Sunday, December 7, 2025

CHENDA - A PERCUSSON INSTRUMENT

 CHENDA , CHENDE  - Kerala Karnaatakaa border area Percussion

செண்ட [மலையாளம்] செண்டை [தமிழ் ] செண்டே [கன்னடம் ]

செண்ட [மலையாளம்] செண்டை [தமிழ் ] செண்டே [கன்னடம் ] என்று பலவாறாக அறியப்படும் தாளக் கருவி கேரள பாரம்பரியத்தின் அடையாளம் இது ஒரு வித்தியாசமான கருவி ,நீண்ட கயிறு அல்லது பட்டை கொண்டு முதுகில் அணிந்து கொண்டு வாசிக்கப்படும் தாள வாத்தியம்.

இதன் அதி விரைவான அதிரடி வாசிப்பிற்கு கேரள இளைஞர்கள் ஊன் உறக்கமின்றி நின்றுகொண்டு கையை உயர்த்தி காற்றில் தாளமிட்டபடி காலப்ப்ரமாணம் பிசகாமல் இசை அமைப்பாளர்கள் போல் செண்டைக்குழுவுடன் நடந்து கொண்டே பயணிப்பர். இது தானா சேர்ந்த கூட்டம் என்று தமிழகத்தில் சொல்லப்படுவது இந்த செண்டை ரசிகர்களுக்கு  நூற்றுக்கு நூறு பொருந்தும்.  அவர்கள் உள்ளூர் அன்பர்கள்.

 அவர்கள் செண்டை  ஒலிக்கு கோகுலத்துப்பசுக்களைப்போல பாய்ந்தடித்துக்கொண்டு ஓடி வருவதை எப்போதும் பார்க்கலாம். அதனாலேயே சிறிய மாநிலம் தான் எனினும் இசைக்கலை கேரளத்தில் எப்போதும் தழைத்துவருகிறதுவாய்ப்பாட்டு, மிருதங்கம் இரண்டிலும் கேரளம் நல்ல கலைஞர்களை உருவாக்கிய பெருமை உடையது. செண்டை கேரளத்தில் தான் தயாராகிறது

அதிலும் வெள்ளர்காடு என்ற கிராமம் தான் வித்துவான்கள் முதல் தேர்வாக சொல்லப்படுகிறது 

மண்டை பிளக்கும் ஒலியைகிளப்பும் செண்டை பற்றிக்காண்போம்.

செண்டை  ஒரே விட்ட அளவுள்ள  சிலிண்டர் போன்றது , பலா மரம் கொண்டு நெடிய சிலிண்டர் போன்ற பகுதியை உருவாக்கிய பின் அமைக்கப்படும் பிற பகுதிகள் உண்மையிலேயே வியப்பைத்தருவன. மிருதங்கம் தவில் தபலா இவற்றில் தோல் பகுதி மரத்தின் விளிம்பில் வைத்து பிணைக்கப்படுகிறது. செண்டை அப்படி அல்ல . தோல் பகுதி சல்லடை போன்ற மரவிளிம்பில் வலுவாக பிணைக்கப்பட்ட பின் , இந்த சல்லடை மூடி      செண்டையின் இரு தலைப்பிலும் வைத்து மிக வலுவாக இழுத்து பிணைக்கப்படுகிறது

இந்த சல்லடையின்  பெயர் செண்ட வளயம் [மலையாளம்]. செண்ட வ்ளையம் /செண்ட வளயம் [ ஈரம் பன ] மரப்பட்டையினால் உருவாக்கப்ப டுகிறது.. பாக்கு போன்ற  நெடிய ஈரம் பனமரத்தை சாய்த்து, நெடிய துண்டுகளாக அறுத்து பட்டையை பிரித்து எடுக்கிறார்கள். உட்பகுதியில் சுத்தம் செய்து பின்னர், பட்டைகளை சுமார் 4 மணி நேரம் கோந்து போன்ற கரிய வண்ணம் கலந்த திரவத்தில் வேக வைக்கிறார்கள்.இந்த கோந்து பனச்சி மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்பட்டு பட்டைகளை வேக வைக்க பயன் படுகிறது.  

