சொல்ல?

https://www.facebook.com/watch/?v=1210486502767242 POURNAMI NILAVIL FULL

நன்றி அன்பன் ராமன் 

 

 

 

1 comment:

  1. Wonderful song. What an elaborate description. Hats off to you sir ji.

    ReplyDelete

Do we need so much ?

  Do we need so much ? இவை எல்லாம் தேவையா நமக்கு ? இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அ...