Tuesday, September 26, 2023

EDUCATION -9

 EDUCATION -9

கல்வி- 9 

இது வரை நம் அறிந்துள்ள செயல் முறைகளை வலுப்படுத்திக்கொள்ளவும், தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் மாணவ /மாணவியர் தன்னிலை உணர்தல் வேண்டும். அதாவது "முயன்றால் முடியாதது இல்லை" என்னும் தாரக மந்திரம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும் . இதற்கான எளிய வழிமுறை யாதெனில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சிலவற்றை அறிவுறுத்தினால் போதும். நீ இப்போது தானே படிக்க தொடங்கி இருக்கிறாய் எதற்கும் பயந்து ஒதுங்கி விடாதே முயற்சி உன்னை கைவிடாது. கீழே விழுந்தாலும் தொடர்ந்து சைக்கிளோ ஸ்கூட்டரோ ஓட்டுகிறோம் அல்லவா அது போல் தான் இதுவும்..

அவன் போல், நீயும் நன்றாக முயற்சி எடு என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அவனைப்பார் இவனைப்பார், உன்னைவிட நன்றாக படிக்கிறான் என்ற ஒப்பீடு பல நேரங்களில் ரிவர்ஸ் கியரில் வேலை செய்யும்.. அதற்கு பதிலாக நீயும் அவனுக்கு சமமானவன் தான் என்பதை சொல்லி ஊக்குவித்தால் போதும்.

சிறுவர்கள் பலருக்கிடையே பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வாமை [non -compatibility] இருக்கலாம் ;அது தான் வெறுப்பையும் , கோபத்தையும் விதைத்து வேண்டாத நட்புவட்டங்களுக்கு இட்டு செல்லும் . அதனால் தான் பெற்றோரில் ஒருவர் படிக்கும்போது   அருகில் இருந்து முறைப்படுத்தி பயில வைத்தால் ,பயம் விலகி, புரிதல் அதிகமாகும்.. அதாவது ,நம் விரும்பும் கொடி ஒன்றை தோட்டத்தில் நட்டு வைத்து பக்கத்தில் ஒரு வலுவான குச்சியை நட்டு வைக்க கொடி அந்த  குச்சியின்   ஆதரவில் பற்றிப்படவற்கு ஒப்பான நிலை   தான் ஆரம்ப நிலையில் பயிலும் குழந்தைகள். பொதுவாகவே கண்காணிப்பு நல்ல பலன் தரும். இதை அறிந்தும் கூட குழந்தையின் அருகில் இருந்து மேற்பார்வை செய்ய ஆர்வம் இல்லை. பெற்றோருக்கில்லாத ஆர்வமும் அக்கறையும் ட்யூஷன் பயிலும்  இடத்தில் கிடைக்குமா? ட்யூஷன் வகுப்புகள் கோழிப்பண்ணைகள் போல இயங்குகின்றன. கோழிகளின் இரைச்சல் தான் கேட்கிறது. ஒரு ஆசிரியர் 30-40 பேரை அமரவைத்து [அதுவும் வெவ்வேறு வகுப்பு மாணவர்கள்]    என்னதான் பயிற்றுவித்து முன்னேற்றம் காண உதவுவார்? .

இவை ஒருபுறம் இருக்க சிறுவயதில் இருந்தே முறைப்படுத்த வேண்டிய அணுகுமுறைகளை புறக்கணித்துவிட்டு , திடீரென்று ஐயோ +2 வந்துவிட்டாயே ,அதைப்படி இதைப்படி , கூடவே கராத்தே பயில், சிலம்பம் கற்றுக்கொள் , ட்யூஷன் வைத்துக்கொள் என 6 இடத்தில் ட்யூஷன் . அவன் மனிதப்பிறவியா ? இல்லை ஏதாவது விலங்கா ? உங்களின் விருப்பங்களுக்கே இயங்கிக்கொண்டிருக்க? சரி அப்படியாவது உங்களுக்கு ஏதாவது தெள்ளத்தெளிவாகத்தெரியுமா ? ஒன்றும் தெரியாது -அவனைப்பார் இவனைப்பார், ஆபீசில்  அவர் சொன்னார், மேலதிகாரி சொன்னார், அட்டெண்டர் சொன்னார் என்று இன்ஜினியரிங் கல்லூரிக்கு தவம் இருக்கிறீர்கள் , பெற்றோர் டாக்டர் எனில் கேட்கவேண்டாம்  குடும்பத்துடன் மெடிக்கல் சீட் வேட்டையாட துவங்கி விடுகிறார்கள் . பையனோ / பெண்ணோ என்ன மன நிலைக்கு வருகிறார் ? எப்படியும் சீட் வாங்கிவிடுவார்கள் என்று +2 தேர்வில் கூட முறையான கவனம் செலுத்தாமல்ஏ னோ தானோ . வகையில் தேர்வு எழுதி 72% ஸ்கோர் .இந்த ஏனோ தானாவுக்கே 72% என்பதை உலகமே அறிந்து கொண்டு                              [உரியவர்கள் அறிந்துகொள்ளவில்லை] நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்து விட்டது. நமது நடைமுறை வேறாயிற்றே , அவரைப்பிடி இவரைப்பிடி என்று முருகக்கடவுள் போல் உலகை வலம் வருகிறோம். என்ஜினீயர் , டாக்டர் ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று திரிகிறோம். எந்த கல்வித்திட்டமும் உரிய முறையில் பயில மகத்தான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன;நமக்கு தம்பியுனிவர்சிட்டி அண்ணாயுனிவர்ஸிட்டி  இதுதான் தெரியும் . ஆனால், அனைத்தும் அறிந்தவர் போல் கிணற்றுத்தவளையாக இருப்போம். 

சரி என்னென்ன பாடப்பிரிவுகளில் என்ன வகையான வாய்ப்புகள், எங்கே உள்ளன என்று அறியும் முன் ஒன்றை நினைவில் இருத்துங்கள் பெற்றோர் மற்றும் பயில்வோரே .

எதைக்கற்றாலும், ஆழ்ந்து புரிந்து பயிலுங்கள், நுனிப்புல் மேயாதீர்கள். ஆங்கிலத்தில் ஒரு கோட்பாடாகவே சொல்லப்படுவது "IT DOES NOT MATTER WHAT YOU LEARN; BUT, HOW YOU LEARN MATTERS " அதாவது என்ன கற்றீர்கள் என்பதைவிட எவ்வாறு கற்றீர்கள் என்பதே தகுதியை நிர்ணயிக்கும் . இது எல்லா பணிகளுக்கும் பொருந்தும் .

தொடரும் அன்பன் ராமன் 

 

1 comment:

  1. Golden statement
    It does not matter what you learn
    But how you learn matters
    Venkataraman

    ReplyDelete

SALEM SUNDARI- 29

  SALEM SUNDARI- 29 சேலம் சுந்தரி -29 உங்கள தெரியாம திருச்சியில் யார் இருப்பாங்க அல்லது உங்களுக்கு தெரியாதவங்க திருச்சியில் இ...