Tuesday, March 17, 2026

LET US PERCEIVE THE SONG -61

 LET US PERCEIVE THE SONG -61

பாடலை உணர்வோம் -61

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே [தர்மம் எங்கே - 1972] கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலா

இது போன்ற ட்யூன்களை எப்படி கற்பனை செய்கிறார்     எம் எஸ் வி என்பதே பெரும் கேள்வி மற்றும் சிந்தனைக்குரிய ஒன்று. ஏன் எனில்,  கேட்ட மாத்திரத்தில் ஊது வத்தியின் நறுமணம் போல் விடாமல் வியாபித்து நிரப்புவதைப்போல் காது வழியே நுழைந்து மனதில் நிறைந்து சிந்தனையில் தவழ்ந்து மனதில் சுழன்று கொண்டே இருக்கும் வலிமை -இப்பாடலின் சிறப்பு.

இப்பாடலை அதிகம் கேட்டதில்லை என்போர்கூட ஒரு முறை கேட்ட பின் நீண்ட நெடிய பரிச்சயப்பட்ட ஒலிக்கலவை நம்மை பின்னி படர நாம் வயப்படுவதை உணரலாம். அப்படி என்ன இந்தப்பாடலில் என்றால் சொல்லி விளக்க இயலாது , கேட்டபின் மறக்க இயலாது.

ரீங்காரம் என்பது என்ன என்பது இப்பாடலை கேட்ட பின்னர் குறைந்த பட்சம் உணரவாவது  இயலும்.

இதில் ரீங்கரிப்பது என்ன ?                                                           சொல்லா , சுவையா , ஒலியா , இசையா என்று கேள்விகளால் தேடித்துருவினாலும் எண்ணற்ற விடைகள் தோன்றும

முதலில் உணர்வது இனம் புரியாத வசீகரம் அது அந்த குரல்களின் ஒருங்கிணைப்பில் தோன்றி நெடுகிலும் வியாபிக்கும் ஒரு மென்மையான நாத சாந்தம் என்றே சொல்ல தோன்றுகிறது. அதுவே எம் எஸ் வியின் மந்திர ஜாலம் அவர் ஒரு ம்யூசிக் மெஜீஷ்யன் , நினைத்த படி அவர் நினைத்தபோது கண்ணை மட்டுமல்ல நமது அனைத்து புலன்களையும் எளிதாக கட்டிப்போட்டு விடுவார். அவரின் ஒலிக்கோர்வைகளை ரசித்துப்புரிந்து கொண்ட மனங்கள் வேறெந்த ஆசைக்கும் ஓசைக்கும் அடிபணியாது. அதை அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே புரிந்து கொள்வது சாத்தியம். 

இன்றைக்கும் எம் எஸ் வியின் இசைக்கு இவ்வளவு வரவேற்பு மங்காமல் தொடர்கிறதென்றால், அவற்றின் இசை கட்டமைப்பு வெகு இயல்பும் நேர்த்தியும் பின்னிப்பிணைந்த கலவை என்பதோடு பிசிர் என்ற சொல்லுக்கு  பிசிராளவுக்குக்கூட இடம் கொடாத அற்புத ஒலி ச்சங்கமம். அவரது இசை முரண்கள் இல்லாத ஒலிசாம்ராஜ்யம் அது அவரின் இசைராஜாங்கம். அதில் ஒன்றே இப்பாடல்

ஊடலுக்குப்பின் தொடங்கும் இப்பாடல் கவியரசர் கண்ணதாசனின் யாப்பு , சொல்ல வேண்டுமோ பாடலில் மிதமிஞ்சி ஊடாடும் எதுகை மோனை ஒரு புறம் , மறுபுறம் சிருங்கார ரசம் சொட்ட சொட்ட உதிர்த்துள்ள சொற்கள் 

ஆண் /பெண் பேதமின்றி போட்டியாக விழும் வர்ணனைகள். குரல்களின் நளினத்தில் பாடலை கவனிக்காமல் விட்டு விடுவார்களோ என்ற ஐயம் போலும் பாடல் நெடுகிலும் வீடியோவில் கீழே  கவிதை  பிழையின்றி ஓட வேறு வகை அனுபவம் [பல பாடல்களில் கவிதை தப்பும் தவறுமாக எழுதப்பட்டு கவியை  அவமானப்படுத்தும் அவலங்களை நிறைய பார்த்துள்ளோம். இப்பாடல் அவ்வாறில்லை -நல்ல வேளை] . பாடலின் செம்மையான சுவை கோரஸில்  புதைவந்துள்ளது. இசையை விட கோரஸ் வழங்கியுள்ள ஒலி  ஆதாரம் வெகு அற்புதம்.

பாடல் நெடுகிலும் சிறு மாற்றம் கூட  இல்லாத ஒரே ட்யூன் , பல்லவியில் தொடங்கி இறுதி வரையில் ஒரே சீரான ட்யூன் ஆயினும் கேட்பதற்கு வெகு நளினம் . ஒரே ஒரு உத்தி பாடலில் முதலில் பல்லவியை பாடும் இருவரும் பின்னர் வரும் பல்லவிகளில் பள்ளியறைக்குள் வந்த என்று 'வந்த' என்று சொல்லி இடைவெளிவிட்டு டிஎம்எஸ் தொடர  அதே போல் சுசீலா அள்ளியிறைக்க வந்த என்று நிறுத்திப்பின்னர் கள்ள நகையே என்று தொடர்கிறார். ஆனால் பாடலில் ஓட்டம் வெகு விரைவாக இருப்பது போல் ஐயோ பாடல் முடிந்து விட்டதே என்றே ஏக்கம் கொள்ள வைக்கிறது .

இப்பாடலில் நான் கண்ட  விசேஷம். எந்த வகையான வர்ணனை ஆயினும் கற்பனையாக அமைத்து இப்பாடலின் ட்யூனில் பொருத்திப்பாடிப்பாருங்கள் வெகு சிறப்பாகப்போருந்தும் அப்படி ஒரு சர்வ வியாபி இந்த ட்யூன். பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=mpHuExzw20o                                                   Palli araikkul vandha dharmam enge KD  MSV TMS PS [1972]

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -61

 LET US PERCEIVE THE SONG -61 பாடலை உணர்வோம் -61 பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே [தர்மம் எங்கே - 1972] கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ...