Tuesday, May 21, 2024

POSSESSIVENESS

POSSESSIVENESS                                  

தனது என்னும் உரிமைகோரல்

Possessiveness  என்பதுPOSSESSIVE என்ற தனது என உரிமைகொண்டாடும் பண்பின்  பெயர்ச்சொல் . இது ஒரு மனிதப்பண்பு என்றே அறியப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் இந்த செயல் பாடு மனிதத்தன்மை அற்ற இழி செயலாகவே பார்க்கப்படுகிறது. .

-ஏன் எதற்கு, எவ்வளவு , எப்போது வரை போன்ற எந்தக்கேள்விக்கும் விடை தராத ஒரு குணம் உண்டெனில் அது தான் Possessiveness  எனப்படும் உரிமை கோரல் . இதன் ஆழ்ந்த கூறுகளை ஆராய்ந்தால் சீ இவர்கள் மனிதர்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று என்று உணர்கிறோம்.

எத்துணையோ தருணங்களில் இதன் கொடூர முகத்தைக்காணலாம். உதாரணமாக புறப்பட இருக்கும் பஸ் அதில் ஆங்காங்கே சிலர் அமர்ந்திருக்க ,சரி நிழல் பகுதியில் அமராலாம்  என்று பார்த்தால். ஒருவர் தனது அருகில் உள்ள இடத்தில் துண்டைப்போட்டு வைத்துக்கொண்டிருக்க ,ஐயா துண்டை எடுங்க என்றால் ஆளு வராங்க என்று புளுகுவது அன்றாட நிகழ்வு..

இது ஒரு மனோவியாதி .யாரேனும் தெரிந்தவர் வந்தால் இருக்கட்டுமே என்ற முன்னேற்பாடு.. சோகம் என்னவெனில் நீண்ட தாமதத்திற்குப்பின் வந்தவன் "எடுய்யா துண்டை , இப்ப எடுக்குறியா என்ன சொல்ற ?என்று உரத்த குரலில் அலறியதும் அடங்கி முடங்கி தனது என்ற உரிமை கோரலை வேறொருவர் செயல் படுத்தி இடம் பிடிக்கிறார். முதலில் வீராப்பு பேசியவர் இப்போது வீர 'ஆப்புக்கு' பயந்து தனது இடம் என்பதை விட்டுக்கொடுத்து தனது உடல் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருவது எவ்வகை உரிமைகோரல் ? எனக்கு புரியவில்லை.

குழாயில் தண்ணீர் பிடிக்க குடங்களை வரிசையில் வைப்பது ஒரு சம்பிரதாயம். ஆனால், குடங்களை ஏன் வைக்கிறார்கள்? தனது turn என்னும் இடம் குறித்து முன் பதிவு செய்துகொள்வதே .

சரி இது இன்னார் குடம் என்று என்ன அடையாளம் உள்ளது? ஓட்டை வாளி ,உடைந்த சட்டி இவைகள் கூட இடம் பிடித்து வைக்கும் பிரதிநிதிகளே. ஒருவருக்கு உடல் நலம் குன்றி காய்ச்சல், ,இருமல் , நடுக்கம் எது இருந்தாலும் "காத்துக்கிட" என்பது மனிதநேயம் சார்ந்ததா? இந்த அவலத்தின் துவக்கம் எனது இடம் என்ற 'உரிமைகோரும் possessiveness  அன்றி வேறென்ன?

இந்த "POSSESSIVENESS" வெள்ளிடை மலை என தெரிவது பொது இடங்களாகிய தண்ணீர் குழாய், ரேஷன் கடை, ரயில்வே முன்பதிவு வரிசை, மருத்துவமனை டோக்கன் பெறும் வரிசை இவைகளே.. கோயிலில் பொங்கல், சுண்டல் , தீர்த்தம் சடாரி போன்ற பிரசாதங்களை பெற முண்டி  அடுத்து  கிழவியை கீழே தள்ளி அவள் முட்டிமேல் ஏறி நிற்க , கீழிருந்தபடியே கிழவி  "கடன்காரா " என்று கூவ, பாட்டி ஓரமாப்போய் உக்காரு என்று அறிவுரை.

