Tuesday, October 10, 2023

CINE MUSIC -10, STRATEGIES- 7

 CINE MUSIC -10, STRATEGIES- 7

திரை இசை -10, உத்திகள் -7

பியானோ

தமிழ் நாட்டின் இசை மரபுகளில் இல்லாத மீட்டல் [நரம்பு கருவி] பியானோ எனில் மிகை அல்ல. எனினும் பல்வேறு கால கட்டங்களில் இசை அமைப்பாளர்கள் பியானோவை ஒரு கம்பீர வசீகரமாகவே உபயோகித்து வந்துள்ளனர் . ஆனால் பெரும்பாலும் அது ஒரு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே பல பாடல்களில் அமைந்திருந்தாலும், பலதரப்பட்ட மனோ நிலைகளிலும் துணிச்சலாக பிரயோகித்தவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் . இதில் மற்றுமோர் சிறப்பு யாதெனி;ல் பியானோ இடம்பெற்ற எந்தப்பாடலும் ரசிகர்களைக்கவர தவறியதே இல்லை; இது அந்தக்கருவியின் நாதம் விளைவிக்கும் தாக்கம் எனக்கொள்ளலாம் .

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் [ மிஸ்ஸியம்மா -1955] பாடல் தஞ்சை ராமையா தாஸ் , இசை எஸ்.ராஜேஸ்வரராவ் -குரல்கள் : .எம் ராஜா , பி.சுசீலா

ஹோம் ட்யூட்டர்களாகவும் , பள்ளியில் ஆசிரியர்களாகவும் ஜெமினி -சாவித்திரி , மாணவியாக ஜமுனா .பங்கு பெற்ற, நாகி ரெட்டியாரின் படம் .  ஜெமினி, ஜமுனாவிற்கு பாட்டு சொல்லித்தர கோபமுற்ற சாவித்திரி எல்லாம் அரங்கேறும் . ஒரு அற்புதமான பாடல்.  பியானோ ஒலியின் நாத ரீங்காரத்தில் AM ராஜா தனது மயக்கும் வசீகர குரலில் பாட , சுசீலா பின் தொடர எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பியானோ துவக்கத்திலும் , பின்னர் அவ்வப்போதும் தலை காட்ட ஒரு ரம்யமான பாடல் . பாடல் வரிகள் முற்றிலும் பண்பின் சிகரமாக ஒலிப்பது கவியின் கம்பீர மாட்சிமை. . அந்தக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த குதூகலம். கேட்டு மகிழ இணைப்பு இதோ:  https://www.google.com/search?newwindow=1&sca_esv=572078159&sxsrf=AM9HkKlpljNQGniKPLhtLlQQvDFX6KYbBA:1696927790820& MISSIYAMMA

2 உன்னை ஒன்று கேட்பேன் [புதிய பறவை -1964 ] கண்ணதாசன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி பி.சுசீலா

ஒரு கப்பல் விருந்தில் பாடப்பட்ட /பாடச்சொல்லி பாடவைக்கப்பட்ட பாடல் . அதை கோடிட்டு காட்டும் வரிகள் என்ன பாடத்தோன்றும் , தனிமையில் கானம் , சபையிலே மௌனம் , உயிரெல்லாம் பாசம், அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை , என்னை பாட சொன்னால் என்ன பாடத்தோன்றும்.? இது ஒரு இசை அதகளம் அதிலும் மேலைநாட்டுக்கருவிகளின் ஒலி ஒருங்கிணைப்பு  ஒரு அஸ்வமேதயாகம் எனில் சாலப்பொருந்தும். குரல், இசை, நடனம், நடிகர்தம் பாவம் என அனைத்திலும் முத்திரை பதித்த இப்படிப்பட்ட பாடல்கள் இனி நம் காலத்தில் கிடைக்குமா? பியானோவின் நளின இசையை மறுத்துவிட்டு இப்பாடலை ரசிக்க இயலாது. சரி கிடைத்திருப்பதை ஆழ்ந்து ரசிப்போம். பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0

3 என்ன என்ன வார்த்தைகளோ [வெண்ணிற ஆடை 1965] கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி.சுசீலா.

