Sunday, January 21, 2024

SEARCH, SEEK and CAPTURE

 SEARCH, SEEK and CAPTURE

தேடி நாடுங்கள் வசப்படும்

இது என்ன விவிலிய வாசகமா?                                                                    இல்லை, இதுவே கல்வியை கைப்பற்ற நினைக்கும் மனங்களுக்கு நான் தரும் வழி முறை.. இதை சொல்லும்போது ஏதோ வேலையற்றவன் உளறுகிறான் என்று சிலர்  சொல்லக்கூடும். அதில் உள்ள உண்மை என்பது முன்பகுதியில் உள்ள "வேலை  அற்றவன்" மட்டுமே பின்பகுதியில் வரும் உளறு கிறான் என்பது புரிதல் இல்லாமல் பேசப்படும் விமரிசனம்.

எந்த பொருளும் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின்னரே நம் வசப்படும் அவ்வாறிருக்க கல்வி மட்டும் மாறுபட்டதா என்ன? இதில் தேடுதல் என்பது, பல படிநிலைகள் கொண்டது. எடுத்த உடன் வசப்பட இது என்ன சினிமாக்காதலா? சினிமாவில் மட்டுமே 'நினைப்பது நடக்கும்'. நிஜவாழ்வில் நினைப்பது நடப்பது என்பது 'நினைப்பது என்ற நிலையைத்தாண்டி, முனைப்பது என்ற தீவிர முயற்சிக்கு மட்டுமே   அடிபணியும். 'அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற கோட்பாடு கல்விக்கும் பொருந்தும். இது என்ன பெரும் குழப்பமாக இருக்கும் போலிருக்கிறதே என்று திகைக்காதீர்கள். பின் வரும் கருத்துகளை நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். அப்போது புலப்படும் நான் என்ன சொல்கிறேன் என்பது.

எனது அடிப்படை கருத்து "தேடி நாடுங்கள் வசப்படும்'. .இதில் மூன்று சொற்கள் தேடி, நாடி -வசப்படும் என்பன.. கல்வியும் ஒருவகை செல்வம் தான் என்பதை ஏற்றுக்கொள்வோர்,   மேற்கொண்டு படியுங்கள். ஏனையோர் நேரத்தை இங்கு வீணடிக்காமல் வேறு வகைகளில் பொழுதைக்கழியுங்கள் அது நல்லது.

நாட்டமில்லாத எதுவும் நமக்கு உதவாது. எனவே கல்வி நமக்கு பயன்படவேண்டுமெனில் நாம் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் செலுத்திப்பயில வேண்டும். நான் சொல்வதன் சாரம் இது தான். முதலில் நாட்டம் கொள்ளுங்கள், நட்டம் ஒன்றும் இல்லை ; நாட்டம் வலுப்பட பரிச்சயம் அதிகமாக வேண்டும் பரிச்சயம் என்பது அடிக்கடி சந்திப்பதும் நீண்ட நேரம் தொடர்பில் இருப்பதும் தான். இது தானே நட்பின் அடிப்படை. இது தான் நாம் பயில/ பயில நினைக்கும் அனைத்து கலைகளுக்கும் ஏற்பட வேண்டிய நெருக்கம் [காதல் என்ற மன போதையும் இதே வகை தேடுதல், நாட்டம், பரிச்சயம் .நெருக்கம்  , புரிதல் என்ற பலபடிகளைக்கொண்ட ஈர்ப்பு தான் என்பது புரிந்திருக்குமே ] கல்வியும் அப்படித்தான் தேடுதல், நாட்டம், பரிச்சயம், நெருக்கம், புரிதல் சார்ந்த தாக்கம் ஏற்படுத்தும் தெளிவு என்று நன்றாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். என்ன ஒரு வித்தியாசம் காதல் என்ற மன மயக்கம் புற ஈர்ப்பினால் துவங்குவது, கல்வி என்பதற்கு ஈர்ப்பு நம் மனதில் நாமே ஏற்படுத்தவேண்டிய உந்துதல் என்ற உள்மன தாக்கமே ஈர்ப்பு என்ற நிலையை தோற்றுவிக்கும். ஆகா-- இவனே சொல்லிவிட்டான் என்று காதல் கீதல் என்று கிளம்பிவிடாதீர்கள். மன ஆதிக்கம் என்ற சுய விருப்பம் நமது பிடிக்குள் வரும் போதுதான் உங்களால் கல்வி நோக்கி மனதை செலுத்த முடியும்.. இந்த படி நிலையை, நான் விளக்கி, நீங்கள் நன்கு விளங்கிக்கொள்ளும்  முன் ஒன்றை தெளிவாக்குகிறேன் , காதல் குழப்பத்தில் முடியும் மனதில் புயலும் சூரா வளியும், கொந்தளிப்பும் ஏற்படும்; ஆனால் முறையான கல்வி, ஆழ்ந்த புரிதல், தெளிந்த மனம், தன்னம்பிக்கை, எதையும் எதிர்கொள்ளும் ஊக்கமும் ஆர்வமும் போன்ற தனிமனத மகோன்னதங்களை விதைத்து நம்மை கம்பீர நிலைக்கு உயர்த்தும். கம்பீரத்தை எட்ட முடியாத கல்வி உயிரற்ற சடலம் போன்றது, அதை யார் நாடுவர்.  எனவே கம்பீரம் மிக்க உயர்நிலையைப்பெற என்ன செய்ய வேண்டும் ?.   