வெந்த பின் இவை உலோகத்ததகடுகள் போல நன்கு வளையும் பதம் பெறுகின்றன. இதை வளைக்க பிரத்தியேக  இரும்பு மேடை உள்ளது. அதில் பட்டையை வட்டமாக பொருத்தி வெளியே அழுத்தமாக படியவைத்து இரு முனைகளிலும் ஆணி போல் அமைத்து அழகான செண்ட வளயம் உருவாக்குகிறார்கள்

தோல் பகுதி

செண்டையின் தோல் பகுதி  எருமைத்தோல் கொண்டு அமைக்கப்படுகிறது. இவை எட்டே முக்கால் அங்குலம் விட்டம் உடைய வட்ட பகுதிகள் இந்த 8 3/4 அங்குலம் சண்டையின் ஒலி எழுப்பும் பகுதி மட்டுமே. எனவே அதைவிட அகலமாக பெரிய வட்ட வடிவில் தோல் வெட்டி எடுத்தபின் செண்ட வளயத்தின் 8 3 /4 எல்லைக்கு வெளியே உள்ள தோல் உட்பகுதியில் உள்ள திசுப்பகுதிகள் செதுக்கி எடுத்தபின் இந்த வெளிவட்டம் துணி போல் துவண்டு மெலிவடைகிறது. இந்த துவண்ட ஈரமான துணி போன்ற பகுதியைவளையத்தின் வெளியில் இருந்து நன்கு இழுத்து வளியத்தின் உட்பகுதியில் வெகுவாக சொருகி வைத்து பின்னர் விளிம்பிற்கும் தோலின் உட்பகுதிக்கும் இடையில் ஊதுவத்தி போல் செதுக்கிய மூங்கில் குச்சிகளை செலுத்தி, மூங்கில் இயற்கையாகவே விரிவடைந்து தோலின் விறைப்புத்தன்மையை தளர விடாமல் பற்றிக்கொள்கிறது

இப்படி வரிந்து பிணைக்கப்பட்ட வட்டங்கள் இரண்டும் வலந்தலை [right], எடந்தலை [left] எனப்படுகின்றன. இவற்றில் சம இடைவெவ்ளிகளில் ஒவ்வொன்றிலும் 12 துளைகள் இடப்பட்டு வலுவான கயிறு மூலம் மேலும் கீழும் இழுத்து மிக வலுவாக வரிந்து கட்டப்படுகிறது. இப்போது செண்டை ஒலி காதைப்பிளக்கும்

செண்டையின் சிறப்பு யாதெனில் வலந்தலை [right ], எடந்தலை [left ] என இரு தலை கள் இருப்பினும் , ஏதேனும் ஒரு தலை தான் மேற்புறம் இருக்கும். அதன் மீது தான் தாளம் இசைக்கப்படும்.. ஒரே தலைப் பகுதியில்  வலக்கை இடக்கை இரண்டின் வாசிப்பும் அமையும்.

இப்படி ஒலியெழுப்ப தனித்தனியே இருகைகளில் குச்சிகள் [மலையாளம் =கோலு  ]கொண்டு இசைப்பர். அவை பொதுவாக [செண்ட க்கோலு எனப்பட்டாலும் ] புளி / பலா /ஒருவகை மூங்கில் குச்சிகளே

இடக்கைக்குச்சி சற்று பெரியது [வீக்கு     கோ லு = வல்லிய], வலக்கையில் [உருட்டு கோ லு = செறி ]. இரண்டும் அடிப்பதற்கு      ஏற்றாற்போல் வளைந்து இருக்கும் .