ஒரு பிறந்தநாள் விழாவில் நாயகி பாட, படத்தின் நாயகன்[அவன் காதலன் அல்ல ] பியானோ இசைப்பதாக வடிவமைக்கப்பட்ட பாடல். நாயகியோ அந்த இளைஞனை மனதில் நிறுத்தி காதலை பூடமாக அறிவிக்கும் வரிகள். "சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை . நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன் " மலர்ந்தால் அங்கு மலர்வேன், இல்லை பனி போல் நானும் மறைவேன் "  பாவம் இளைஞன் அவன் அவளைக்காதலிக்கவே இல்லை. பணக்கார குடும்பச்சூழல் என்பதால் வீட்டில் பியானோ . இந்தப்பாடலில் பியானோ பெரும் பங்கு வகித்துள்ளதை நன்கு உணரலாம். மேலும் பியானோவுக்கே முக்கியத்துவம் தரும் வகையில் இடை இசை அமைந்துள்ளது . பியானோ வாசிக்கும் க்ளோசப்  கைகள் எம் எஸ் வி அவர்களின் கைகள் என்று ஒரு தகவல் உண்டு. எப்படியானாலும் ஒரு அற்புதப்பாடல். சென்றபாடலில் கேட்ட அதே குரல் இந்த பாடலில் ஜெயலலிதாவை பிரதிபலிப்பதை நன்கு உணரலாம். 1965ல் இப்படி ஒரு இசைக்கோலம். .பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=youtube+ENNA+ENNA+VAARTHTHAIGALO++video+song+download&newwindow=1&sca_esv=5720

4 எனக்கொரு காதலி இருக்கின்றாள் [முத்தான  முத்தல்லவோ]  1986-- வாலி, விஸ்வநாதன் , விஸ்வநாதன் எஸ் பி பாலசுப்ரமணியம் .

ஒரு இசை அமைப்பாளரும், ஒருவயலின் இசைத்துப்பாடும் குரலில்  பின்னணிப்பாடகரும் பங்கு பெரும் பாடல். திரையில் இசையமைப்பாளராக தேங்காய் சீனிவாசன் , பாடகராக ஜெய் கணேஷ் . தேங்காய் எம் எஸ் வியின் உடல் மொழியை வெளிப்படுத்தக்காணலாம். மேலும் எம் எஸ் வி பிரத்யேக இசைக்கோலங்களை அள்ளித்தெளிக்க, திடீரென்று ஸ்வரம் பாடுவதுஸ்வரத்திலேயே சிரிப்பது உடனே பியானோவில் விரல்களின் நர்த்தனம் என ஒரு இசைப்பின்னல் இது. எம் எஸ் வி சற்றும் சுணங்காமல் தனது பிரயோகங்களை வாரி வழங்கியுள்ளார். அதற்கேற்றாற் போல் " என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்  என்றும்  மெல்லிசைஆகும், என்று ஒரு பிரகடனம். மொத்தத்தில் எம் எஸ் வி சொல்லை வில்லாக வளைப்பார் . இப்பாடலில் , தமிழோசை ,இனிதாக, எதிர்காலம் என்ற சொற்களை எவ்வளவு காலப்ப்ரமாணம் கொடுத்து பாடியுள்ளனர் . இதோடு பியானோவின் கட்டுக்கடங்காத ஓட்டம்  பாடலுக்கு ஒரு பரிமாணத்தை கொடுக்கிறது இது ஒரு குதூகலப்பாடல்  பாடலின் இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=xwvbwBP7vJ8

5 அவன் நினைத்தானோ இது நடக்குமென்று [செல்வ மகள்-1967], கண்ணதாசன் எம் எஸ் வி , டி எம் எஸ்

இதோ சோகப்பாடலிலும் பியானோவை இசைத்து உணரவைப்பிழியும் உத்தி. படபடத்து இசைக்கும் பியானோ. சொல்லின் சோகத்தை குரலில் வடிக்கும் சௌந்தரராஜன்.காதலிக்கு திடீரென்று மணம் நிச்சயிக்க அதிர்ந்து போன காதலின் குமுறல் . ஜெய்சங்கர் ராஜஸ்ரீ இணை. ஜி என் வேலுமணியின் படம் இசை உச்சமாகத்தான் உலவிய கால கட்டம். எனினும் அற்புதமாக அமைந்த பியானோ நர்த்தனம். பாடலுக்கு இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=wBD9aKaUj0s

பிற உத்திகள் தொடரும்

அன்பன்  ராமன்

2 comments:

  1. பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    அந்தப் பாட்டிலும் பியானோ உபயோகம் காணலாம்.
    என்ன என்ன வார்த்தைகளோ பாட்டில் பியானோ ……மிகப. பிரமாதம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. ஒரு தொழில் முறை திரை விமர்சகர் கூட இந்த அளவுக்கு திரை இசையை ரசித்து, ரசிகர்களுக்கும் அந்த இசை அமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவார் என்பது ஐயமே. சி. ராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...