கல்வியின் மீது ஒரு ஆழ்ந்த நாட்டம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்

கல்வி நோக்கி மனம் திரும்ப

1 உறுதியாக நம்புங்கள் -என்னால் இது முடியும், இதை நான் நிச்சயம் வசப்படுத்துவேன் என்று இறைவன் முன் வேண்டுகோள் வைத்து துவக்குங்கள். சைக்கிள் கராத்தே , எந்த விளையாட்டிலும் உடலில் அடிபடாமல் அதை வசப்படுத்தமுடியாது என்பது போல சிறு சிறு தடங்கல் களை மீறி  தான் வெல்ல முடியும். எந்த சிறு சருக்களையும் கண்டு துவளாதீர்கள்.

2 உள்வாங்கிப்பயில்வீர்

உள்வாங்கிப்பயில அமைதியான குளிர்ந்த காலை நேரம் அற்புதமான சூழல். உங்கள் கல்விநிலைக்கு ஏற்ப அதிகாலையில் எழுதலை கைக்கொள்ளுங்கள். இறை வணக்கம் செய்து பயிலத்துவங்குங்கள். உல் வாங்குதலும் படிப்படியாக புரிதஜர் அதிகாரிப்பதையும்   நீங்களே உணர்வீர்கள்.

3 மனதில் கிளர்ந்தெழும் புத்துணர்ச்சி

தொடர்ந்து ஒரு 3 வார செயல்பாட்டில் உங்கள் மனதில், தன்னம்பிக்கையும், உத்வேகமும் ஏற்படுவதை உணரலாம்.

4 அதிகாலைபடித்து உணரும் கல்வி உங்களை மிக எளிதாக செம்மைப்படுத்த கல்வியில்நீங்களே பந்தயக்குதிரை போல் உணர்வீ ர்கள்.

5 இப்போது பாடங்கள் சுமை குறைவதையும் குறுகிய நேரத்தில் அதிகம் புரிந்துகொள்ள இயல்வதையும் நீங்களே ருசிக்க மற்றும் ரசிக்க , இனி கல்வி உங்களை நோக்கி பயணிக்கும், ஒரு செல்லப்பிராணி போல் உங்களுடன் உறவாடும். நீங்கள் அழைத்தவுடன் ஓடி வரும் உங்களோடு ஐக்கியப்படும். இதுவே உங்கள் அணுகுமுறை என்று பின்பற்றுங்கள் நான் சொன்ன -தேடுங்கள் நாடுங்கள் வசப்படும் என்ற உண்மையை நீங்களே உணர்வீர்கள்.

கல்வியிடம் உண்மையான  அன்பு வையுங்கள் அது உங்களைப்பற்றிக்கொள்ளும்.

வாழ்த்துக்கள்

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. காலையில் எழுந்ததும் படிப்பு
    மாலை முழுவதும் விளையாட்டு என பழக்கப்படுத்திக்கொண்டாலே தன்னைத் தேடிவரும் கல்வி

    ReplyDelete
  2. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் ப்ரொஃபஸர் சொன்னது போன்ற மன உந்துதலை கொடுக்க கொடுக்க, நாம் கற்கும் அந்தக் கல்வியின் சுவை தெரிய தெரிய, கல்வி என்பது நல்ல பசும்பாலில் சர்க்கரை சேர்த்து செய்த திரட்டுப்பால் போன்ற சுவையை தர ஆரம்பித்துவிடும்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...