ஒரே புறத்தில் இரு கைகளாலும் இசைத்தாலும் செண்டை -தாளத்தில் கோரஸ் என்றால் மிகை இல்லை. 5, 6 பேர் செண்ட இசைக்க பெரிய ஜாலரா 3, 4, , ஒன்றரை அடிநீளத்தில் சிறிய நாயனம் , மூச்சை அடக்கி ஊதும் நீண்ட ஜுபிட்டர் குழல்  போல 6,7 அடியில் நீண்டு வளைந்த குழல் இவையே செண்டை குழு

செண்டையின் ஒலியில் வேறு கருவிகள் கல்யாண வீட்டில் கிழவிகள் போல் முணுமுணுக்க, ஜால்ரா வாசிப்போர் கிஷ்கிந்தை பிறவிகள் போல்           எம்பிக்குதித்து ஜங் ஜிங் ஜேஜிஜிங் என்று ஏதேதோ முயற்சிகள் செய்வர்.  செண்டை வாசிக்கும் ஆசாமிகள் வலுவான ஆசாமிகள் ஆனால் வேகமும் நுணுக்கமும் அடிகளின் துல்லியமும் வரிசை பிறழாமல் வாசிக்கும் பாங்கும் வெகு நேர்த்தியான விருந்தாகும்.

கேரள யானைகள் 300 செண்டைகள் ஒலித்தாலும் அசையாது. அசராது. அவை மிரண்டால் செண்டையை மண்டை மேல் சுமந்து கொண்டு ஓட வேண்டியது தான்.  .இவ்வளவு பெருமைகள் செண்டைக்கு உண்டு.

இப்போது செண்டை தமிழகத்திலும் வியாபித்துள்ளது. திருமணங்களில் வசதி மிக்கோர் செண்டையையும், வசதி குறைதோர் band வைப்பதும் அதிகமாகி விட்டது. நாதஸ்வரம், கோயில் மற்றும் பிராமணர் திருமணங்களோடு முடிந்துவிடுகிறது. முன்பெல்லாம் தீபாவளி விடியக்காலை வீடு வீடாக மங்கலவாத்தியம் என்று 2 நிமிடம் வாசிப்பர்இப்போது அதையும் காணோம் . நினைவிருக்கிறதா ?

பத்ரீயின் பூணல் விழாவில் காசிம் என்ன சொன்னார்? அதுதான் கள  யதார்த்தம் . இன்றைய முதன்மை வீடியோ மலையாளத்தில் இருக்கிறது. கேட்டால் புரியும். அப்படி புரிந்ததை வைத்து எழுதியுள்ளேன். மலையாளம் அறிந்தோர் [டாக்டர் வெங்கடராமன் -சாரே தெற்றெங்கில் எனிக்கு மனசிலாக்காம் , பின்னே வேண்டெங்கில் கரெக்ட்டெ ய்யாம் -கேட்டோ -வளர நன்னி ].

வீ டியோக்களைக்கண்டு ரசிக இணைப்புகள் கீழே

நன்றி

அன்பன் ராமன் .

https://www.youtube.com/watch?v=BAVepoqgzdo chendai melam malayaalam

കൊട്ടികലാശം….പാണ്ടിമേളത്തിനു ശേഷം പഞ്ചാരിയിൽ കുഴൽ പറ്റിലും കൊമ്പ് പറ്റ് ലും പരീക്ഷണം നടത്തിയ മേളം🔥 - YouTube

https://www.youtube.com/watch?v=Ed30KXsSJ7M chendai play video

https://www.youtube.com/watch?v=vHaXnDE3u8I mass play chendai

*****************************************************************************

No comments:

Post a Comment

CHENDA - A PERCUSSON INSTRUMENT

  CHENDA , CHENDE   - Kerala Karnaatakaa border area Percussion செண்ட [ மலையாளம் ] செண்டை [ தமிழ் ] செண்டே [ கன்னடம் ] செண்ட [ மலை...