Friday, September 9, 2022

வத்சலா, ஏ வத்சலா

 வத்சலா,   வத்சலா

இது என்னடா இது புது தினுசில் ஏதோ கிளம்புகிறதே என்று குழம்புகிறீர்களா,அமைதி, அமைதி  ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் . யாருமில்லை ஆமாம் கோயில் பிராகாரத்தில் யாருமில்லை ; நம்ம கழுகு தான் ஒரு மாமியை பெயர் சொல்லிக்கூப்பிட்டுக்கொண்டே ஓட , ஏதோ பேராபத்து என்பதை போல அந்த மாமி ஓட , ராமசாமி [கழுகு] தேவஸ்த்தான பிரசாத ஸ்டால் கம்பத்தடியில் அவளை நிறுத்தி "ஏன் இப்படி ஓடற ? நான் என்ன உன்கிட்ட வட்டியா வசூல் பண்ண வரேன் என்று மேலும் மிரட்ட மாமிக்கு வியர்த்துக்கொட்டியது.

அது சரி நீ வத்சலா தானே என்று ஆரம்பக்கேள்வியை போட , மாமி லேசாக தலை அசைத்தாள்; அதாவது ஆமாம் என்றோ இல்லை என்றோ வைத்துக்கொள் என்பது போல. நேக்குத்தெரியும் நீ வத்சலாவே தான் [ வரதாச்சாரி பேத்தி தானே ? உண்மையை சொல் என்று குரலை உயர்த்த, மாமி அசருவதாக இல்லை. நீங்களா எதையாவது சொன்னா எப்படி ? என்று தப்பிக்கப்பார்த்தாள்.] 

இத  பாரு, உன் மூக்கு மேல இருக்கற வறுத்த மணத்தக்காளி வேறு யாருக்கு இந்த பூலோகத்திலே இருக்கு?   இந்த TRADE MARK க்கு க்காக உன் பின்னாலயே அலைஞ்சு திரிஞ்ச பசங்க இப்பவும் இருக்கான், நீ வேணும்னா கேட்டுப்பார் . அதிருக்கட்டும் நீ எப்ப வந்த?உங்க அம்மா- அதான் கமலா சௌக்கியமா? . அவாளை நான் ரொம்ப விசாரிச்சேன் னு சொல்லு" என்றது கழுகு. சற்றே பயம் விலகியவளாக, ‘நீங்க யாருன்னே தெரியலயே’ என்றாள் வத்சலா. “ரயில்வே ராமசாமி னு சொல்லு எல்லாருக்கும் தெரியும்; இல்லேன்னா கீழ சித்திரை வீதினு சொல்லு புரியும்”. “சாரி மாமா எனக்கு தெரியல்ல அதான் ஒடிடலாம்னு பார்த்தேன்  என்றாள். என்கிட்டேர்ந்து தப்பிக்கமுடியுமா என்று வெற்றி புன்னகையுடன் நன்றாக சிரித்தார். ஆமாம் கழுகுக்கு பல் வலி சரியாகிவிட்டது.

ஒரு வழியாக கழுகு, வத்சலா வை போக விட்டது . கழுகுக்கு அவள் வீடு தெரியாதா என்ன அப்புறம் போய் ஒரு காபியை [அவர்கள் வீட்டில் தான்]  கவனித்துவிடும்.

கழுகு, வீட்டுக்குள் [6.10 PM] நுழைய --அம்புஜத்தின் குரல் 'பிராகாரத்தில் என்ன ஓட்டம் -அதுவும் வத்சலாவைத்துரத்திக்கொண்டு? கழுகு ரொம்ப சாவதானமாக யார் ஓட்டம், என்ன வத்சலா? என்று நழுவப்பார்க்க, அம்புஜம் "தெரியும் பூக்கார கோவிந்தசாமி புட்டுப்புட்டு வெச்சுட்டார். "நம்ப சாமி வத்தசலா அம்மாவை பேர் சொல்லி கூப்பிட்டுக்கிட்டு கருடன் சன்னதி நடையிலே ஓடிக்கிட்டிருந்தார்" யாரு வத்சலா ? என்றேன், பூக்காரர் சொன்னார்அதாம்மா உத்தர வீதி பாட்டு வாத்தியார் வீட்டு மக "

இதான் இவ்வளவு தெரிஞ்சிருக்கு -என்ன கேட்டா ? என்று கழுகு எதிர் கேள்வி போட, அது சரி -அன்னிக்கு, சித்ர  வீதி  பெண்களை தெரியும் னு ஜம்பமா சொல்லிட்டு, இது ஏதோ உத்தர வீதியாம் -ஒரு வீதி பாக்கி இல்ல -பிரதாபம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அதுக்காக ஓடணுமா கோவில் முழுக்க?

விட்டுட்டா பிடிக்கமுடியாது என்றது கழுகு. இன்னும் என்ன -இதெல்லாம் நன்னாவே இல்ல என்றாள்  அம்புஜம். 'கழுகின்' மின்னல் வேகம், அவர் செயல்களை தவறாக காட்டுவதைப்பற்றி, கழுகு கவலைப்படுவதில்லை. “ ச்சீ அவ வரதாச்சாரி பேத்தி ஏதாவது ஒளராத என்று கழுகு மடக்கிவிட்டு, ஒனக்கு பழைய friends நா என்னனு தெரியாது அதான் இப்பிடி கத்தற” என்று சொல்லிவிட்டு வரட்டும் கோவிந்தசாமி என்று கறுவியது கழுகு. கோவிந்தசாமிக்கு அஷ்டமத்துல சனி . வேறு என்ன சொல்ல.                                                                        இன்னும் கூட அம்புஜத்திற்கு 'கழுகை'ப்பற்றிய புரிதல் முழுமையானதல்ல. 

பேரா . ராமன் 

1 comment:

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...