Tuesday, December 9, 2025

LET US PERCEIVE THE SONG -50

 LET US PERCEIVE THE SONG -50

பாடலை உணர்வோம் -50

  சின்ன சின்ன இழை [புதையல் 1957] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

திடீரென்று ஏன் இந்தப்பாடல் என்போருக்கு--- இப்பாடல் பல விளக்கங்களையும் விந்தைகளையம் அள்ளி அள்ளி தரும் வல்லமை கொண்டது.  அப்படி என்ன இப்பாடலில் என்கிறீர்களா. அதாவது தமிழ்த்திரை இசையை ஆழ்ந்து அலசுவோருக்கு தெரியும் தமிழ் சினிமா இசையை பலகட்டங்களாக பிரிக்கலாம் அவற்றில் சில ஜிராமநாதனுக்கு முன், ஜி ராமநாதனுக்குப்பின்

புதையலுக்கு முன், புதையலு க்குப்பின்

விஸ்வநாதனுக்கு முன், விஸ்வநாதனுக்குப்பின்,

இளையராஜா வுக்கு முன், இளையராஜாவுக்கு பின் என்ற வகையில் பார்க்கலாம்.

அதன் பிறகு மெல்ல மெல்ல இசை பெரும்பாலும் ஓசை என்ற பின்னோக்கிப்பயணத்தை தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.

உனக்கென்ன தெரியும் என்று சிலர் கொந்தளிக்கலாம். ஆம் எனக்கு ஒன்றும் தெரியாது அதே சமயத்தில் பிந்தைய கால பாடல்களில் இசையே தெரியவில்லை எனக்கு-ஆம் எனக்குதான் சொல்கிறேன்.

ரசனை மாறுகிறது என்ற நிலையை கடந்து ரசனை நாறுகிறது என்பதே எனது நிலைப்பாடு. அது எப்படியோ போகட்டும்.

 தொடங்கிய புள்ளிக்கு வருவோம்.

அந்நாளில் மெல்ல பாடல்கள் அன்றாட வாழ்வியல் நிலைகளை எட்டிப்பார்க்க துவங்கிய  காலம். சாஸ்திரிய சொல்லாடல், ராகபாவம், தாளம் என அனைத்துமே மாறத்துவங்கி வேறுதிசையில் பயணித்த வரலாற்றின் ஆரம்பகட்டம் "புதையல்" என்பது எனது புரிதல் 

ஒரே படத்திற்கு 5 கவிஞர்களின் பாடல்கள் [சுப்ரமணியபாரதியார், ஆத்மநாதன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி மற்றும் தஞ்சை ராமையதாஸ் ] அதில் பட்டுக்கோட்டை எழுதிய 3 பாடல்கள் . அந்த மூன்றில் முக்கியமான பாடல் "சின்ன சின்ன இழைப்பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி" என்று பிறந்த அன்றே ஊரெங்கும் புகழ்மணம் பெற்ற வெகு நேர்த்தியான பாடல். 

முக்கிய தகவல்

1 பட்டுக்கோட்டை . சுந்தரம் தனிக்காட்டு ராஜா.

2 .பாடல் புனைய நேரம் எடுத்துக்கொள்வார். அவர் பாடலில் கை வைக்க இயலாது .அவ்வளவு ஆழமும் அழகும் சமுதாயப்பார்வையும் பின்னி கிடைக்கும்.

3 ட்யூனுக்கு பாடல் எழுதவே மாட்டார் , நான் பாடல் தருகிறேன் அதற்கு ஏற்ற ட்யூன் 'நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது' தேவைப்பட்டால் சிறு மாற்றம் செய்யலாம் வேறுவேறு  ட்யூனுக்குள் கருத்தை திணித்து பாடல் எழுத முடியாது  என்று ஆணித்தரமாக ஒரே பிடியில் நிற்பார்.

ஆனாலும் பட்டுக்கோட்டை . சுந்தரம் எழுதிய பாடல்கள், எப்போதும் வெற்றி ப்பாடல்களே. பாவம் -29 வயதில் மறைந்தார். [இப்போதும் சிலர் சொல்வதுண்டு பட்டுக்கோட்டை இருந்திருந்தால் கண்ணதாசன் பெரிதும் போராட வேண்டி இருந்திருக்கும் 'என்று ] நான் கவிஞர்களை தரம் பிரித்து பேசவில்லை எனினும் பட்டுக்கோட்டை எட்டியிருந்த புகழ் காரணமாக அவரை      பா ட்டுக்கோட்டையார் என்றும் புகழ்வார்கள்.

இப்போதுதான் சுவாரஸ்யம் துவங்குகிறது.

பாடல் சூழல் அன்று புதுமையானது. கைத்தறி தொழில் செய்யும் குழுவினர் பாடுவதாக பாடல் அமையவேண்டும். கிட்டத்தட்ட மண்டையை பிய்த்து க்கொண்டார்கள் பட்டுக்கோட்டையாரும, விஸ்வநாதனும்.. இது என்ன அமைப்பில் வரவேண்டும் என்ற குழப்பம்.

அப்போது கவிஞர் பாரதிதாசன் பட்டுக்கோட்டையாரிடம் சொன்னாராம் எங்காவது நெசவுக்கூடத்தில் போய்   என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஏதாவது நல்ல கரு கிடைக்கக்கூடும் " என்று.

இப்போது விஸ்வநாதன் பட்டுக்கோட்டையாரிடம் -இருய்யா நானும் வரேன் நேர பாத்தா  எனக்கும் எப்படி அரேஞ்மெண்ட் இருக்கணும் னு ஐடியா கிடைக்கும் என்றார். இருவரும் காஞ்சிபுரம் போய் 2,3 நெசவுக்கூடங்களை பார்த்து வசமான பாடலை உருவாக்கி பெரும் புகழ் பெற்றனர்.

அப்போதே பாடல்கள் தேவைக்கேற்ற அணுகுமுறைகள் ஒலி க்கலவைகள், பொருத்தமான கருவிகள், உள்ளார்ந்த உவகை , கசப்பு வெறுப்பு என மனித உணர்வுகளைத்தழுவி ஒரு புதிய அவதாரம் காட்டத் துவங்கின  .அதனால் நான் 'புதையலுக்கு முன், புதையலுக்குப்பின் 'என்று தமிழ்த்திரை இசையை புரிந்து கொள்கிறேன். ஏற்காதோர் அவரவர் நிலைப்பாட்டில் பயணிக்கலாம். 

இப்பாடல் பாடப்பட வசதியாக சிறு சிறு சொற்கள் அடுத்தடுத்து வருவது கிட்டத்தட்ட தறி இயக்கத்தில் இடம் வலம் மற்றும் வலம் இடமாக  மாறி மாறி இரண்டு அடுக்கு நூல் இழைகளுக்கிடையே வேறொரு நூல் இழையை பின்னி ஆடை உருவாக்கும் ஸ்பி ண்டில் போல் அமைந்த கவிதை அதன் ஓட்டத்தை உணர்த்தும் ட்யூன் அமைப்பு கேட்டவுடன் பாடல் மனதில் பதியும் வண்ணம் அமைந்த சொல்-ட்யூன் கூட்டணி 1957இல் . பாடலை வெகுநேர்த்தியாக அமைத்த கவிஞர் இசை அமைப்பாளர் பாடகி சுசீலா அனைவரும் பாராட்டுக்குரியோரே பாடலில் ஒரு நிலையில் ட்யூன் மாறி பயணித்து பின்னர் பல்லவியை துவக்கும் அமைப்பு மிகவும் ரசிக்க வேண்டிய பகுதி . இவை தவிர, கைத்தறி ஆடையின் பெருமைகளை பேசும் அதே நேரத்தில் மனித வாழ்வின் இயல்பான அமைப்புகளை தொட்டுக்காட்டுவதும் கவிதையின் சிறப்பு.

"ஒற்றுமையோடு அத்தனை நூலும்

ஒழுங்கா வந்தா வளரும் ஒரு நூல் அறுந்தா குளரும்

இதை ஒட்டும் இழை கூட்டுறவாலே 

உலகில் தொழில் வளரும் உயரும்

இந்த உலகில் தொழில் வளரும் உயரும்

என்னடி கண்ணம்மா இன்னும் சொல்ல வேணுமா   ஆஅ

வள்ளுவனி ன் வழி வந்த பெரும் பணி

வாழ்வில் நன்மை உண்டாக்கும்

தன்  மானம் காக்கும் தன்  மானம் காக்கும்

புது வகை புடைவைகள்

வித வித பறவைவைகள் போலே

நல்ல நிறம் காட்டும் நாளும் புகழ் நாட்டும்

நல்ல நிறம் காட்டும் நாளும் புகழ் நாட்டும்          என்று சரணம் பாடி மீண்டும்

சின்ன சின்ன இழை பின்னிப்பின்னி வரும் என்று பல்லவியில் நுழைகிறது பாடல்.எளிமையான  இசை அளவான தாளம் என்ற அமைப்பு 1957 ம் ஆண்டிலேயே விஸ்வநாதன் -ராமமூர்த்தி காட்டிய மாறுபட்ட அணுகுமுறை.

பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=m62DD6O0KY8 chinna china izhai pudhaiyal 1957 pattukkottai v r  p s

https://www.youtube.com/watch?v=zH2lJq7amT8&list=RDzH2lJq7amT8&start_radio=1  AS ABOVE =CLEAR PRIINT

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SOLANUM NIGRUM [BLACK NIGHT SHADE]

SOLANUM NIGRUM [BLACK NIGHT SHADE] Tamil: Manathakkaali [Milagu thakkaali] Hindi: Makoi ,   Malayalam: Same as in Tamil+ Karimthakkaali ...