 நீ, கீழ இறங்குய்யா கால் மேலே ஏறி மிதிச்சுக்கிட்டு டான்ஸ் ஆடுறியே உனக்கு ஏதாவது இருக்கா? என்று சபித்தாலும் , எனது இடம் என்பது போய், , எனக்கு முதலில் என்ற priority shift உண்ணும் பொருட்களுக்கே என்பதை கவனிக்கவேண்டியுள்ளது.

அவ்விடத்தில் Q முக்கியமல்ல , சீக்கிரம் தின்னும் IQ  வே முக்கியம் ஆகா என்ன ஒரு எதிர்கொள்ளும் தகவமைவு [ADAPTATION]? நம்மை விட வில்லன்கள் எவரும் இருக்க முடியாது.

இவ்விடத்தில் ஒரு சிறு விலகல் .

வில்லன் என்ற சொல், இருபாலினத்திற்கும் பொதுவானது பலரும் பெண் பாத்திரத்தை வில்லி என்றழைக்க எங்கிருந்து பயின்றனர்??

எப்படி பீடாவும் , பீடியும் பாலினச்சொற்கள் இல்லையோ அது போன்றே வில்லன் என்ற சொல்லும் பொதுவானதே. ஆனால் தமிழில் மாய்ந்து மாய்ந்து வில்லி வில்லி என்றெழுதி தங்களது மேதாவிலாசத்தை பறைசாற்றும் விமரிசகர்கள் விமரிசையாக காலம் தள்ளுவதை என்ன சொல்ல?. இந்த அழகில் தமிழில் எந்தக்கருத்தையும் தெளிவாகச்சொல்லலாம் என்று சொல்லிக்கொண்டே வில்லன் என்ற ஆங்கிலச்சொல்லை ,சற்று ஒலியை  மாற்றி  வில்லி என்று தமிழில் எழுதிவிட்டதாக பெருமிதம் கொள்வது அறிவுக்குருடர்களின் ஓங்கியுயர்ந்த சுயமரியாதை .

இவ்வனைத்தையும் மீறிய "தனது எனும் உரிமை கோரலின் கொடூர முகம் " ஒன்று உண்டு எனில் அதுவே தனது மருமகள் என்  மகனை என்னிடம் இருந்து முற்றாக கைப்பற்றுகிறாள்" என்று கற்பனை செய்துகொண்டு மருமகளை எதிரிபோல் பார்க்கும் குணம்.

. எவ்வளவு காலத்திற்கு ஒருவன் தாயின் நிழலிலேயே முடங்கி இருப்பான்?  அவனுக்கும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பல்லவா ? அவை, உடல், மனம் . மானம், அறிவு, வாதிடும் திறன், மற்றும் ஹார்மோன்களின் தாக்கம் இவ்வனைத்தும் .  ஒரு ஆண் மகனை வடிவமைக்கின்றன.

. அவ்வாறிருக்க மூன்று வயதில் " அம்மா --மிட்டாய் வாங்கித்தாங்க " என்று கேட்டவனாகவே  , இருபத்துமூன்று வயதிலும் எதிர்பாக்கும் தாய் , அவள் தான்   இன்னும் வளரவே இல்லை என்பதையும் அவளால் வெகு விரைவில் மகனின் அமைதியும் ஆரோக்கிய வாழ்வும் நிலை                     குலை யப்போகின்றன என்பதை உணராத பேதையாக உலா வருகிறாள் இது போன்ற உரிமைகோரல் என்பது ஒரு வகை மனோ வியாதியாகவே கருத்தப்படவேண்டிய நிலை.. ஆக POSSESSIVENESS என்ற நிலைப்பாடு முக்கிய தருணங்களில் தொடர்புடைய பலரின் அமைதியை குலைக்கும் பேராற்றல் உடையது என்பது கவலையளிப்பது.

.ஆசா பாசங்களை எல்லைக்குள் வைக்க வேண்டும்    என்ற கோட்பாடு எவ்வளவு நன்மை தருமோ அது போன்றே 'தனது எனும் உரிமைகோரல்" அடக்கி வைக்கப்படாவிட்டால் "தனது"உரிமையே கூட பறிபோய்விடக்கூடிய அபாயம் தவிர்க்கவொண்ணாதது   என்ற இடத்தை அடைந்துவிடும்.

 மக்கள் இதை சிந்தித்து உணர வேண்டும். எனது பார்வை தவறெனில் மன்னிப்பீர்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...