Tuesday, December 5, 2023

LEARNING A LANGUAGE

 மொழி அறிதல்

மொழி அறிதல் எனில் ஏதோ ஆங்கிலம் கற்பது என்றே பலரும் நினைக்கிறார்கள். இதுதான் அடிப்படை பலவீனம். இதனை வியாபார வாய்ப்பாக உருவாக்கி முளைத்ததுதான் ஆங்கில மீடியம் பள்ளிகள். இவை வெகு சிறப்பாக கல்லா  கட்டுவதை நாம் அறிவோம் . ஆயினும் விடாது கருப்பு என்பது போல அந்த பள்ளி நிர்வாகிக;ளை விடாது துரத்தி பெரும் தொகைகளை கைகொடுத்து LKG யில் இடம் பிடித்து அப்பாடா இனி +2 முடியும் வரை கவலை இல்லை என்று பேருவகை கொள்ளும் பெற்றோரே , +2 மட்டும் அல்ல அதன் பின்னரும்  விடாது கருப்பு என்பது போல "ஆங்கிலம்" நமது வாரிசுகளை துரத்துவதையும் 15 ஆண்டு  ஆங்கில மீடியம் பயிற் சி க்குப்பின்னும் இயல்பாக சரளமாக ஆங்கிலம் பேச வராமல் திணறுவதை பல இடங்களில் காணலாம்.   சரி 1960 களில் தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் ஆங்கில மீடியம் அரிதாக 1, 2 பெரு நகரங்களில் வெளிமாநில குழந்தைகளுக்கென செயல் பட்டன. ஏனைய அனைத்துக்குழந்தைகளும் தமிழ் வழிக்கல்வி திட்டப்படி பயின்றோரே. மேலும் ஆங்கில மொழியின் எழுத்துக்கள்[ A ,B ,C ,D ] அன்றைய I FORM எனும் 6ம் வகுப்பில் தான் அறிமுகம் செய்வர் . அதுகூட ஒரு பாடம் மட்டுமே மீடியம் அல்ல, இப்படி XI ம் வகுப்பு [SSLC ] முடிய 6 ஆண்டுகள் தான் ஆங்கிலம்  பயில்வர்.

பலரும் கல்லூரிப்படிப்பை தொடரும் வசதியோ வாய்ப்போ இன்றி,வேலை தேடி பல நிறுவனங்களில் பணி அமர்வர். அவற்றில் பலர் உயர்பதவிகள் வரை மேம்பாடடைந்தனர்.  எனினும் அவர்களின் ஆங்கில ஆளுமை [எழுத்தும் பேச்சும் ] இன்றைய ஆங்கில MA பட்டதாரிகளை விட வெகு நேர்த்தியானது என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். .   இந்தப்புள்ளி தான், நம்மை சிந்திக்க வைக்கும் முக்கிய இடம். சுமார் 20 ஆண்டுகளாக ஆங்கில மொழியிலேயே திளைத்து ஊறிய ஒருவரால் வெறும் 6 ஆண்டுகள் பள்ளி நிலையிலேயே ஒரு பாடமாக மட்டுமே கற்ற ஒருவரை தர அடிப்படையில் எதிர் கொள்ள இயலாமல் திக்கு முக்காடுவது ஏன்?  இங்கு தான், ஒரு பெரும் சூக்ஷ்மம் குடிகொண்டுள்ளது.

அன்றைய மாணவர் ஆங்கில எழுத்தை உச்சரிக்கும் முன் தமிழ் மொழியில் நல்ல மொழி வளம் பெற்று அதன் பின்னரே ஆங்கில எழுத்துக்களை கற்க துவங்கினர் . அதனால் தமிழ் சொல்லின் பொருள் அறிந்த சிறுவனுக்கு அந்த பொருள் கொண்டு அதற்கான ஆங்கிலச்சொல்லை அடையாளப்படுத்தினால் எளிதாக வேற்று மொழியை பயில்வான் . இன்றைய LKG சிறுவனுக்கு தமிழே தெரியாத நிலையில் எவ்வாறு வேறு மொழியை கற்பான் ?அவனுக்கு எழுத்தில் தமிழும் ஆங்கிலமும் புது மொழிகளே அதனால் இரண்டையும் முறையாக பயிலாமல் தடுமாற்றம் தோன்றுகிறது. நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்தாயிற்று என்று ஒரே எகத்தாளம் வேறு. நேர்த்தியான சீருடை, டை, சாக்ஸ் , ஷூ , வாட்டர் பாட்டில் , பேனா, பள்ளியின் அடையாள அட்டை , பஸ் பயணம், பாக்கட் மணி இவைதான் சிறந்த கல்வியின் குறியீடுகள். அதற்கு எந்த விலையும் கொடுப்போம். பகவத் கீதையை பின் பற்றுவது இந்த ஆங்கிலக்கல்வி விஷயத்தில் தான் - ' கடமையைச்செய், பலனை எதிர்பார்க்காதே ' இதைபள்ளி  நிர்வாகிகள் அழகாக புரிந்து கொண்டு சிறப்பாக பஸ் வசதியுடன் அவ்வப்போது சுற்றுலா, அந்த விழா இந்த விழா என்று வசூலிக்க நாம் ஆந்தை விழி விழித்து  செல்வத்தைத்து றக்க  பின்னர் 3ம் வகுப்பில் இருந்து ட்யூஷன் ஆங்கிலத்திற்கும் சேர்த்து தான்.

ஆஹா, மொழி அறிதல் என்பது முதலில் தாய் மொழியில் துவங்காமல் எடுத்த எடுப்பில் ஆங்கிலம் என்று பாய்வது இம்மியும் பலன் தராது என்று உணர்க.

    நன்றி அன்பன்  ராமன்

1 comment:

  1. இப்போதுள்ள ஆங்கில ஆசிரியர்கள் Wren and Martin ஐ மாணவர்களுக்கு சொல்வார்களா?

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG 67

  LET US PERCEIVE THE SONG 67              பாடலை உணர்வோம் –67 கண்ணிலே நீர் எதற்கு ?   போலீஸ்காரன் மகள் , 1963,                    ...