Sunday, December 18, 2022

LASER IN SRIRANGAM

 LASER IN SRIRANGAM

ஸ்ரீரங்கத்தில் லேசர்

என்ன லேசரா அதுவும் ஸ்ரீரங்கத்திலா ? ஏன் ஸ்ரீரங்கத்துக்கும்  லேசருக்கும் தொடர்பே இல்லையா என்ன.? ஏன் இல்லை லேசர் மாமனார் ஸ்ரீரங்கம் தானே. அதுவும் வேதாந்தம் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் எனவே லேசர் ஸ்ரீரங்கம் வந்ததில் வியப்பென்ன?. ஆனால் வந்த வேலை தான் சற்று வித்தியாசமானது. ஆம் வேதாந்தம் -லேசர் மன்னிக்கவும் வித்யா தம்பதியின் புத்திரன் பத்ரி க்கு உபநயனம். லேசர் எப்போது APPLIED PHYSICS PG படிக்க தொடங்கினாளோ , அப்போதிருந்தே ரொம்ப மாடர்ன் -உடை நடை பேச்சு செமினார் கான்பெரென்ஸ் என்று ஹை டெக் யுகத்தில் சஞ்சாரம்.   

ஆனால் மரபுகளுக்கு விரோதமோ எதிர்ப்போ வித்யாவிடம் சிறிதும் கிடையாது. அவளைப்பொறுத்தவரை தனக்கு தெரியாத சம்பிரதாயங்களை விவாதப்பொருளாக்கி அவமானப்படுவதை நேர்த்தியாகதவிர்த்து விடுவாள். எனவே வேதாந்தம்,  பையன் உபநயனத்தை ஸ்ரீரங்கத்தில் வைத்துக்கொள்ள பிரஸ்தாபித்த போது முதலில் தயங்கினாள் .ஏன் --தனக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது கூட சரியாகத்தெரியாதே , மேலும் அலைச்சல் இருக்குமே என்றெல்லாம் சொல்லிப்பார்த்தாள் ;வேதாந்தம் சொன்னான் இதோ பார் ராமசாமி நமக்கு உதவி செய்வான் ,மேலும் பழுத்த வேத விற்பன்னர்கள் மற்றும் புரோகிதர்கள் மற்றும் சிறந்த பரிசாரகர்கள் என்று எல்லாம் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்து விடலாம். வைதீக முறைப்படி செய்ய சில ஊர்கள் தான் சிறந்தது. உங்க ஆபிஸ் சர்தார்கள் சர்தாரிணிகள் மற்றும் அதிகாரிகளுக்கு டெல்லியில் ரிசப்ஷன் கொடுத்துவிடலாம்.. சரி என்று ஒத்துக்கொண்டவள் லேசாக தயங்கினாள் "அதில்லே எனக்கு 9 கஜம் மடிசார் உடுத்திக்க சரியா தெரியாது கோணா மாணான்னு இழுத்துண்டு --- எனக்கு ரொம்ப சங்கோஜமா இருக்கு. அதான் யோஜிக்கறேன்.ஜென்ட்ஸ் க்கு ரெடிமேட் பஞ்சக்கச்சம் இருக்கு நான் என்ன பண்ணுவேன்” என்று சிணுங்கினாள்.

“அடி அசடே சீரங்கத்துல மடிசார் உடுத்திவிட லட்ஷம் மாமி தயாரா இருப்பா ,ஒரு வார்த்தை சொன்னா ஒன்ன அப்சரஸ் மாதிரி சிங்காரம் பண்ணிப்பிடுவா -இதெல்லாம் ஒரு விஷயம்னு இப்பிடி தயங்கற யே நன்னாரு க்கு.கவலைய விடு, நான் ராமசாமிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிட சொல்றேன். எந்த இடம்னு தெரிஞ்சதும் டெல்லியில் இருக்கற சம்பத் பிரஸ் மாமாகிட்ட சொல்லி இன்விடேஷன் அடிச்சுடலாம்”. லேசர் முகத்தில் கவலையின் சுவடுகள் மறைந்து வெட்கமும் சிரிப்பும் வினாடிப்பொழுதில் மின்னலெனத்தோன்றி ஹேமமாலினியை நினைவூட்டி மறைந்தது.

பத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை அவன் கண்ணாடியை மாட்டிக்கொண்டு LAPTOP ஒன்றினை குழந்தைபோல் மடியில் கிடத்திக்கொண்டு அகிலஉலகையும் வலம் வந்துகொண்டிருந்தான். ஆனால் நல்ல பையன் பெற்றோர் சொல்லை தட்ட்டாதவன் அதுவும் தமிழ்நாட்டு தின்பண்டங்கள் -தட்டை சீடை முறுக்கு , தேன்குழல் போன்ற வகைகளை டெல்லியில் வாங்க ஏகமாக அலைய வேண்டிவரும். அதிலும் தனக்கு பூணுல் வைபவம் அவனுக்கு இனம் புரியாத மகிழ்வும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தி இருந்தது.

இதோ ராமசாமிக்கு போன் :

ஹலோ ராமசாமி இருக்காரா ?

நீங்க யாரு ? கேட்டது பெண் குரல்.

 மிஸ்டர் ராமசாமி நம்பர்னு கூப்பிட்டுட்டேன் சாரி ;

ஆமாம் ராமசாமி நம்பர் தான் அவர் மேலதிகாரிக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில அதான் ரயில்வே ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு ஆபிஸ் போயிருக்கார் அவசரத்துல போன வெச்சுட்டு போய்ட்டார் நான் அவர் ஒய்ப்  அம்புஜம் ; ஒஹ். நீங்களா சவுக்கியமா ? சரி நான் ராத்திரி பேசறேன் -டெல்லி வேதாந்தம் .

எல்லாரும் சவுக்யந்தானே என்றாள்  அம்புஜம். யெஸ் என்றது ஆண் குரல் . 

தொடரும்

அன்பன்  ராமன் 

No comments:

Post a Comment

WILLIAM BLAKE -3

  WILLIAM BLAKE -3 Quotes -3 Another set of quotes from William Blake form the day’s blog. Curiously, these are a little longer than wha...